ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியா சாம்பியன் - இந்தியாவுக்கு வெண்கலம்
- இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த இத்தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.
- முன்னதாக, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் மோதின. இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்த மனநிறைவுடன் நாடு திரும்புகிறது.
உக்ரைனுக்கு நவீன ராக்கெட் - அமெரிக்கா ஒப்புதல்
- கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
- இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான மாநாடு - தமிழக அரசு புறக்கணிப்பு
- குஜராத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு புதன் (ஜூன் 1) மற்றும் வியாழக்கிழமைகளில் (ஜூன் 2) நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
- குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை, பள்ளி கட்டமைப்புகள் மேம்பாடு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
- மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார்.
- இந்தநிலையில், இன்று முதல் நாள் மாநாடு நடைபெற்ற நிலையில், இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் இருந்து யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
- தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
- மேலும் தமிழக அரசு சார்பில் கல்வித்துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை.
மே 2022 மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்
- கடந்த மே மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயாகும். இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும்.
- கடந்த ஆண்டு மே மாதத்தில் 97 ஆயிரத்து, 821 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது குறைவாகும்.
- கடந்த ஏப்ரலில் வரலாற்று சாதனை அளவாக 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. இதற்கு முந்தைய மார்ச்சில், 1.42 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.
- வரி வசூலை பொறுத்த வரை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதிலிருந்து, நான்காவது மாதமாக 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, மே மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்
- நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
- தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா தளங்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என தமிழக அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.