பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி இந்திய கடற்படை வெற்றிகர சோதனை
- இந்திய கடற்படை பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி இன்று வெற்றிகரமான சோதனையை மேற்கொண்டது.
- நாசகார கப்பலான (Destroyer) ஐஎன்எஸ் சென்னையில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்கை தாக்கியது.
- பிரம்மோஸ் ஏவுகணையும், அதனை ஏவிய ஐஎன்எஸ் சென்னை கப்பலும் உள்நாட்டிலேயே நவீன ஆற்றலுடன் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும்.
- தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய இந்தியாவின் முன்முயற்சிகளில் இந்திய கடற்படையின் பங்களிப்பாக இது அமைந்துள்ளது.
தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
- தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.
- கடந்தாண்டு போல இந்தாண்டும் காகிதமில்லா பட்ஜெட் மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அந்த திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
- இதில் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை
- உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 35 மாணவர்களை போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு அழைத்துவர பேருந்து கட்டணமாக சுமார் ரூ.14 லட்சத்தை (17,500 டாலர்) மாநில அரசு செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சீன பட்ஜெட்டில் ராணுவ நிதி 7.1 சதவீதம் அதிகரிப்பு
- உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
- 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம், உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது. கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் மோதல் காரணமாக, பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, சீனா ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
- சீன ராணுவத்துக்கு, 2021நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 15.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 6.8 சதவீதம் அதிகம்.
- இந்நிலையில், 2022ம் நிதியாண்டுக்கான சீன பட்ஜெட்டில், ராணுவத்துக்கு 17.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகம். சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ராணுவத்துக்கான நிதி, இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், தங்க காப்பு கண்டுபிடிப்பு
- அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள, சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் தமிழக தொல்லியல் துறை மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
- இந்த பணியின்போது கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன.
- மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
- இதைத்தொடர்ந்து தற்போது 10க்கு 10 என்ற சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், இரும்பினாலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்றவை கிடைத்துள்ளன.
- கையில் அணியும் காப்பு போன்ற தங்கத்தினாலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த காப்பு சுமார் 7.920 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4 மி.மீட்டர் என்ற அளவிலும் உள்ளது.