தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து!' - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
- அரசு திட்டங்களுக்காகத் தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது.
- மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திலிருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105 (a) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.
- மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு கொண்டு வந்த இந்தப் புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- நில எடுப்பு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த 3 நில கையகப்படுத்தல் சட்டங்களின் கீழ் தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்திருந்தால் இந்தத் தீர்ப்பு பொருந்தாது எனவும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் - 2ஆம் இடத்தில் தமிழகம்
- மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அதிக நிதியுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தியது. தமிழகத்தில் இந்த திட்டமானது முதலமைச்சர் மருத்துவர் காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 77 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் 641 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று குஜராத் முதலிடத்தில் உள்ளது. 399 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று தமிழகம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 2 லட்சத்து 11 ஆயிரத்து 75 பேர் இந்த காப்பீட்டின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளனர்.
- நிதியுதவி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது.
5 மாநில மொழிகளில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு
- உச்சநீதி மன்றத்தில் தற்போதுள்ள நடைமுறையின் கீழ், தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் உச்சநீதி மன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. பிராந்திய மொழிகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று பல ஆண்டுகாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
- இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
- இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி, மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- அதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமிஸ், ஒடியா ஆகிய ஐந்து மொழி களிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மென்பொருளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு
- 'பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்' என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
- உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள 50 சதவீத அளவைவிட அதிக அளவு இடஒதுக்கீடு அளிக்கும் நான்காவது மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: அரசு சார்பில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு
- அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடைபெறும் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்காக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
- உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ் மன்றம், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை (ஜூலை 4) முதல் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 7) வரை நடைபெற உள்ளது.
சீனா, ஆசிய பசிபிக் பகுதி நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவு
- நாடு முழுவதும் 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் ரயில்வே துறையில் மட்டும் 2.6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
- 2018 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் அரசு பணிகளில் 38.03 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறியுள்ளார்.
- வேலையின்மை விகிதம் இந்தியாவில் 3.5 சதவீதமாகவும், சீனாவில் 4.7 சதவீதமாகவும், ஆசிய பசிபிக் பகுதியில் 4.2 சதவீதமாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான மசோதா: புதின் ஒப்புதல்
- நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் அமெரிக்க - ரஷிய ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதாவில் ரஷிய அதிபர் புதின் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
- அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிடுவதற்காக ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
- அதற்குப் பதிலடியாக, அணு ஆயுதத் தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.