
16th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதுகுளத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழைமையான நாணயம்
- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது செல்வநாயகபுரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரசித் பாலன். நாணயம் போன்ற ஒன்று கீழே கிடப்பதைக் கண்டுள்ளார்.
- இந்தப் பழங்கால நாணயத்தை அவர் ஆய்வு செய்தபோது அந்த நாணயம் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமையான ஈழக்காசு என தெரியவந்தது. மேலும் அந்த நாணயத்தில் முதலாம் ராஜராஜ சோழனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
- முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் சிறப்பு வெளியீடாக இத்தகைய ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன.
- பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது.
- இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது.
- மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசில் பாசிபடர்ந்திருப்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லை. ஓரங்கள் தேய்ந்துள்ளன.

