வேலூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வெற்றி
- வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
- தமிழகத்தில் நடந்த லோக்சபா பொதுத்தேர்தலில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வென்றுள்ளது. தற்போது கூடுதலாக ஒரு தொகுதியை பிடித்துள்ளது.
- தேர்தலில் 71.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 10.24 லட்சம் பேர் ஓட்டளித்தனர்.
- வேலுார் வெற்றியை தொடர்ந்து லோக்சபாவில் தி.மு.க. பலம் 24 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே ரேஷன் கார்டு திட்டம் நான்கு மாநிலங்களில் துவக்கம்
- நாடு முழுவதும் உள்ள, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இதன் முதல் கட்டமாக, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், இந்த திட்டம், நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
'உபா', மோட்டார் வாகன மசோதா; ஜனாதிபதி ஒப்புதல்
- பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர்களை, 'பயங்கரவாதிகள்' என அறிவித்து, அத்தகையோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளார்.
- மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். சாலை போக்குவரத்துக்கான கடுமையான விதிமுறைகளுடன் கூடிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆம்புலன்சுக்கு வழி விடாத வாகன ஓட்டிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 000 ரூபாயும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1 000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்தார் குடியரசு தலைவர்
- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக ரத்து செய்தது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது.
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் "பாரம்'
- 66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழிப் படம் "ஹெல்லாரோ', மாநில மொழிகளில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக "பாரம்' ஆகியவை தேர்வாகியுள்ளன.
- சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் மற்றும் விக்கி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது.
- முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புக்கு உகந்த மாநில விருது, உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படமாக அபிஷேக் ஷா இயக்கிய "ஹெல்லாரோ' எனும் குஜராத்தி படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படம் சிறப்பு நடுவர் விருதையும் வென்றுள்ளது.
- சிறந்த திரைப்படம் "ஹெல்லாரோ' (குஜராத்தி)
- சிறந்த குழந்தைகள் திரைப்படம் "சர்க்காரி ஹிரிதய பிரதாமிகா ஷாலே காஸர்கோடு' ( கன்னடம்)
- சிறந்த நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா
- (அந்ததாதூன்- ஹிந்தி), விக்கி கெளசல் ("உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்'-ஹிந்தி)
- சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் (மகாநடி - தெலுங்கு)
- சிறந்த துணை நடிகர் ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்- மராத்தி)
- சிறந்த துணை நடிகை சுரேகா சிக்ரி (பதாயி ஹோ- ஹிந்தி)
- சிறந்த பாடகர் அரிஜித் சிங் (பத்மாவத் -ஹிந்தி)
- சிறந்த பாடகி பிந்து மாலினி, (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த ஒளிப்பதிவு எம்.ஜெ. ராதாகிருஷ்ணன் (ஒலு- மலையாளம்)
- சிறந்த திரைக்கதை ராஹுல் ரவீந்திரன் (சி அர்ஜுன் லா சோ - தெலுங்கு)
- சிறந்த படத் தொகுப்பு எடிட்டர் நாகேந்திர கே. உஜ்ஜனி (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அவே (தெலுங்கு), கேஜிஎப் (கன்னடம்)
- சிறந்த பாடலாசிரியர் மஞ்சுநாதா (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த தமிழ்ப் படம் பாரம்
- சிறந்த கன்னட திரைப்படம் நாத்திசராமி
- சிறந்த தெலுங்கு திரைப்படம் மகாநடி
- சிறந்த மலையாள திரைப்படம் சூடானி ஃப்ரம் நைஜீரியா
- சிறந்த ஹிந்தி திரைப்படம் அந்தாதூன்
- சிறந்த இசை இயக்கம் (பாடல்) பத்மாவத் (ஹிந்தி)
மராத்தி கட்டாயம் மகாராஷ்ட்ரா அரசு அதிரடி
- மகாராஷ்ட்ராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்த மாநிலத்தில், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான சட்டவரைவு ஒன்றை உருவாக்குவதற்குக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
- மகாராஷ்ட்ரா மாநில அரசால் அமைக்கப்படவிருக்கும் அந்தக் குழுவில் மாநில அமைச்சர்கள், கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் மற்றும் உள்ளூர் மொழிகள் பற்றி ஆய்வுகள் மற்றும் விரிவான விவாதங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, ஆரம்பகட்ட சட்டவரைவு உருவாக்கப்படும். ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், கல்வித்துறையின் இணையதளத்தில் அந்த வரைவு வெளியிடப்படும்.
- கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் மராத்தி இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
- அந்தக் கூட்டத்தில் மராத்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்குவது, மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பது, மராத்தி பள்ளிகளுக்கு அதிகாரமளிப்பது, மராத்தி மொழியைப் பிரபலமாக்குவது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை
- பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்திய எஃப்16 போர் விமானத்தை வீழ்த்திய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு "வீர் சக்ரா" விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானத்தை, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 போர் விமானத்தின் மூலம் தாக்கி வீழ்த்தினார்.
இரட்டை சதம் விளாசி சுப்மான் கில் சாதனை
- மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியின் வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
- இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மான் கில்.
- இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாரிய தலைவர் அணிக்காக களமிறங்கிய கவுதம் காம்பீர் 218 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அப்போது காம்பீருக்கு 20 வயது.