தமிழகத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நலம் 365-எனும் யூடியூப் சேனல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு
- சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'நலம் 365' எனும் யூடியுப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மரு.எழிலன் நாகநாதன், முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.உமா, மருத்துவத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ஆன்லைன் கேமிங் என்பது உலகெங்கும் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று அனைவரையும் வீடுகளிலேயே முடக்கிய நிலையில், ஆன்லைன் கேமிங் அப்போது உச்சம் தொட்டது.
- இந்தச் சூழலில் மத்திய அரசு ஆன்லைன் கேமிங் தொடர்பாக வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- இன்று வெளியிடப்பட்ட வரைவு ஆன்லைன் கேமிங் விதிகளில், சுய-ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வீரர்களைக் கட்டாய சரிபார்க்க வேண்டும் என்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கட்டாயம் இந்திய முகவரி இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 2021இல் சமூக வலைத்தளங்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியிடப்பட்ட நிலையில், அந்த விதிமுறைகள் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
- ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சூதாட்டம், பந்தயம் அல்லது குறைந்தபட்ச வயது ஆகிய விஷயங்களில் இந்தியாவின் சட்டங்களை இந்த கேமிங் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்த நோட்டீஸில், "இந்த வரைவு திருத்தங்கள், ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி உறுதி செய்யும். அதேநேரம் இந்த துறைக்குத் தேவையான சீர்திருத்தங்கள் அல்லது கட்டுப்பாடுகளை அளிக்கும். இந்தியச் சட்டத்திற்கு இணங்காத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இங்குச் செயல்பட அனுமதி இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆன்லைன் கேம்களிலும் ரிஜிஸ்டிரேஷன் மார்கை காட்சிப்படுத்த வேண்டும்.
- மேலும், பணம் டெபாசிட் செய்வது.. அதை திரும்ப எடுப்பது ஆகியவற்றில் இருக்கும் விதிமுறைகளைத் தெளிவாகப் பயனாளர்களுக்குத் தெரியும்படி இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
- மேலும், பரிசுத் தொகை எப்படி வழங்கப்படும், கூடுதல் கட்டணங்கள் என்ன, யூசர்கள் சரிபார்ப்பு என்று அனைத்து விதமான தகவல்களும் அதில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் ஐடி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும். இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் தான் பயனாளர்களிடம் இருந்து பெறும் புகார்களை நிவர்த்தி செய்யும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த விரிவான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் ஜன.17ஆம் தேதி வரை பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து அன்று முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
- மத்திய அரசின் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
- அதன்படி, இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்(ஆர்பிஐ) தாக்கல் செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.
- அதன்படி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
- அதன்படி, பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (ஜனவரி 2) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அமர்வின் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- அவர்கள் தங்கள் தீரப்பில், "சரியாக ஆலோசித்துதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதேபோல எல்லா பணத்தையும் மதிப்பிழப்பு செய்யாமல் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
- நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் அளித்தது நியாயமானதுதான். பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்திருப்பதை கவனிக்க முடிகிறது.
- எனவே, பணமதிப்பிழப்பு முடிவை இனி திரும்பப் பெற முடியாது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்" எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
- இதில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். "ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே? இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், இதுகுறித்து முடிவு எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தீர்ப்பளித்துள்ளார்.
- காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு நிதி அளிக்க அரசாங்கம் தமிழ்நாடு பசுமை காலநிலை நிதியத்தை ரூ.1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக பசுமை நிதியத்துக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்க நிதி திரட்டுவதற்கு பசுமை நிதியம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய ஆயுர்வேத அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ தேசிய ஆணையம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில், ஸ்மார்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளன.
- நாடு முழுவதும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் வாயிலாக, சுகாதார ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
- இந்தத்திட்டத்தை இந்திய மருத்துவ தேசிய ஆணையத்தின் தலைவர் திரு வைத்திய ஜெயந்த் தியோபூஜாரி, ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சிலின் இயக்குனர் பேராசிரியர் ரவிநாராயண் ஆச்சாரியா ஆகியோர் புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர்.
- ஆயுர்வேத வாரியத்தலைவர் பேராசிரியர் பிஎஸ் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- 2022-23ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்திய ரயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் 1109.38 மெட்ரிக்டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், 1029.96 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
- இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதே போல், இந்த நிதியாண்டுக்கான வருமானம் ரூ.120478 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கான வருமானம் ரூ. 104040 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் வருமானம் 16 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
- 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 126.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில், 2022 டிசம்பர் மாதத்தில் 130.66 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
- இதன் மூலம் சரக்குகளை கையாளுதல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிடைத்த வருவாய் ரூ.12914 கோடியாக இருந்த நிலையில், 22-ம் ஆண்டுக்கான டிசம்பர் மாத வருமானம் ரூ.14573 கோடியாக உள்ளது.
- இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே வருவாய் 71% அதிகரித்துள்ளது
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரயில்வே 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.28569 கோடி ஈட்டியிருந்தது.
- 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 56.05 கோடியாக இருந்தது.
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 46 சதவீதம் அதிகமாக ரூ.38483 கோடி ரூபாய் ஈட்டியது. அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26400 கோடி ஈட்டியிருந்தது.
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40197 லட்சமாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை 16,968 ஆக இருந்தது.
- 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பயணிகள் மூலமான வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10.430 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2169 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.