நீர்வள ஆணைய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமனம்
- மத்திய நீர்வள ஆணையத்தின், புதிய தலைவராக, அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார்.'தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக, மத்திய நீர்வள ஆணைய தலைவராக இருந்த, மசூத் உசேன் நியமிக்கப்பட்டு இருந்தார்.
- இவர், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை முறையாக நடத்தவில்லை. மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்க அனுமதி வழங்கினார். இதனால், மசூத் உசேன் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது.
- ஜூன் இறுதியில், அவர் பணி ஓய்வு பெற்றார்.இதையடுத்து, மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக, அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார்.
- மத்திய நீர்வள ஆணையத்தின் பல்வேறு பிரிவுகளில், இவர் பணி யாற்றியுள்ளார். கங்கை வெள்ள தடுப்பு திட்டமிடல் பிரிவு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மசூத் உசேனை போலவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும், மத்திய அரசின் புதிய, 'ஜல் சக்தி' துறையின் தலைவராகவும், இவர் செயல்பட உள்ளதாக தெரிகிறது.
உலக பொறியியல் கல்வி மன்ற மாநாடு: சென்னையில் நவம்பரில் நடக்கிறது
- ஒன்பதாவது உலகப் பொறியியல் கல்வி மன்ற மாநாடு சென்னையில் வரும் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
- சர்வதேச பொறியியல் கல்வி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 13 முதல் 16-ஆம் தேதி வரை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய தலைவர் நலின் சிங்கால்
- பொதுத் துறையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல்-ன் தலைவராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவரது பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். நலின் சிங்கால் நியமனத்துக்கு உரிய அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என மும்பை பங்குச் சந்தையிடம் பிஎச்இஎல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டாயம் : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டாயம் என டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்
- இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
- அதற்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி 3 வீரர்களை சுமந்து செல்லும் விண்கலமானது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
- அதில் அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் மூவரும் 7 நாட்கள் வரை அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர். அதற்கான பணிகளை இஸ்ரோவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
- இந்த நிலையில், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுப்பது, மருத்துவ சோதனை செய்வது மற்றும் விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகளை அளிப்பது ஆகிய மூன்று பணிகளை ரஷ்யா மேற்கொள்ளும். வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு முதல் இரண்டு பயிற்சிகள் இந்திய விமானப்படையின் கீழ் இயங்கும் விண்வெளி மருத்துவ கழகத்தில் வழங்கப்படும்.
- இறுதி பயிற்சிக்கு வீரர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். விண்வெளி தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால உறவு உள்ளது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா, 1984ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஷ் டி 11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை- புதிய சட்டம் அமல்
- ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தடையை மீறி புகைபிடிக்கும் நபர்கள் 3 லட்சம் யென் (ரூ.2 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரயில்வே போலீஸாரை கண்காணிக்க இ-பீட் செல்லிடப்பேசி செயலி அறிமுகம்
- ஓடும் ரயில்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களைக் கண்காணிக்கவும் இ- பீட் என்றும் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- முதல்கட்டமாக, சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேரன், நீலகிரி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய விரைவு ரயில்களில் இந்த செல்லிடப்பேசி செயலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் தமிழக ரயில்வே போலீஸாரும் (ஜி.ஆர்.பி), ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (ஆர்.பி.எஃப்) ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ரயில்வே போலீஸார் ஓடும் ரயில்களில் சரியாக செயல்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
- இதனால், ஓடும் ரயில்களில் பணியில் ஈடுபடும் ரயில்வே போலீஸார், ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போது, செல்லிடப்பேசியில் செல்பி (சுயபடம்) எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- இவர்களைக் கண்காணிக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் இ -பீட் என்னும் செல்லிடப்பேசி செயலி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சேரன், நீலகிரி ஆகிய ரயில்களில் இந்த செல்லிடப்பேசி செயலி வசதி செய்யப்பட்டுள்ளது.
- ஓடும் ரயில்களில் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படும் போலீஸார் இ-பீட் என்னும் செல்லிடப்பேசி செயலியை தங்கள் நவீன செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ரயில்களின் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் கியூ ஆர் கோடு எனப்படும் சங்கேத குறியீடுகள் உள்ள படம் ஒட்டப்பட்டு இருக்கும்.
- அதுபோல, ரயில் நிலைய சுவர்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். ரயில் நிற்கும் நிலையங்களில் போலீஸார் இறங்கி கியூ ஆர் கோட்டை இ- பீட் செல்லிடப்பேசி செயலி வழியே ஸ்கேன் செய்ய வேண்டும்.
- இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் பதிவாகிவிடும். மேலும், ரயில்வே காவல் அதிகாரிகளும் கண்காணிக்க முடியும். இதனால், ஓடும் ரயிலில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
- மேலும், அவர்கள் பயணிக்கும் பெட்டிகளையும், ரயிலின் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனரா எனவும் கண்காணிக்க முடியும்.