TNPSC 20th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
TNPSCSHOUTERSJanuary 21, 2023
0
2022ம் ஆண்டின் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் தேர்வு
போலீஸ் ஸ்டேஷனின் தரத்தை உயர்த்தவும், மக்களிடையே நட்புறவுமிக்கதாக மாற்றவும், மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.
குற்ற விகிதம், விசாரணை, வழக்குகளின் தீர்வு, உள்கட்டமைப்பு, பொது சேவை உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்துக்களும் இடம்பெறும். இந்த வகையில் தர வரிசைப்படுத்தியதில், ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டம் அஸ்கா போலீஸ் ஸ்டேஷன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கான பாராட்டு சான்றிதழையும், விருதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்க, அஸ்கா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமார் சாஹு பெற்றுக்கொண்டார்.
71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை பிரதமர் மோடி
வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தற்போது 3வது கட்டமாக ரோஜ்கர் மேளாவில் மேலும் 71,426 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காணொலி வாயிலாக நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
மாநில டிஜிபிக்கள், ஐஜிக்கள் கூட்டம் 2023 டெல்லியில் தொடங்கியது
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தலைவர்களின் ஆண்டு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்த கூட்டம் தலைநருக்கு வெளியே நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த முறை கூட்டம் டெல்லியின் புசாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகின்றது. 3 நாள் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த டிஜிபிக்கள், ஐஜிக்கள் மற்றும் துணை ராணுவ அமைப்பை சேர்ந்த 350 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் சைபர் பாதுகாப்பு, போதைப்பொருட்களுக்கு எதிரான போர், எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.
மேலும் காலிஸ்தான் தீவிரவாதிகள், பொருளாதாரத்திற்கான ஆபத்து, கிரிப்டோகரன்சி, மாவோயிஸ்ட் தீவிரவாதம் மற்றும் இதர பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டிலேயே முதன்முதலாக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு
நாட்டிலேயே முதன்முதலாக அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் மாணவிகள் தங்கள் செமஸ்டர் தேர்வில் பங்கேற்கலாம்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எகிப்து ராணுவ சிறப்பு படைகளிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி - சைக்லோன்-I”
“சைக்லோன்-I” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா-எகிப்து ராணுவ சிறப்பு படைகளிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தீவிரவாத எதிர் தாக்குதல், சோதனைகள் மற்றும் இதர சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாலைவனப் பகுதிகளில் சிறப்பு படைகளின் இயங்குதன்மை மற்றும் தொழில்சார் திறன்களை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துவது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இரு நாடுகளின் சிறப்பு படைகளை பொதுவான தளத்தில் இணைக்கும் இது போன்ற பயிற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
14 நாட்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனங்களில் வீரர்களுக்கு மேம்பட்ட சிறப்பு திறன்களில் பயிற்சி வழங்கப்படும். தீவிரவாத முகாம்கள்/ மறைவிடங்களில் தாக்குதல்களை மேற்கொள்வது போன்ற கூட்டு திட்டமிடல் மற்றும் பயிற்சிகளையும் வீரர்கள் மேற்கொள்வார்கள்.
இரு ராணுவங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த புரிதலை இந்தக் கூட்டு பயிற்சி அளிப்பதோடு, அதன் வாயிலாக இந்தியா -எகிப்து இடையேயான தூதரக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மைக்கும் வழிவகை செய்யும்.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் இலக்கு நிர்ணயிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் தொடர்பாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.