அரசு துறைகளில் புதிய பணியிடங்களுக்கு தடை தமிழக அரசு
- கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. நிதிநிலையை சீராக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவினங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அதன் அடிப்படையில் அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி உயர்வு மற்றும் பணி இடமாறுதலால் ஏற்படும் பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் கருணை அடிப்படையிலான தொடக்க நிலை பணியிடங்களை நிரப்பவும் தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு
- கொரோனா எதிரொலியால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா தடுப்பு, மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்களில் 25% குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு மட்டுமே தேவையான வாகனங்கள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விளம்பரங்களில் ஆகும் செலவில் 25% குறைக்கப்படுகிறது.
- அதன்படி அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என்றும் அதிகாரிகளின் தினப்படி 25% குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 7 புதிய தூதர்கள் நியமனம் ; 'டிஜிட்டல்' முறையில் ஜனாதிபதி அங்கீகாரம்
- ஏழு நாடுகளைச் சேர்ந்த துாதர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அங்கீகாரம் வழங்கினார்.
- வட கொரியாவின், சோ ஹூய் சோல்; செனகல் குடியரசின், அப்துல் வகாப் ஹைதரா; டிரினிடாட் மற்றும் டோபாகோ குடியரசின், ரோகர் கோபால் ஆகியோர், இந்தியாவுக்கு துாதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மேலும், மொரீஷியஸ் நாட்டின், சாந்தி பாய் ஹனுமன்ஜி; ஆஸ்திரேலியாவின், பேரி ராபர்ட் ஓபேரல்; கோடே டெல்வோர் நாட்டின், மென்ட்ரி எரிக் கமிலி; ருவாண்டாவின், ஜாக்குலின் முகன்கிரா ஆகியோரும், இந்தியாவுக்கு துாதர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- முதன் முறையாக, 'டிஜிட்டல்' முறையில், வெளிநாட்டு துாதர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 'கொரோனாவின் சவாலை சமாளிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவியுள்ளதாக, ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ராணுவ கேன்டீனில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய உள்துறை அமைச்சகம்
- துணை ராணுவப்படையில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் அடங்குவார்கள்.
- இவர்களுக்காக செயல்படும் கேன்டீன்களில் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை நடக்கும். உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
- இதன் அடிப்படையில், துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இது வரும் 1-ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 10 லட்சம் துணை ராணுவப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவார்கள்.
- நாட்டு மக்களும் உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவதுடன், மற்றவர்களையும் அதனை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
- இந்நிலையில், துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றுள்ளது.