இலங்கை இடைக்கால அதிபராக ரணில் பதவியேற்பு
- இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக் கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா்.
- போராட்டம் மிகத் தீவிரமான நிலையை எட்டியதால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, தனது அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
- இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராகப் பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ரஷ்ய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு - அமெரிக்க பார்லி.,யில் மசோதா நிறைவேற்றம்
- கடந்த, 2014ல் கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததை கண்டித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அத்துடன் இதர நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை வாங்குவதை தடுக்கும் வகையில் 'காட்சா' சட்டத்தை இயற்றியது.
- இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் செய்த துருக்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
- இதுபற்றி கவலை கொள்ளாத இந்தியா, 2019ல், ரஷ்யாவிடம், 35ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து எஸ் - 400 ஏவுகணை சாதனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது.
- இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது.
- இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ஏவுகணைகளை வாங்குவதற்கான தடையில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் காட்சா சட்ட திருத்த மசோதா, அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இதையடுத்து நடந்த குரல் ஓட்டெடுப்பில் பெரும்பான்மை எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இரு மாநில எல்லை பிரச்னைக்கு தீர்வு: அசாம் - அருணாச்சல் முதல்வர்கள் ஒப்பந்தம்
- இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமானது. அப்போது, பழங்குடியினருக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்கள் ஒருதலைப்பட்சமாக அசாமுக்கு மாற்றப்பட்டது.
- பின்னர், 1987ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்றதும் அமைக்கப்பட்ட முத்தரப்பு கமிட்டி அசாமின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் அருணாச்சல பிரதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு இருவரும் நேற்று சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- அதன்படி, பிரச்னைக்குரிய கிராமங்களின் எண்ணிக்கை 123 ல் இருந்து 86 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும் என்று ஹிமந்தா தெரிவித்தார்.
2022ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியீடு
- சர்வதேச நாடுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு பொதுமக்கள் அதிகமாக விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் அனைத்து நாடுகளிலும் விமான சேவை போக்குவரத்து நடைமுறையில் இருந்து வருகிறது.
- கொரோனா பரவல் காலகட்டத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உலகநாடுகள் பலவும் சர்வதேச விமான சேவைக்கு தடைவிதித்து. அந்த காலக்கட்டங்களில் வெளிநாடுகளில் உள்ள மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்ல கடும் அவதிப்பட்டனர்.
- இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலானது விமான சேவையில் உள்ள நிலைத்தன்மை, அதன் தரம், சேவை, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- இதில் கத்தார் விமான சேவை 'ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்' தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர் நியூ சீலேண்டு மற்றும் எத்திகாடு ஏர்வேய்ஸ் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
- கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கத்தார் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதன் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் போன்ற காரணங்களால் கத்தார் ஏர்லைன் உலகின் சிறந்த விமான சேவை இயக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் கட்டப்பட்ட ஒய் - 3023 துணாகிரி, 17ஏ போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைத்தார்
- கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் கட்டப்பட்ட ஒய்- 3023 துணாகிரி, 17-ஏ போர்க்கப்பலை 2022 ஜூலை 15 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
- கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
- இந்த கப்பல், மேம்பட்ட போர்த்திறன், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் சாதனங்கள் மற்றும் நடைமேடை மேலாண்மை அமைப்புகளை கொண்ட பி17ஏ போர்க்கப்பலின், (ஷிவாலிக் வகை) தொடர்ச்சியாகும். மேலும், பி17ஏ போர்க்கப்பல்கள் கட்டும் பணி மசகான் கப்பல் கட்டும் தளம், ஜிஆர்எஸ்இ ஆகியவற்றின் பல்வேறு நிலைகளில் உள்ளது.
முன்னோடி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக தேசிய நீர்மின் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
- லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் உள்ள மின்துறையில் கார்பன் பயன்பாட்டை குறைப்பது என்ற நாட்டின் உறுதிப்பாட்டிற்கேற்ப, “முன்னோடி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப” மேம்பாடு தொடர்பாக தேசிய நீர்மின் கழகம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் திரு.ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
- லே மாவட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அங்குள்ள தேசிய நீர்மின் கழக விருந்தினர் இல்லத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய, ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட ஹைட்ரஜன் செல் அடிப்படையிலான மைக்ரோ கிரிட் உருவாக்கப்படும். கார்கில் மாவட்டத்திற்கான ஒப்பந்தத்தின்படி, ஹைட்ரஜன் உற்பத்தியை வணிக ரீதியாக அதிகளவில் மேற்கொண்டு லடாக் பிராந்தியத்திற்கு தேவைப்படும் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும்.