- காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
- தமிழகத்திலுள்ள பல நீர்நிலைகளின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும், பேணிக் காக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கிய திட்டமாக காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க "நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இதேபோன்று, பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நீர் வளத்தினை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் குறுகிய கால, நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீர் வள ஆதார மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் விரிவாகக் கையாண்டு செயல்படுத்துவதை தமிழக அரசு கண்காணிக்கும்.
- நீர்வள பாதுகாப்பு இயக்கம்: தமிழகத்தில் நீர் வளத்தினை பாதுகாக்க, நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல், அதிநுகர்வு, அபாயகரமான குறுவட்டங்களில் பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல் போன்றவை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படும்.
- இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும். நகரப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு அவற்றில் பெண்கள் அதிகளவு கலந்து கொண்டு செயல்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.
- ஒரு மாத மக்கள் இயக்கம்: நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்தத் தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர். இந்த தீவிர இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவர்.
- சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டராகும். அதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு பயன்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டாம், மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
- இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ரூ.1,700 கோடியில் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி சுத்திகரித்து அதன் மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.
காவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க "நடந்தாய் வாழி காவிரி திட்டம்'
July 21, 2019
0
Tags