புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நியமனம்
- தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுடன் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சனிக்கிழமை பிறப்பித்தார். புதிய தலைமைச் செயலாளர் க.சண்முகம் திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.
காவல்துறை சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதி நியமனம்
- தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
- தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்து வந்த தே.க.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார்.
- இந்த பதவிக்கு பணி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் டி.ஜி.பி.க்கள் ஜே.கே.திரிபாதி, ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட உயரதிகாரிகள் தகுதி உடையவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களில் பணிமூப்பு அடிப்படையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவர் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
பருவநிலை மாற்றம் ஒப்பந்தந்தை தொடர்ந்து செயல்படுத்த ஜி20 நாடுகள் ஒப்புதல்
- உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு காரணமாக பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் எனப்படுகிறது.
- அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அறிவித்தார்.
- இந்நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி20 மாநாட்டின் நிறைவு நாளான இன்று (ஜூன் 29) பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை முழுவீச்சில் செயல்படுத்த அமெரிக்காவை தவிர்த்த 19 நாட்டு தலைவர்கள் உறுதியேற்றனர்.
ஆப்பிரிக்கா - ஐரோப்பாவை இணைக்கும் ஆழ்கடல் கேபிள் திட்டம்: ஈக்வானோ
- கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் மேகக்கணிமை கட்டமைப்பினை மேம்படுத்த ஆப்பிரிக்கா - ஐரோப்பாவை இணைக்கும் ஆழ்கடல் கேபிள் திட்டம் : ஈக்வானோ திட்டத்தினை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான முழு செலவையும் கூகிளே செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஆழ்கடல் இணையம் வழியை அளிக்கும் நிறுவனங்களில் கூகிள் மூன்றாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது
- உலக அளவில் இணைய இணைப்பினை அதிவேகமாக மாற்றுவதற்காக இந்நிறுவனத்தின் 14 வது ஆழ்கடல் திட்டமாக ஆப்பிரிக்கா-ஐரோப்பா திட்டம் விளங்குவதாக தெரிவித்துள்ளார்
- இந்தப்பணியை அல்காடெல் சப்மரைன் நெட்வொர்க்ஸ் செய்ய உள்ளது. முதல்கட்டமாக இந்நிறுவனம் தென் ஆப்பிரிக்கா-, போர்ச்சுக்கல் இடையே ஆழ்கடல் கேபிள் மூலம் 2021ம் ஆண்டு இணைக்கும் என்றும் தெரிவித்தார்
மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியாவாகத் தேர்வான இந்திய வம்சாவளி பெண்
- இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியா செராரோ, 2019-ம் ஆண்டின் 'மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா' பட்டத்தை வென்றிருக்கிறார். இவர், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 'பிரபஞ்ச அழகிப் போட்டியில்', ஆஸ்திரேலியா சார்பாகப் பங்குபெறப்போகிறார்.
2025-க்குள் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம்: இந்தியா-இந்தோனேசியா ஒப்பந்தம்
- ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் 14-ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டினிடையே, துருக்கி, பிரேசில் உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- "மோடி-ஜோகோ விடோடோ இடையேயான சந்திப்பின்போது, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் உறுதிபூண்டனர்.
- வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளவும் இருநாட்டுத் தலைவர்கள் இலக்கு நிர்ணயித்தனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
- இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையேயான வர்த்தக மதிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டில் சுமார் ரூ.90,300 கோடியாக இருந்தது. இது கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.1.26 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், தற்போது ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இருநாட்டு வர்த்தகத்தில் இந்தோனேசியாவின் கையே ஓங்கியிருக்கிறது. சுமார் ரூ.98,000 கோடி மதிப்பிலான பொருள்களை அந்நாடு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தோனேசியாவுக்கான இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி சுமார் ரூ.28,000 கோடியாக உள்ளது.
பயங்கரவாத நிதி முடக்கம்: ஜி20 நாடுகள் தீர்மானம்
- பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை முடக்க நடவடிக்கை எடுப்பது என்று ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- உலகப் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவி அரசியல் தொடர்பான பதற்றங்கள் தீவிரமாகியுள்ளன. இந்த இடர்களுக்கு தீர்வு காணவும், இதற்கான நடவடிக்கையை எடுக்கவும் தயாராக இருப்பது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வலுவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது, இதற்காக பல்வேறு கொள்கைத் திட்டங்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) செயல்பட வேண்டும். பலமுனை அணுகுமுறையின்கீழ் கடன் பதிவு, கண்காணித்தல் மற்றும் தகவல் அளித்தல் உள்ளிட்ட துறைகளில் வாங்குவோருக்கான திறனை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கிக் குழுமமும் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று ஜி20 நாடுகள் வலியுறுத்துகின்றன.
- சர்வதேச நிதி ஸ்திரத்தன்மைக்கு நவீன டிஜிட்டல் செலாவணியால் எந்த வகையிலும் சவால் உருவாகிவிடக் கூடாது. ஊழலை எதிர்கொள்ளும் விவகாரத்தில், 2019-2021-ஆம் ஆண்டுக்கான ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளன. வெளிநாடுகளால் அளிக்கப்படும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், வெளிநாட்டு லஞ்சத்தை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் தேசிய சட்டம் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ஊழல் குற்றங்களில் தேடப்படும் நபர்களுக்கு புகலிடம் அளிக்காமல், ஊழலை தடுக்கும் சர்வதேச நடவடிக்கைக்கு தலைமை ஏற்கவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இணைந்து செயல்படவும் ஜி20 நாடுகள் முடிவு செய்துள்ளன என்று அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய டென்னிஸ் ஒற்றையர் பிரிவு சாம்பியன்கள்
- சென்னையில் நடைபெற்ற தேசிய யு-14 டென்னிஸ் தொடரின் சிறுவர் ஒற்றையர் பிரிவு பைனலில், மேற்கு வங்க வீரர் அருனவா மஜும்தார் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் தமிழகத்தின் நிதிஷ் பாலாஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- சிறுமியர் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழக வீராங்கனை குந்தனா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிராவின் ரூமா அசுதோஷை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். சாம்பியன்கள் அருனவா, குந்தனா இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.
அகில இந்திய கைப்பந்து போட்டியில் தென் மத்திய ரெயில்வே அணி 'சாம்பியன்'
- அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தென் மத்திய ரெயில்வே (செகந்திராபாத்)-சாய் (தலச்சேரி) அணிகள் மோதின.
- விறுவிறுப்பான இந்த போட்டியில் தென் மத்திய ரெயில்வே அணி 25-20, 25-19, 25-21 என்ற நேர்செட்டில் சாய் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்
- பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.நாளை ஜூலை 1ம் தேதி அவர் தலைவராக பொறுப்பேற்கிறார்.
- இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் இயங்கி வரும்தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.