வன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு செல்லாது - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அப்போதைய அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
100 நாள் வேலை திட்டம் ரூ.949 கோடி ஒதுக்கீடு
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி 100 நாள் வேலை திட்டத்திற்காக 2021-22ம் ஆண்டுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
- அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக இந்த நிதியாண்டு தமிழக அரசு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
- அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் 75 சதவீத நிதியாக ரூ.674.84 கோடியும், மாநில அரசு சார்பில் 25 சதவீத நிதியாக ரூ.224.94 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அசாம் உட்பட 3 மாநிலங்களில் குறிப்பிடத்ததக்க பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் ரத்து - ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு
- நாகலாந்து, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, 'ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்' அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- இதன்மூலம், சந்தேகத்துக்குரிய யாரையும் பாதுகாப்பு படைகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதன் காரணமாக, நாகலாந்து மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் பஸ்சில் சென்ற அப்பாவி தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இந்த சட்டத்தை விலக்குவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
- இந்தியா – பிரான்ஸ் கடற்படைகளுக்கு இடையிலான 20-ஆவது இருதரப்பு கடற்படை பயிற்சியான – ‘வருணா’, அரபிக்கடல் பகுதியில் 30 மார்ச் முதல் – 03 ஏப்ரல் 2022 வரை நடத்தப்படுகிறது.
- இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே இருதரப்பு கடற்படை பயிற்சிகள் 1993 தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கு ‘வருணா’ என 2001 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டு, இந்தியா – பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு உறவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வருகிறது.
- இருநாட்டு கடற்படைகளின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடலோர ரோந்து விமானம், போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
- இந்த கூட்டுப் பயிற்சி இருநாடுகளின் சிறந்த உத்திகளை பரஸ்பரம் மற்றவர் அறிந்து கொள்ள ஒருவாய்ப்பாக அமைந்துள்ளது.