Type Here to Get Search Results !

TNPSC JULY CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES -UNIT 3 -GROUP 1 GROUP 2




NEW  AUGUST 2020 PDF-TNPSC SHOUTERS  :

NEW RELEASED JULY 2020 PDF-TNPSC SHOUTERS  PDF

NEW RELEASED JUNE 2020 PDF-TNPSC SHOUTERS PDF
அரசு திட்டங்கள் :2020

TNPSC JULY CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES -UNIT 3 -GROUP 1 GROUP 2

  1. உத்தர பிரதேச மாநில அரசானது COVID–19 தொற்றுடையோரைத் தனிமைப்படுத்தும் பிரிவுகளாக இரயில் பெட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மாவ் சந்திப்பில் COVID–19 பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. COVID–19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்கென மாற்றியமைக்கப்பட்ட 5,231 இரயில் பெட்டிகளை, இந்திய இரயில்வே, மாநிலங்களுக்கு வழங்கத்தொடங்கியுள்ளது. தற்போதுவரை, உ.பி, தில்லி, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் ம.பி ஆகிய 5 மாநிலங்களுக்கு, COVID–19 சிகிச்சைக்கான 960 இரயில் பெட்டிகளை இந்திய இரயில்வே அனுப்பியுள்ளது.
  2. IIT–பம்பாயைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் இணைந்து, ‘துருவா’ என்ற உள்நாட்டு ஏற்புச்சில்லை (Receiver Chip) உருவாக்கியுள்ளனர். இந்தச்சில்லை, திறன்பேசிகள் மற்றும் வழிகாட்டு சாதனங்களில், இந்திய நாட்டுக்குள் இருப்பிடங்களையும் வழிகளையும் கண்டறிய பயன்படுத்தலாம். ஒரு நபரின் இருப்பிடத்தை துல்லியமாக கணிப்பதற்காக, இந்தியாவின் NAVIC குழு மற்றும் அமெரிக்க நாட்டின் GPS ஆகியவற்றிடமிருந்து இது சமிக்ஞைகளைப் பெறும்.
  3.  சீனா தனது ‘BeiDou’ வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் கடைசி செயற்கைக்கோளை லாங் மார்ச்–3B ஏவுகலத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த BDS அமைப்பு அமெரிக்காவின் பிரபலமான GPS அமைப்புக்கு போட்டியாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது. தென்மேற்கு சீனாவில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. சீன மொழியில், “Big Dipper” என்று பொருள்படும் ‘BeiDou’ குடும்பத்தில் இது 55ஆவது இடத்தில் உள்ளது.
  4. உலகெங்கிலும் பொதுச்சேவையில் ஈடுபடும் மக்களை கெளரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 23 அன்று ஐ.நா பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2002 டிச.20 அன்று, ஐ.நா பொது அவையானது ஜூன்.23ஆம் தேதியை ஐ.நா. பொதுச்சேவை நாளாக அறிவித்தது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாளை அங்கீகரிப்பதற்கும், இளையோரை பொதுத்துறையில் தங்கள் தொழிற்முறை வாழ்வை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்குமாக கடந்த 2003ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை விருதுகளையும் ஐக்கிய நாடுகள் அவை நிறுவியது.
  5. ஐ.நா அவையின் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் சேரப்போவதாக சீனா சமீபத்தில் அறிவித்தது. சீனாவின் சட்டப்பேரவை இந்த ஒப்பந்தத்தில் சேருவது குறித்த முடிவை எடுக்க வாக்களித்தது. ஒப்பந்தத்தின்கீழ், உறுப்புநாடுகள் பன்னாட்டளவில் தாங்கள் மேற்கொள்ளும் ஆயுத பரிமாற்றங்கள் பற்றிய பதிவுகளை வைத்திருத்தல் வேண்டும். மனிதவுரிமை மீறல்களில் பயன்படுத்தக்கூடிய எல்லைதாண்டிய ஆயுத விநியோகங்கங்களையும் உறுப்பினர்கள் மேற்கொள்ளக்கூடாது. முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் சேர அமெரிக்க ஐக்கிய நாடுகள் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
  6. COVID–19 தொற்றுநோய்க்கு இடையில் தனது நாட்டின் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய முதல் ஐரோப்பிய நாடாக செர்பியா மாறியுள்ளது. தொடக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தல், தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், COVID–19 அச்சம் காரணமாக முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது வாக்குப்பதிவு குறைவாகவே காணப்பட்டது. தற்போதைய அதிபர் அலெக்ஸாண்டர் வுசிக் தலைமையிலான ஆளும் பழமைவாதக்கட்சி நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  7. இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அண்மையில், இராஜஸ்தானில், ‘இந்திரா ரசோய் யோஜனா’ தொடங்கப்போவதாக அறிவித்தார். இத்திட்டம், மாநிலத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒரு நாளைக்கு இருமுறை சலுகை விலையில் தூய்மையான & சத்தான உணவை வழங்க முற்படுகிறது.  இந்திரா ரசோய் யோஜனாவை (இந்திரா சமையலறை திட்டம்) செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் `100 கோடி நிதியை அம்மாநிலம் செலவிடவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு, உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்படும்.
  8.  உலக ஒலிம்பிக் நாள் அல்லது பன்னாட்டு ஒலிம்பிக் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.23 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தற்கால ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 1894 ஜூன்.23 அன்று தொடங்கியதை நினைவுகூரும் வகையில், இந்தச் சிறப்பு நாள், கடந்த 1948’இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நடப்பாண்டில் (2020) கொண்டாடப்பட்ட இந்நாளின்போது, ‘Stay Healthy, Stay Strong, Stay Active with the #Olympicday Workout On 23 June’ என்ற தலைப்பின்கீழ், உலகின் மிகநீண்டநேர (24 ம.நேரம்) டிஜிட்டல் வழியிலான ஒலிம்பிக் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  9. வானியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, ‘HIP 67522 b’ என்ற புறக்கோளை (exo– planet) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கண்டிராத இளவயது வெப்ப வியாழனாக இந்தப் புறக்கோள் தோன்றுகிறது. சுமார் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நன்கு அறிந்த நட்சத்திரத்தை இது சுற்றிவருகிறது. இதன் பொருள் என்னவெனில், இந்த வெப்பமான வியாழன், சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்தான் உருவாகியிருக்கவேண்டும் என்பதாகும். ஏற்கனவே கண்டறியப்பட்ட வெப்பமான வியாழன்கள் அனைத்தும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என்பதால், இது இளம் வெப்பமான வியாழனாக கருதப்படுகிறது.
  10. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, அண்மையில், ‘YUKTI 2.0’ என்ற பெயரில் ஒரு தளத்தைத் தொடங்கினார். ‘Young India combating COVID with Knowledge, Technology and Innovation’ என்பதன் சுருக்கந்தான் YUKTI. முன்னதாக, YUKTI தளத்தை கடந்த 2020 ஏப்ரல் 11 அன்று அமைச்சர் தொடங்கிவைத்திருந்தார். புத்தாக்க யோசனைகளுக்கான இணையமுறை வைப்பகமாக இந்த 2.0 தளம் செயல்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் இது உதவும்.
  11. உலகில் பல்வேறு பொருளாதார நிலைகளில், வாழ்க்கைச்செலவு அளவிலுள்ள வேறுபாடுகளை சமன் செய்வதற்கான பன்னாட்டு ஒப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2017ஆம் குறிப்பாண்டிற்கான புதிய வாங்கும் திறன் சமநிலைகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலகின் மொத்தப் பொருளாதாரமான $119,547 பில்லியன் டாலரில் 6.7% (8051 பில்லியன்), இந்தியப்பொருளாதாரமாகும். சீனா - 16.4%, அமெரிக்கா - 16.3%. உலக அளவில் மொத்த மூலதனத்தை ஏற்படுத்துவது, தனிநபர் நுகர்வு ஆகியவை, வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் உள்ளது.
  12. H1 B, H2 B, J, L மற்றும் பிற தற்காலிக பணி உரிமங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தார். வெள்ளை மாளிகையின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த இடைநீக்கம் எதிர்வரும் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இந்தத் தற்காலிக விசா திட்டங்கள் மூலம் கூடுதல் பணியாளர்கள் நுழைவதென்பது, COVID-19 நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சேதங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு, வேலைவாய்ப்புகளின் வழியாகவும் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் அறிவித்துள்ளார்.
  13. இரஷ்யா-இந்தியா-சீனா (RIC) முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மெய்நிகராக நடத்தினார். இதில், இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கலந்துகொண்டனர்.  லடாக்கில், சமீபத்தில், தங்கள் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப்பின், இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மெய்நிகராக சந்திப்பது இதுவே முதல்முறையாகும். ஜூன்.24ஆம் தேதியன்று, பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், இரஷ்யாவில் நடந்த வெற்றி அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
  14. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஜூன்.23ஆம் தேதியை பன்னாட்டு கைம்பெண்கள் நாளாக ஐ.நா அவை கடைப்பிடித்து வருகிறது. “Invisible Women, Invisible Problems” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். மரபுரிமைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் சம ஊதியம் ஆகியவை கைம்பெண்களுக்கும் கிடைக்கவேண்டியதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்களின்படி கைம்பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா அவை, அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.
  15. ஜப்பானிய மீத்திறன் கணினியான, ‘புகாகு’ அண்மையில் உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினிகள் இடம்பிடித்த ‘முதல் 500’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இது மேம்பட்ட RISC எந்திர -ங்களின் (ARM) சில்லுத்தொகுதிகளால் இயக்கப்படுகிறது. ARM அடிப்படையிலான ஒரு மீத்திறன் கணினி, இப்பட்டியலில் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது என்பதையும் இது குறிக்கிறது. அதைத்தொடர்ந்த இடங்களில் IBM நிறுவனத்தின் ‘சம்மிட்’ மீத்திறன் கணினியும் IBM’இன் சியரா மீத்திறன் கணினியும் உள்ளன.
  16. புது தில்லியின் சத்தர்பூரில் அமைக்கப்பட்டுள்ள 10000 படுக்கைகள்கொண்ட COVID-19 பராமரிப்பு மையத்தின் மைய முகமையாக இந்தோ - திபெத்திய எல்லைக்காவல்படை (ITBP) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தேவையான மருத்துவர்கள் & பிற மருத்துவ வல்லுநர்கள் குழுவை வழங்குவதற்காக, ITBP’ஐ அதன் மைய முகமையாக உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த வாரம் ஈராயிரம் படுக்கை வசதியுடன் செயல்படுத்தப்படவுள்ள இம்மையம், விரைவில் 10000 படுக்கைகளுடன் முழுதாக செயல்படும். இது நாட்டின் மிகப்பெரிய COVID-19 பராமரிப்பு மையமாகும்.
  17. உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் வானூர்தி நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறிவிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிராவஸ்தி, கபிலவஸ்து, லும்பினி போன்ற பெளத்த பண்பாட்டு தலங்களின் அருகே குஷிநகர் (இதுவும் பெளத்த பண்பாட்டு தலந்தான்) அமைந்திருப்பதால், இதனை பன்னாட்டு வானூர்தி நிலையமாக அறிவித்திருப்பது, வானூர்தி பயணிகளுக்கு பெரிதும் பயனளிப்பதுடன், இந்தப் பிராந்தியத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும்.
  18. ஐ.நா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கருத்துப்படி, ஆளில்லா விமானங்கள் மூலம் பாலைவன வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின்கீழ், மத்திய வேளாண் அமைச்சகத்தின் வேளாண்மை, கூட்டுறவு & உழவர்நலத்துறையானது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்காக நுண்ணொளித் தெளிப்பானை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.  வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான ஆளில்லா வானூர்தி நடவடிக்கைகளுக்கு, நிபந்தனை விலக்களிக்க உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) மற்றும் சிவபுரி (மத்திய பிரதேசம்) ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
  19. மத்திய இணையமைச்சரான ஜிதேந்திர சிங், சமீபத்தில், ஜம்மு-காஷ்மீரில், ‘தேவிகா’ மற்றும் ‘புனேஜா’ என்ற 2 பாலங்களை மெய்நிகராக திறந்துவைத்தார். உத்தம்பூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 10 மீ., நீளமுள்ள தேவிகா பாலம், எல்லைப்புறச்சாலைகள் (BRO) அமைப்பால் சுமார் ஓராண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. இப்பாலத்தைக்கட்டுவதற்கு `75 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. தோடா மாவட்டத்தில், `4 கோடி செலவில் கட்டப்பட்ட ‘புனேஜா’ என்ற மற்றொரு பாலத்தையும் அவர் அப்போது திறந்துவைத்தார்.
  20. 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2020), வெளியுறவு அமைச்சகம், இந்த நாளை ஒரு சிறப்பு மெய்நிகர் நிகழ்வை ஏற்பாடு செய்து கொண்டாடியது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் 1.22 கோடிக்கும் அதிகமான கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
  21. மியான்மரில் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின் பிரிவுகள் A1 மற்றும் A3 ஆகியவற்றின் கூடுதல் மேம்பாட்டுக்கு, ONGC விதேஷ் நிறுவனத்தின் கூடுதல் முதலீடாக $121.27 மில்லியன் டாலர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தென் கொரியா, இந்தியா மற்றும் மியான்மரைச் சேர்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒருபகுதியாக, மியான்மரில் உள்ள ஷ்வே திட்டத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் 2002ஆம் ஆண்டு முதல் ONGC விதேஷ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான GAIL’உம் இத்திட்டத்தின் மற்றுமொரு முதலீட்டாளர் ஆகும். $722 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2019 மார்ச் 31 வரை இந்தத்திட்டத்தில் ONGC விதேஷ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
  22. 15,000 கோடி மதிப்புள்ள கால்நடைப் பராமரிப்பு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பால்வளம், இறைச்சிப் பதனிடுதல் & மதிப்புக் கூட்டல் உட்கட்டமைப்பில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகளுக்கும், தனியார் துறையில் விலங்குத்தீவன ஆலையை நிறுவுவதற்கும் மிகத் தேவைப்படும் ஊக்கத்துக்கு கால்நடைப்பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம் வழிவகுக்கும்.உழவர் உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குறைந்தபட்சம் 10% முதலீட்டு நிதி பங்களிப்பு அளிக்கும் தனிப்பட்டத் தொழில்முனைவோர் ஆகியோர் இந்தத் திட்டத்தின் தகுதியான பயனாளிகளாக இருப்பர். தகுதியான பயனாளிகளுக்கு 3% வட்டித்தள்ளுபடியை இந்திய அரசு வழங்கும்.
  23. இந்தியாவிற்கு வெளியே உலகின் முதல் யோகா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, “விவேகானந்த யோகா பல்கலை (VaYU)” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆறாவது பன்னாட்டு யோகா நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடந்த மெய்நிகர் நிகழ்வின்போது இந்தப்பல்கலை கூட்டாக தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக இந்திய யோகா குரு Dr. H R நாகேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்திய யோகா பயிற்சிக்கு அறிவியல் & ஆராய்ச்சி அணுகுமுறைகளை இணைக்கும் திட்டங்களை வழங்கும்.
  24. மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்திய ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப்பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார்.இந்தத் தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையம், `43 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தில், பாலிமர் பதப்படுத்துதல் ஆய்வகம், பகுப்பாய்வு சோதனை ஆய்வகம், இரசாயனப் பகுப்பாய்வு ஆய்வகம் மற்றும் இயல்பாய்வு ஆய்வகம் ஆகிய நான்கு ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தொழில்நுட்ப மையத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான 50 அதிநவீன பாலிமர் சோதனை மற்றும் பதப்படுத்தும் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்மையம் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையால், ஓர் ஆராய்ச்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  25. டேராடூனில் அமைந்துள்ள வாடியா இமயமலை புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த (WIHG) ஆராய்ச்சியாளர்கள், லடாக் இமயமலையில் பாய்ந்தோடும் சிந்து நதியின் தொல்புவி தட்பவெப்பநிலை வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர். ‘WIHG’ என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். வண்டல் மற்றும் கீறல் படிவு காரணமாக நதி நிலப்பரப்பு உயர்ந்தபோது ஆய்வாளர்கள் அதனை ஆய்வுசெய்துள்ளனர். அவர்களின் ஆய்வு, புவிசார்வியல் என்ற தலைப்பில் இதழொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
  26.  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, விண்வெளித்துறையின்கீழ் வரும் ஒரு புதிய அமைப்புக்கு ‘IN-SPACe’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘Indian National Space Promotion and Authorisation Centre’ என்பதன் சுருக்கந்தான் ‘IN-SPACe’.  தனியார்களின் விண்வெளி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரு மைய தேசிய அமைப்பாக ‘IN-SPACe’ இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இப்புதிய நிறுவனம், தனக்கென ஒரு தலைவரையும் குழுவையும் கொண்டிருக்கும். மேலும், தன்னாட்சி முறையில் அது செயல்படும். மூன்று முதல் ஆறு மாதகாலத்திற்குள் ‘IN-SPACe’ நிறுவப்படும்.
  27. இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவியும், பெண்கள் கிரிக்கெட்டுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய மேலாண்மை இயக்குநருமான கிளேர் கானர், மேரிலேபோன் கிரிக்கெட் சங்கத்தின் (MCC) 233 ஆண்டுகால வரலாற்றில் அதன் முதல் பெண் தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார். MCC’இன் தற்போதைய தலைவராக இருந்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரா, ஆண்டு பொதுக்கூட்டத்தின்போது கிளேர் கானரை அதன் அடுத்த தலைவராக அறிவித்தார். கிளேர் கானர், கடந்த 2009’இல், MCC’இன் கெளரவ வாழ்நாள் உறுப்பினராக இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  
  28. ஹரிதா ஹரம்’ என்பது மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தெலுங்கானா மாநிலத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு மரக்கன்று நடும் திட்டமாகும். தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அண்மையில், ‘ஹரிதா ஹரம்’ திட்டத்தின் ஆறாம்கட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர், நர்சாபூர் நகர்ப்புற வனப்பூங்காவை திறந்துவைத்து, நர்சாபூர் வனப்பகுதியில் செயல் -படுத்தப்பட்டுவரும் வன மறுமலர்ச்சி திட்டத்தையும் ஆய்வுசெய்தார்.
  29. மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சரான Dr.ஹர்ஷ் வர்தன், மெய்நிகர் நிகழ்ச்சியொன்றின் மூலம், நடப்பாண்டுக்கான (2020) வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார். இதில், ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட பெரிய மாநிலங்களின் பிரிவில், காசநோயை ஒழிப்பதில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. அதைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் ஹிமாச்சலபிரதேசமும் உள்ளன. சிறிய மாநிலங்களின் பிரிவில், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் சிறந்த செயல்திறன்கொண்ட மாநிலங்களாக உள்ளன.
  30. இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கியுள்ள, ‘மின்னணு குருதி சேவைகள்’ திறன்பேசி செயலியை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ்வர்தன் தொடங்கிவைத்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமாவார். கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின்கீழ் செயல்படும், அதிநவீன கணக்கீட்டு மேம்பாட்டு மையத்தைச்சேர்ந்த இ-ரக்தோஷ் குழுவினரால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிமூலம், ஒரு குருதி வங்கியிலிருந்து ஒரேநேரத்தில் நான்கு அலகு குருதி கோரி பதிவு செய்வதுடன், 12 மணி நேரம் காத்திருந்தால் குருதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
  31. சந்தன மரங்களையும் மூங்கில் மரங்களையும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தி தனது சொத்துக்களை அதிகரிப்பதற்காக 500 சந்தன மரக்கன்றுகளும், 500 மூங்கில் கன்றுகளும், நாசிக்கில் உள்ள பயிற்சி மையத்தில், காதி கிராமப்புறத்தொழில்கள் ஆணையத்தால் (KVIC) நடப்பட்டுள்ளன. சந்தன மரக் கன்றுகள், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிகள் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உத்தர பிரதேசம் கன்னோஜில் உள்ள நறுமணம் & சுவை மேம்பாட்டு மையம் FFDC’இலிருந்து (Fragrance & Flavour Development Centre) வாங்கப்பட்டன. மூங்கில் கன்றுகள் அஸ்ஸாமிலிருந்து வாங்கப்பட்டன.
  32. வாஷிங்டன் DC’இல் அமைந்துள்ள NASA’இன் தலைமையகத்திற்கு மேரி W ஜாக்சன் அவர்களின் பெயர் சூட்டப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA அறிவித்துள்ளது. மேரி W ஜாக்சன், NASA’இன் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளராவார். NASA’இன் வலைதளத்தில் கூறியுள்ளபடி, அவர் அந்நிறுவனத்தின் ஒரே ஒரு கறுப்பினப் பெண் ஏரோநாட்டிக்கல் பொறியாளர் ஆவார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக NASA’இல் பணியாற்றியுள்ள அவர் கடந்த 1985ஆம் ஆண்டில் ஓய்வுபெறுவதற்கு முன்னர் 12 தொழில்நுட்ப ஆய்வுக்கட்டுரைகளை தனித்தோ அல்லது பிறருடன் இணைந்தோ எழுதியுள்ளார்.
  33. “வறுமை ஒழிப்புக்கான கூட்டணி” என்றவொன்றை ஐ.நா அவை தொடங்கியுள்ளது. அண்மையில் இந்தியா, அந்தக் கூட்டணியின் நிறுவன உறுப்பினராக மாறியது. ஐக்கிய நாடுகள் பொது அவையின் 74ஆவது அமர்வின் தலைவர் டிஜ்ஜனி முகமது-பாண்டே, ஒரு முறைசாரா கூட்டத்தின்போது இந்தக் கூட்டணி குறித்து அறிவித்தார். COVID-19 தொற்றுநோயின் விளைவுகளுக்குப் பிறகு, உலகளாவிய பொருளாதாரத்தை உயர்த்த, உறுப்புநாடுகளுக்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட “வறுமை ஒழிப்புக்கான கூட்டணி” ஜூன்.30 அன்று முறையாக தொடங்கப்பட்டது.
  34. சர்வதேச வணிகம் மற்றும் உலகப்பொருளாதாரத்தில் மாலுமிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.25 அன்று, “மாலுமிகள் நாள்” கொண்டாடப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில், ஒரு தீர்மானத்தின்மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டிலிருந்து “மாலுமிகள் நாள்” கொண்டாடப்பட்டு வருகிறது. “Seafarers are Key Workers” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  35. “சுயசார்பு உத்தர பிரதேசம் வேலைவாய்ப்பு இயக்கத்தை” பிரதமர் மோடி காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். இவ்வியக்கத்தின்கீழ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்படும். COVID-19 பெரும்பரவலின்போது வேலை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற ஊழியர்களை உள்ளடக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். நாடு முழுவதும் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்காக தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியானின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்படும்.
  36. சட்டத்துக்குப்புறம்பான மருந்துப்பொருட்களால் சமூகத்துக்கு ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.26 அன்று, தவறான மருந்துப்பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வரும் இந்த நாளுக்கான கருப்பொருள், “Better Knowledge for Better Care” என்பதாகும்.
  37.  திரிபுரா மாநில அரசானது அண்மையில், ‘முக்கியமந்திரி மாத்ரு புஷ்டி உபார்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதன்மூலம் தாய்-சேய் இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நான்கு முறை பரிசோதனை செய்யப்படும் என்றும் ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
  38. அரசாங்க மதியுரையகமான NITI ஆயோக், ‘புதிய சாதாரணத்தை நோக்கி’ என்ற பெயரில் ஒரு நடத்தை மாற்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் COVID-19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, விதிமுறைகளைப் பின்பற்ற மக்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு 6’இன் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பரப்புரை உருவாக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிவது உட்பட பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான நடைமுறைகளில் இது கவனம் செலுத்துகிறது.
  39. மொனாக்கோவைச் சார்ந்த உலக தடகள அமைப்பானது அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்செயல்பாட்டைக் கண்டறிவதற்காக, ‘Road to Tokyo’ என்றவொரு இணையவழிக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், தற்போது 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.  தகுதி முறையானது விளையாட்டுகளின் புதிய தேதிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன்.29ஆம் தேதியுடன் முடிவடையும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிகாண் காலத்தில், ஒவ்வொரு நிகழ்வின் நிகழ்நேர தகவலை இந்தக் கருவி வழங்கும்.
  40. “நாஷா முக்த் பாரத்: போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மிகவும் பாதிக்கப்பட்ட 272 மாவட்டங்களுக்கான வருடாந்திர செயல் திட்டம் (2020-21)”, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. மேலும், தேசிய போதைப்பொருள் பயன்பாடு குறைப்பு செயல்திட்டத்திற்கான சின்னம், முழக்கம், போதைப் பொருள் தடுப்புக்காக தயாரிக்கப்பட்ட ஒன்பது காணொளிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது.
  41. “மின்கலம் மாற்றும் வசதி & விரைவான பரிமாற்ற சேவை”யை சண்டிகரில் மத்திய பெட்ரோலியத் துறை, இயற்கை வாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார். இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை நிலையங்களில், மின்கலம் மாற்றும் வசதிமூலம், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான உட்கட்டமைப்பை நிறுவுவதற்காக பிறிதொரு நிறுவனத்துடன் இந்திய எண்ணெய் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மின்னேற்ற நேரம் மேம்படுத்தப்படும், இதனால் செயல்படும் நேரமும் அதிகரிக்கும்.
  42. “சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவான பன்னாட்டு நாள்” ஐ.நா அவையால் ஆண்டுதோறும் ஜூன்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது. சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக, கடந்த 1997ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொது அவை, ஜூன்.26ஆம் தேதியை “சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவான பன்னாட்டு நாள்” என அறிவித்தது. சித்திரவதைகளை அறவே ஒழிக்கும் நோக்குடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987 ஜூன்.26 அன்று, சித்திரவதை மற்றும் பிற வன்கொடுமைகள், மனிதாபிமானமற்ற / இழிவான தண்டனைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.
  43. MSME மற்றும் ஜவுளித்தொழில்களுக்கு உதவுவதற்காக, ‘At One Click’ என்றொரு புதிய முயற்சியை குஜராத் மாநில முதலமைச்சர் தொடங்கியுள்ளார்.  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஜவுளித்தொழில்களுக்கு `1,369 கோடி மதிப்பிலான நிதயுதவியை வழங்கும் முன்னெடுப்பாகும் இது. “At One Click” என்பது குஜராத் மாநிலத்தில் உள்ள 13,000 MSME’களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதியுதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் இணையவழி பணவுதவி முன்னெடுப்பாகும்.
  44.  FIFA’இன் அண்மைய அறிவிப்பின்படி, 2023ஆம் ஆண்டின் மகளிர் FIFA உலகக்கோப்பை போட்டிகளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2023ஆம் ஆண்டின் FIFA மகளிர் உலகக்கோப்பை போட்டியில், முதன்முறையாக 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும், இது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளின் தலைமையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  45. மத்திய கலாச்சார அமைச்சரான பிரகலாத் சிங் படேல், ‘சங்கல்ப் பர்வா’ என்ற மரம் நடும் திட்டத்தை அறிவித்தார். நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக அலுவலக வளாகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஐந்து மரக்கன்றுகளை நடவுசெய்ய பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் நடத்தப்படுவதாக அமைச்சர் கூறினார். ‘சங்கல்ப் பர்வா’வை 2020 ஜூன்.28 முதல் ஜூலை.12 வரை கொண்டாடுவதற்கு அவ்வமைச்சகம் முடிவுசெய்துள்ளது. அதன் அனைத்து அலுவலகங்களும், இணை நிறுவனங்களும் இதில் பங்கேற்கும்.
  46. குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் (MSME) நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் உலகப்பொருளாதாரத்திற்கு MSME’களின் பங்களிப்பு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஐ.நா பொது அவை இந்நாளை அறிவித்தது.UNCTAD, UNIDO உள்ளிட்ட ஐ.நா’இன் முகமைகள், “MSMEs: First Responders to Societal Needs” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தன.
  47. நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவானது (FATF) “பணமோசடி & சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகம்” என்ற தலைப்பில் தனது முதலாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகம் என்பது ஓர் “உலகளாவிய அச்சுறுத்தல்” என அந்தக்குழு விவரித்துள்ளது; அது அடிமைத்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத வர்த்தகம் போன்ற பிற குற்றங்களுடனும் தொடர்புகொண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.  அவ்வறிக்கையின்படி, சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகமானது ஓராண்டுக்கு $23 பில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்துக்குப்புறம்பான வனவுயிரி வணிகத்து -டன் தொடர்புடைய கொடுங்குற்றங்களுக்கு சட்டங்களைப்பயன்படுத்துவதற்கு சட்டத்தில் மாற்றங்கள் அவசியம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  48. MSME’களை வகைப்படுத்துவதற்கும் பதிவுசெய்வதற்கும் வழிகாட்டுதல்கள் வடிவில் ஒருங்கிணைந்த ஓர் அறிவிப்பை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி எந்தவொரு MSME’உம், ‘உதயம்’ என்று அழைக்கப்படும். இந்தச் சொல், ‘நிறுவனம்’ என்பதன் அர்த்தத்திற்கு நெருக்கமாக இருப்பதாக கருதப்படுகிறது. அதன்படி, பதிவு செயல்முறையும், இனிமேல், ‘உதயம் பதிவு’ என்றே அழைக்கப்படும்.  குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் பதிவு நடைமுறை (உதயம் பதிவு) முழுவதும், இணையவழியில் தாள்பயன்பாடு இல்லாமல், தன்னுறுதியளிப்பின் அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும்.
  49. இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) பொறியாளர்கள் குழு, ‘புராஜெக்ட் பிராணா’ என்ற பெயரில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பயன்படுத்தக்கூடிய தரத்திலான செயற்கை சுவாச வழங்கியை (ventilator) உருவாக்கியுள்ளது. மலிவு விலையிலான இச்செயற்கை சுவாச வழங்கி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூறுகள் அல்லது உள்நாட்டு சந்தைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய கூறுகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. 35 நாட்களில் இச்செயற்கை சுவாச வழங்கியை அக்குழு உருவாக்கியுள்ளது.
  50.  மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழில் & உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான தேசிய உற்பத்தித்திறன் குழுவின் (National Productivity Council) 49ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம், ஜூன்.27 அன்று கானொளிவழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் குழுவின் (NPC) ஆளுகைக் குழுத்தலைவரான மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமைவகித்தார். 15 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  51. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் சில நாட்களுக்கு முன்னர் 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  52. உலகின் முதல் இணைய வழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை (Online B.Sc. Degree in Programming and Data Science) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.இதனை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT மெட்ராஸ்) தயாரித்து வழங்கியுள்ளது.
  53. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து PASSEX கடற்படை போர்ப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.இந்தியப் பெருங்கடலில் இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
  54. டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியை ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் ஜூலை 2 அன்று தொடங்கி வைத்தார்.கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தி சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.
  55. இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) பதவிவகித்து வரும் KK வேணுகோபால் அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.மேலும்., இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General of India) பதவிவகித்து வரும் தூஷர் மேத்தா அவர்களின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
  56. பிளாட்டினா என்ற பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி மற்றும் சோதனை திட்டமாகும்.
  57. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக இந்திர மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்., நியூயார்க்கிலுள்ள ஐ.நா அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) கடந்த ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  58. மீன்வளத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளை மீன் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மத்ஸ்யா சம்பதா என்ற காலாண்டு பத்திரிக்கையை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன் முதல் பதிப்பு ஜூன் 30 அன்று மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது.
  59. V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram) எழுதியுள்ள “Future of Higher Education – Nine Mega Trends” புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
  60. மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Lessen the mortality of COVID 19.
  61. தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக இருந்த மாசிலாமணியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  62. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி சுனில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  63. ”வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கவும், சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் காற்று போன்றவற்றையும் கவனிக்கவும் ”சுக்ரயான் – 1 “ எனும் திட்டத்த்தை 2023 – 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  64. சமீபத்தில் எந்த மாநில அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது?-ஒடிசா
  65. சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.இந்த திட்டம், வரும், 20ல் துவக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மண்புழு உரம்இங்கு, கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக்கும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ‘கோதான் நியாய் யோஜனா’ என்ற திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி, அவற்றின் வாயிலாக மண்புழு உரம் தயாரித்து, அவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளிடமிருந்து, பசுஞ் சாணத்தை என்ன விலைக்கு வாங்குவது என்பது குறித்து, சத்தீஸ்கர் மாநில விவசாய துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி, 1 கிலோ பசுஞ்சாணம், 1.50 ரூபாய்க்கு வாங்கப்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இந்த சாணத்துக்கு, மாதத்துக்கு இரு முறை பணம் வழங்கப்படும்.
  66. எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஐ.ஐ.டி-டெல்லி மாணவர்களின் குழுவுடன் இணைந்து “கோபால் -19” என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்று நோய் தாக்கப்பட்டு மீண்டவர்கள், பிளாஸ்மா நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்களை தொடர்புகொள்ள உதவுகிறது.
  67. ராஞ்சியைச் சேர்ந்த 29 வயதான இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே, “The Great Indian Tee and Snakes” எனும் சிறுகதைக்காக 2020-ஆம் ஆண்டின் காமன்வெல்த் சிறுகதை பரிசினை வென்றுள்ளார்.கடந்த மாதம் ஆசிய பிராந்திய அளவில் வெற்றிபெற்ற கிருத்திகா பாண்டே தற்போது ஒட்டுமொத்த அளவிற்கான விருதை வென்றுள்ளார்.
  68. பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  69. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியிலிருந்து இந்தியாவை சேர்ந்த சஷாங் மனோகர் ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர்தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைத் தலைவரான சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா பொறுப்புத் தலைவராகச் நியமிக்கப்பட்டுள்ளார்.
  70. மத்திய அரசின் இரண்டு இணைய தளங்கள் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவுப் பிரிவுடன் இயங்கும் கொரோனா உதவி மையம் (MyGov Corona Helpdesk) மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகத் தலைமைப்பண்பு உச்சிமாநாடு (CogX 2020) ஆகியவற்றுக்கான இணைய தளங்கள் இந்த விருதினை வென்றுள்ளன. • நுண்ணரிவு சார்ந்து, லண்டனில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில், இந்த தளங்களை நிர்வகிக்கும் ஜியோஹாப்டிக் நிறுவனம் விருதுகளை பெற்றுள்ளது.
  71. கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், வர்த்தக பிரிவு இயக்குனராக, இ.எஸ்,ரங்கநாதன் பொறுப்பேற்றார்.இவர், சந்தைப்படுத்தல் துறையில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். 
  72. தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 
  73. பிரான்ஸ் புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்-28ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிபர், இமானுவேல் மேக்ரோன் தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், பிரதமர், எட்வர்டு பிலிப் தன் பதவியை ராஜினாமா செய்தார். • இதையடுத்து வைரஸ் பிரச்னையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஜீன் காஸ்டெக்ஸ், 55, புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என, இமானுவேல் மேக்ரோன் அறிவித்தார்.
  74. உத்திரமேரூரில், 300 ஆண்டு பழமையான நிலதான எல்லைக்கல், நேற்று கண்டெடுக்கப்பட்டது. அப்போது, 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட, நிலத்தின் எல்லையை குறிக்கும் கல்வெட்டுகளான நிலதான எல்லைக்கல்லை கண்டெடுத்தனர்.
  75. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பாணியில், நாடு முழுதும், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன. வரும் 2025க்குள், நாடு முழுதும், நகர் வன திட்டத்தின் கீழ், 200 நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படுகின்றன.மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், இதற்கு முனைப்பு காட்டி வருகிறது. நகர்மயமாதல் பெருகி வரும் நிலையில், நகரங்களில், காற்று மாசு பெருகி வருகிறது. வனங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் பல்லுயிர்ப் பெருக்கம் அவசியமாகிறது. • இந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5), 'பல்லுயிரைக் கொண்டாடு' என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது. • நகர்மயமாதலால், உணவுச்சங்கிலியில் ஏற்படும் நிலையில்லா தன்மையைக் குறைத்து, சுற்றுச்சூழலைக் காப்பதே நகர் வன திட்டத்தின் குறிக்கோள்.
  76. இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மங்கோலியாவில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தமதக் கையெழுத்துப் பிரதி நடைபெறும் தர்மசக்கர உபதேச தின விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
  77. உபாசி கோல்டன் லீப் விருதுகள் :நீலகிரி மாவட்டம் குன்னூர், தேயிலை வாரியத்துடன் இணைந்து 'உபாசி, தென்னிந்திய அளவில், சிறந்த தேயிலைக்கான கோல்டன் லீப் இந்தியா' விருதுகள், 16 ஆண்டுகளாக வழங்குகிறது. • நீலகிரி, ஆனைமலை, வயநாடு, திருவாங்கூர், மூணார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த எஸ்டேட்கள் மற்றும் சிறு தேயிலை தொழிற்சாலைகளின் சிறந்த தேயிலை தூள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
  78. செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய 'போபோஸ்' துணைக்கோளை படம் எடுத்த மங்கள்யான் விண்கலம்:''செவ்வாய்க்கு மிக அருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான 'போபோஸை' கடந்த ஜூலை 1-ம் தேதி மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
  79. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான, உலகின் மிகப்பெரிய மையம், டில்லியில் திறப்பு: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான, உலகின் மிகப்பெரிய மையம், டில்லியில், 10 நாட்களில் கட்டுமானம் முடிக்கப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
  80. தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஜீலை 1
TNPSC பொது அறிவு வினா – விடை 2020

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel