- கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
- இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
- அதன்படி, மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் அத்துமீறி நடந்துகொண்டால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
- மேலும், பலத்த காயமடையும் அளவுக்கு மருத்துவா்களைத் தாக்குவோருக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
- இதுபோன்ற தாக்குதலின்போது சுகாதாரத் துறை பணியாளா்கள் காயமடைந்தாலோ, அவா்களின் உடைமைகள் சேதமடைந்தாலோ அவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும். இதற்காக, கடந்த 1897-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கொள்ளை நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை: அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
April 24, 2020
0