தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' தேர்வு: அரசு அறிவிப்பு
- தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
- நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில் 324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.
- "சிர்ரோசாரா தாய்ஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரோடைகள், ஈரமான பகுதிகளில் வாழும். குறிப்பாக மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு, சிறுவாணி பகுதிகளில் இவற்றை அதிகமாக காணலாம்.
- பழுப்பு ஆரஞ்ச் நிறத்தில் கருப்பு புள்ளிகள் கொண்ட இவை மரவொட்டி என்ற தாவரத்தில் முட்டையிட்டு, வளரும் தன்மை கொண்டதாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வகையில் அதிக அளவில் இவற்றைக் காணலாம்.
- 60 மி.மீ. முதல் 75 மி.மீ. வரை இதன் உடல் அளவும், ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை இதன் ஆயுள்காலமும் இருக்கும்.
திருப்பத்தூர் அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
- திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாதனவலசு என்ற இடத்தில் அமைந்துள்ள வேடியப்பன் கோவில் வளாகத்தில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன.
- திருப்பத்தூரில் இருந்து ஜவ்வாதுமலைக்குச் செல்லும் குறுக்குப் பாதையான வழித்தடத்தில் சாலையோரம் வேடியப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பழைமையான எட்டிமரத்தின் அடியில் வலக்கரங்களில் அம்பும் இடக்கரங்களில் வில்லும் ஏந்திய நிலையில் மூன்று வீரர்கள் காணப்படுகின்றனர்.
- இவ்வீரர்கள் மூவரும் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையை முடிந்துள்ளனர். கழுத்தில் ஆறு அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டையும், இடைக் கச்சையுடன் குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளனர்.
- இத்தோற்றம் இவர்களை இங்கு நடைபெற்ற போரில் தலைமையேற்றவர்கள் என்பதை உணர்த்துகின்றன. இவர்களுக்கு நேரெதிரே வலக்கரத்தில் கட்டாரியும் இடக்கரத்தில் குறு வாளும் ஏந்திய வீரன் உருவமும் உள்ளது. சற்று தொலைவில் கையில் மதுக்குடத்துடன் ஒரு பெண் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. இவை இவ்வட்டாரத்தில் நடைபெற்ற போரில் மடிந்த வீரர்களுக்கான நடுகற்களாகும்.
- கையில் மதுக்குடத்துடன் வீற்றிருக்கும் பெண் வீரர்களில் எவரேனும் ஒருவரது மனைவியாக இருக்கக் கூடும். வீரனோடு அப்பெண்ணும் இறந்த செய்தியை இச்சதிக்கல் அறிவிக்கிறது.
- இந்நடுகற்கள் விஜயநகரப் பேரரசின் தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும். அவற்றை வேடியப்பன் கல் என்றும், அவை அமைந்துள்ள கோயில்களை வேடியப்பன் கோயில் என்றும் அழைப்பது வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
ஜி.எஸ்.டி., வரி வசூலில் தெலுங்கானா 'டாப்'
- கடந்த நிதியாண்டில், இந்திய அளவில் அதிக ஜி.எஸ்.டி., வசூலில் ஐதராபாத் மண்டலம் சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி,. வசூல்தொகையில் இந்தியாவிலேயே, 4 சதவீதத்தை தெலுங்கானா மட்டும் வசூலித்துள்ளது.
- ரூ.36,212 கோடி வசூல் கடந்த 2018-19 நிதியாண்டில், தெலுங்கானா மொத்தமாக 36 ஆயிரத்து 212 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது இந்திய அளவில் 4 சதவீத தொகையாகும். இதில், தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத் மண்டலம் 28 சதவீத கூடுதல் ஜி.எஸ்.டி., வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது நாட்டிலேயே அதிகமாகும்.
- தெலுங்கானாவில் நாட்டிலேயே 3 சதவீதமான வரி செலுத்துவோர் உள்ளனர். இந்த வரி இலக்கு 19 ஆயிரத்து 420 கோடி ரூபாயாகும்.
ரஷ்யாவுடன் ரூ.200 கோடியில் டாங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம்
- ரஷ்யாவிடமிருந்து இந்தியா ரூ.200 கோடிக்கு நவீன டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. எம்.ஐ.- 35 ஹெலிகாப்டர் இந்தியாவின் எம்.ஐ.35 போர் ஹெலிகாப்டர்களில் பொருத்தி ஏவுவதற்கு ஏற்றாற்போன்றவை இந்த ஏவுகணைகள்.
- இந்திய விமானப்படையின் பழமையான அமெரிக்க வகை அப்பாச்சி கன்சிப்ஸ்ஐ மாற்றிவிட்டு, இந்தவகை ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.
பாகிஸ்தானுக்கு ரூ.5,322 கோடி கடன்
- நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு, ரூ.5,322 கோடி ரூபாய் கடன் அளிக்க, உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
- மொத்த தொகையான ரூ.4,495 கோடி கராச்சி நகரின் மேம்பாடு, பொது போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்பட உள்ளது.
- மீதி உள்ள ரூ.482 கோடி அந்நாட்டின் கைபர் - பக்துன்வா மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காவும் வழங்கப்படுகிறது.