சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்
- ராஜினாமா கடிதம் அளித்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர், தங்களின் ராஜினாமா மீது உடனடியாக முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
- இந்த வழக்கில் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், எம்எல்ஏ.,க்களை விட சபாநாயகர் தான் முக்கியம். ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகரே முடிவு எடுக்கலாம்.
- ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு அவகாசம் அளிக்க வேண்டும். நாளை (ஜூலை 18) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க எம்எல்ஏ.,க்களுக்கு உத்தரவிட முடியாது. விருப்பப்பட்டால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
- இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உள்ளதாகவும், குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இந்தியா தரப்பில் "வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டது.
- இந்தநிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தேசிய மருத்துவ கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாட்டின் மருத்துவ கல்வியை சீரமைப்பதற்காக, தேசிய மருத்துவ கமிஷனை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மசோதாவுக்கு, கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
- தேசிய மருத்துவ கமிஷனை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ கல்வியை சீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை, தற்போது செயல்பாட்டில் உள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி அமைக்கும்.
- இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவில், பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர், இறுதி ஆண்டில், 'நேஷனல் எக்சிட் டெஸ்ட்' எனப்படும், 'நெக்ஸ்ட்' தேர்வு எழுத வேண்டும்.அது, இரு வித குறிக்கோள் களை கொண்டுள்ளது.
- ஒன்று, இதில் வெற்றி பெறுபவர்கள் தான், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற முடியும்.இரண்டாவது, இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களே, முதுகலை மருத்துவம் படிப்பதற்கான தகுதியாக கருதப்படும்.
- மேலும், வௌிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கும், இந்த தேர்வு, சோதனை தேர்வாக இருக்கும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவில் மருத்துவ சேவை புரிய, தனியாக தேர்வு எழுத தேவையில்லை.
- அதே நேரத்தில், 'நீட்' தேர்வு, பொதுவான கவுன்சிலிங் மற்றும் 'நெக்ஸ்ட்' தேர்வு மூலம் தான், 'எய்ம்ஸ்' மருத்துவமனை யில் படிக்க முடியும்
இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்
- மேற்காசிய நாடான, இஸ்ரேலின், 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரிஸ்' நிறுவனமும், இந்திய கடற்படையும், ஏவுகணை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கடற்படைக்கு, நடுத்தர ரக, தரையிலிருந்து, வானில் ஏவும் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலானது.
உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்சுக்கு 3ம் இடம்
- உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
- இந்நிலையில் பிரான்சின் எல்.வி.எம்.எச்., நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பெர்க் கூறியுள்ளது.
- தற்போதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
4 தங்க பதக்கங்கள் ஹீமா தாஸ்
- செக் குடியரசின் காட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியின் 200 மீட்டர் தடகள போட்டியாளர்களுக்கான போட்டியில் வென்று, இந்தியாவின் ஹிமா தாஸ் 4வது தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.
- இந்த 200 மீட்டர் தடகள போட்டியில் 23.25 நொடிகளில் ஹீமா தாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வி.கே விஸ்மயா 23.43 நொடிகளில் போட்டியை முடித்து, 2வது இடத்தை பெற்றிருக்கிறார்.