- புதிய நிர்வாக குழுவின் கண்காணிப்பில், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை மேம்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், ஏற்றுமதி மேம்பாட்டிற்கான அதிரடி செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளது.'குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ஆற்றலை வெளிக்கொணரும் திட்டம்' என, இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை கண்டறிந்து உதவவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், நிர்வாக குழு அமைக்கப்படும்.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலர் தலைமையிலான இக்குழுவில், வர்த்தக துறை செயலர், ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்புகளைச் சேர்ந்தோர், உறுப்பினராக இடம் பெறுவர்.வெளிநாடுகள் உடனான தாராள வர்த்தகம், பரஸ்பரம் வர்த்தகம் உட்பட, பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்படும்.
- வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த மண்டலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிக்காக, பிரத்யேக வலைதளம் உருவாக்கப்படும். அதில், நாடு வாரியாக, தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விபரங்கள் இடம் பெறும். அத்துடன், குறிப்பிட்ட சந்தைகளுக்கு எப்படி ஏற்றுமதி மேற்கொள்வது என்பது குறித்த தகவல்களும் இருக்கும்.மேலும், பல்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள், வட்டி விகிதம் உள்ளிட்ட தகவல்களும் இடம் பெறும்.
- பாதுகாப்பான வணிகம்பரஸ்பரம் மற்றும் பன்முக வர்த்தகம் தொடர்பான அனைத்து பேச்சுகளிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பாதுகாப்பான வணிகத்தை உறுதிப்படுத்த, உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும்.
- இந்தியாவில் உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கொள்முதல் செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இப்பணிக்காக, தேசிய மூலாதார மையம் ஏற்படுத்தப்படும்.
- இம்மையம், ஐ.நா., உட்பட, பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவன பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளும்.
- ஏற்றுமதி நடைமுறைகளை, ஏற்றுமதியாளர்கள் சுலபமாக புரிந்து கொண்டு, வர்த்தகம் புரியவும், வெளிநாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், வழிகாட்டி புத்தகம் வெளியிடப்படும்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள, 6.30 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம், 11.10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்துறையில், 97 சதவீதம் பேர், அமைப்பு சாரா பிரிவில் உள்ளனர்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ஆற்றலை வெளிக்கொணரும் திட்டம்
December 26, 2018
0