22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி - 5ம் நாள் முடிவுகள்
- 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளின் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தது.
- இதைத் தொடர்ந்து 5ம் நாளில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினர். இந்திய அணியில் லவ்லி சவ்பே, பிங்கி, நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டிர்கே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
- டேபிள் டென்னிஸ் ஆடவர் அணிப் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வென்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது.
- ஆடவர் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாக்குர் மொத்தம் 346 கிலோ தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றார். கலப்பு பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- இதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை பெற்றுள்ளது.
கோத்தகிரி 'லாங்வுட்' சோலைக்கு கிடைத்தது சர்வதேச அங்கீகாரம்
- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர மையப்பகுதியில், 250 ஏக்கர் பரப்பில் லாங்வுட் சோலை அமைந்துள்ளது. இச்சோலை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
- தவிர, 35 மரவகைகள், 12 கொடிகள், ஆறு ஆர்க்கிட்டுகள், 105 பறவையினங்கள், 30 விலங்கினகள் மற்றும் பல அரிய தாவரங்கள்; பூஞ்சைகளின் புகலிடமாக உள்ளது. இதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- நம் மாநிலத்தின் சிறந்த வனமாக உள்ள லாங்வுட் சோலைக்கு, 'குயின்ஸ் கெனோபி' எனப்படும் இங்கிலாந்து நாட்டின், 'உலகளாவிய பசுமை நிழற்குடை' என்ற சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியா - மாலத்தீவு 6 புதிய ஒப்பந்தங்கள் - வீடுகள் கட்ட ரூ.790 கோடி கடன்
- மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அப்போது இரு நாடுகளுக்கு இடையே மாலத்தீவில் திறன் மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, வீட்டு வசதி, பேரிடர் மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு என 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் சோலி கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
- அப்போது பேசிய பிரதமர் மோடி, ''இந்திய நிதி உதவியின் கீழ் மாலத்தீவு தலைநகர் மாலியில் ஏற்கனவே 4 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் 2 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதோடு, மாலத்தீவின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக இந்தியா ரூ.790 கோடி கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். மாலத்தீவிற்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உதவி தேவைப்பட்டாலும், முதல் ஆதரவுக்கரம் நீட்டும் நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்,'' என்றார்.