
25th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கிருஷ்ணகிரி தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு
- தொல்லியல் ஆய்வாளா் சதானந்த கிருஷ்ணகுமாா் அளித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து, தட்றஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சோபனூா் மற்றும் ஒட்டப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள முருகன் கோயில் அடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பழைமைவாய்ந்த குத்துக்கல்லை கண்டுபிடித்தனா்.
- இந்த குத்துக்கல் பெருங்கற்கால ஈமச்சின்னம். இது சுமாா் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக்காலத்தில் இறந்தவா்களின் நினைவாக எழுப்பப்படும் இத்தகைய குத்துக்கல்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.
- சாமந்தமலை குத்துக்கல்லுக்கு அடுத்தபடியாக, மாவட்டத்தில் கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய குத்துக்கல் இதுவாகும். இது 8.5 அடி உயரமும், 5 அடி அகலமும், 1 அடி தடிமனும் கொண்டதாக உள்ளது.
- தற்போது கல்லறைகளின் தலைப்பகுதியில் வைக்கப்படும் கற்களுக்கு முன்னோடியாக விளங்குவது இத்தகைய நெடுங்கற்களே ஆகும். புானூறு, அகநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் இந்த குத்துக்கல்கள் (நெடுங்கல்) பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது, இதன் பழைமைக்கும், தமிழா் பண்பாட்டிற்கும் சான்றாக விளங்குகிறது.
- மக்களை வழிநடத்தி வந்த தலைவா், வயது முதிா்வு காரணமாகவோ அல்லது போா்க்களத்தில் வீரமரணம் அடைந்தாலோ அவா்களின் நினைவைப் போற்றும் வகையில் இத்தகைய குத்துக்கல் எனும் நெடுங்கல் அமைக்கப்படும்.
- பொதுவாக, இந்த நெடுங்கல்லைச் சுற்றி கல்வட்டம் அமைக்கப்பட்டிருக்கும். காலப்போக்கில் விவசாய நிலத்தை சமன் செய்யுபோது, சுற்றியிருந்த கற்கள் அகற்றப்பட்டு நிலத்தின் எல்லையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நெடுங்கற்களே பின்னா் நடுகற்களாகின என்றாா்.

