தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக எஸ்.பழனிசாமி நியமனம்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சிகள் இயக்குனர் பொறுப்பையும் எஸ்.பழனிசாமி தொடர்ந்து கவனிப்பார் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரூ.2,515 கோடியில் 16 புதிய நிறுவனங்கள் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
- 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 16 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
- தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் எக்கி ஹோமா பிரைவேட் லிமிடெட், சிர்மா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ரெனாட்டஸ் ப்ரோகான் பிரைவேட் லிமிடெட் அகிய 3 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.
- இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமையவுள்ள அமெரிக்க நிறுவனமாகிய டிபிஐ காம்போசைட்ஸ் , கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பூங்காவில் அமையவுள்ள ஹைடெக் கார்பன் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- அத்துடன் திருவள்ளூர் மாவட்டம் இண்டோஸ்பேஸ் தனியார் தொழிற் பூங்காவில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மஹிந்ரா ஸ்டீல் சர்வீஸ் சென்டர் உள்ளிட்ட 16 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி துவங்கிவைத்தார். மொத்தம் 2 ஆயிரத்து 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த நிறுவனங்களால் 9 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் உட்பட 13 மொழிகளில் வங்கி தேர்வு
- வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) சார்பில் நடத்தப்படும் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது 13 மாநில மொழிகளில் இனி எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்கேல் 1 நிலையிலான பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11ம் தேதிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
- இந்த பணியிடங்களுக்கு வங்கிபணியாளர்கள் தேர்வு நிறுவனம், முதனிலை, மெயின், நேர்காணல் முறைகளில் பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2020 ஜனவரிக்குள் இந்த பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன்படி நாடு முழுவதிலுமுள்ள மண்டல மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளுக்கு ஒன்றாம் நிலை அலுவலர்கள் மற்றும் பல்வகை பணி ஊழியர்களுக்கான தேர்வு இனி தமிழ், மலையாளம், அசாமி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒடியா, மணிப்பூரி, மராத்தி ,பஞ்சாபி, உருது கொங்கனி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும்.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்; ஜி.டி.பி., 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
- பிரதமர், மோடி தலைமையிலான, புதிய அரசின், முதல் பொருளாதார ஆய்வறிக்கையை, நேற்று, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறை. இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 - 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.8 சதவீதமாக இருந்தது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைவு. இருப்பினும், நடப்பு நிதியாண்டில், முதலீடுகள் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 7 சதவீதமாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
- 2024 - 25ம் ஆண்டில், இந்தியா, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான நோக்கத்தை அடைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை, 8 சதவீதமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- மத்திய - மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறையானது, 2018- - 19ல் 5.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில், 6.4 சதவீதமாக இருந்தது.
- கச்சா எண்ணெய்: நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, 2017 - -18ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.9 சதவீதமாக இருந்தது. இது, 2018 ஏப்ரல்- - டிசம்பர் மாதங்களில், 2.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது.
- இதன் காரணத்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.வர்த்தக பற்றாக்குறை, 2017 - 18ல், 162.1 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2018 - -19ல், 184 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பாக்.,கிற்கு ரூ.42,000 கோடி கடன்: சர்வதேச நிதியம் வழங்குகிறது
- அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணியும் கடும் சரிவில் இருக்கிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க, தனது நட்பு நாடுகளான, சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிடம் பாக்., கடன் வாங்கியுள்ளது. கடந்த மாதம், கத்தார் நாட்டிடம் இருந்து, 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது.
- மேலும், கடும் சரிவில் இருக்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த, அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் செயல்படும், சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரிகள், சர்வதேச நிதியத்துடன் பேச்சு நடத்தினர்.
- இந்நிலையில், சர்வதேச நிதியத்தின், தலைமை நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாக்.,கிற்கு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு, 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், முதற்கட்டமாக, 7,000 கோடி ரூபாய் உடனடியாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.