பெண்களை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம், மரண தண்டனை பாகிஸ்தானில் அதிரடி சட்டம்
- பாகிஸ்தானில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில், பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை, ஆண்மை நீக்கம் செய்வதற்கான திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான (புலனாய்வு மற்றும் விசாரணை) மசோதா 2020, பாகிஸ்தான் குற்றவியல் தண்டனை திருத்த மசோதா 2020 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
- இந்த மசோதாக்களில் பாலியல் மற்றும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆண்மை நீக்கம், மரண தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் வரலாற்றில் மூன்றாம் பாலினத்தவர், கூட்டு பாலியல் பலாத்காரம் ஆகியவை முதல் முறையாக பாலியல் குற்றங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
- பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வு
- லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த 'மாவோயிஸ்ட்' என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
- மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு', 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கருக்குப் போட்டியிட இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது. இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளது.
- ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட 'தி டிஸைபில்', 'ஷகுந்தலா தேவி', 'ஷிகாரா', 'குஞ்ஜன் சக்ஸேனா', 'சப்பாக்', 'குலாபோ சிதாபோ', 'செக் போஸ்ட்', 'சிண்டூ கா பர்த்டே' உள்ளிட்ட 27 படங்கள் போட்டியிட்டன. இதிலிருந்து 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது.
- கடந்த வருடம் இந்தியாவின் சார்பாக 'கல்லி பாய்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இறுதிப் பட்டியல் வரை இந்தப் படம் போகவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த 'சிட்பி' வங்கியுடன் தொழில் வணிகத் துறை ஒப்பந்தம்
- இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் திரள் வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் (SIDBI) இடையே முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தம் குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின்வளர்ச்சிக்கு தக்க சூழலை உருவாக்கும் வகையில் 3 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டை உள்ளடக்கியதாகும்.
- இதன்மூலம், நிதியுதவி தேவைப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்வசதி அளிப்பதற்கு 'எஸ்ஐடிபிஐ' திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்திட இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உதவும். இதனால், மாநிலம் முழுவதும் குறு நிதி வழங்கவும், மாநிலத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் இயலும்.
- மேலும், தொழில்நுட்ப பரிமாற்றம், புதுமைகளை மேம்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவை மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போட்டியிடத்தக்க வகையில், குறைந்த உற்பத்தி செலவில் தரம் உயர்த்தப்பட்ட புதுமையான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும்.
- சென்னை கிண்டியில் உள்ள தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சென்னை கிண்டி,தொழில் வணிகத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம், மதுரை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.