தமிழ்நாடு இந்து சமய அறநிலை சார்நிலைப் பணிகளில் குரூப் 7பி-யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு3) பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 6ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும்.
மேலும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.