1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்களை கவுரவிக்கும் வகையில் என்சிசி ‘சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி’ மற்றும் ‘கலாச்சாரங்களின் மகா சங்கமம்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது
- இந்தியாவின் 75வது சுதந்திரத்தின் திருவிழாவானா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக தேசிய மாணவர் படை (என்சிசி) ‘சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி’ மற்றும் ‘கலாச்சாரங்களின் மகா சங்கமம்’ ஆகிய நிகழ்ச்சியை நடத்துகிறது.
- இதில் ‘சுதந்திரத்தின் வெற்றிச் சங்கிலி’ நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2021 வரை நடத்தப்படுகிறது. இதில் 1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்கள், நாடு முழுவதும் 75 இடங்களில் கௌரவிக்கப்படுவர்.
- ‘கலாச்சாரங்களின் மகா சங்கமம்’ என்பது டெல்லியில் நடைபெறவுள்ள சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாம். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நபர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கலாச்சார கூறுகளை பரிமாறிக்கொள்வர்.
- இதன் நிறைவு விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு பாடல் 22 மொழிகளில் பாடப்படும் மேலும், வெவ்வேறு மாநிலங்களில் சிறப்பு நடனங்கள் நடைபெறும்.
- 1971 ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை கவுரவிப்பதும், அதை நாட்டு மக்கள் அனைவருக்கும் காண்பிப்பதுமே இந்த மெகா நிகழ்வின் நோக்கமாகும்
- சிறிய அளவிலான தேனீக்களைப் பயன்படுத்தி, யானைகள்-மனிதர்கள் இடையிலான மோதலைத் தடுக்கும் புதுமைத் திட்டமான RE-HAB (Reducing Elephant-Human Attacks using Bees) கர்நாடகாவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அஸ்ஸாமிலும் இத்திட்டத்தை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
- யானைகள்-மனிதர்கள் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோர்னோய் கிராமத்தில், கதர் கிராமத் தொழில் வாரியத் தலைவர் திரு.வினய் குமார் சக்ஸேனா, வெள்ளிக்கிழமையன்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். உள்ளூர் வனத்துறையினரின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உத்தராகண்டில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கினார் மோடி
- உத்தராகண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் டெல்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- குறிப்பாக டெல்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.8,300 கோடி மதிப்பிலான இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால் டேராடூன்-டெல்லி இடையிலான பயண நேரம் 6 மணியிலிருந்து சுமார் 3 மணி நேரமாகக் குறையும்.
- ஹரித்வார், முசாபர்நகர், ஷாம்லி, யமுனாநகர், பாக்பத், மீரட் மற்றும் பரவுத் ஆகிய 7 முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும்.
- இந்த வழித்தடத்தில், வனவிலங்குகளின் நடமாட்டம் பாதிக்கப்படாத வகையில் ஆசியாவின் மிகப்பெரிய வனப்பகுதி உயர்மட்ட பாலமும் (12 கி.மீ.) 340 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமையும்.
- டேராடூன்-பான்டா சாஹிப் (இமாச்சல பிரதேசம்) இடையிலான சாலை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் திட்ட மதிப்பு ரூ.1,700 கோடி ஆகும்.
நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகள் உ.பி.யில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
- உத்தரப் பிரதேசத்தின் அமேதிதொகுதியில் கோர்வா எனுமிடத்தில் அமைந்துள்ள அரசு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில், நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு அதிக திறன் மிக்க 5 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்கின்றன. அதிலிருந்து இப்போது அடுத்த கட்டமாக நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.
- 7.62 மி.மீ. அளவிலான துப்பாக்கி தோட்டாக்களை வெளிப்படுத்தும் வகையில் அதிக திறன்மிக்கதாகவும், குறைந்த அளவாக 5.56 மி.மீ. சுற்றளவைக் கொண்டவையாகவும் இவை விளங்குகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணித மேதைக்கு அமெரிக்கா விருது
- அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிரபல இந்திய அமெரிக்க கணித மேதை மற்றும் ஆசிரியர் நிகில் ஸ்ரீவத்சவா பணிபுரிந்து வருகிறார். உலக அளவில் தீர்க்க முடியாத பல கணித புதிர்களுக்கு தீர்வு கண்டுபிடித்த இவர் இணையத்தில் புகழ் பெற்றார்.
- தற்போது இவர் சிப்ரியான் ஃபோயாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது ஆண்டுதோறும் அமெரிக்க கணிதவியல் அமைப்பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நிகில் ஸ்ரீவத்ஸவா தவிர மார்க்கஸ் மற்றும் டேனியல் ஸ்பெயின்மேன் ஆகிய கணித பேராசிரியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- 'பாலினாமியல்ஸ் மற்றும் காடிசன் சிங்கர் பிராப்ளம் பண்புகள் இரண்டாம் பகுதி' என்கிற தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காக இந்த மூன்று கணித மேதைகளுக்கு அவர்களது கணித அறிவை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
அசாம் மாநில விருதுகள் 2021
- சமூகத்திற்கு அளித்த சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதுக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ரத்தன் டாடாவுக்கு அசாம் பைபவ் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும், லோவ்லினாவிற்கு அசாம் செளரவ் விருதுடன் ரூ.4 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் அசாம் கெளரவ் விருதுடன் ரூ.3 லட்சமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்வர்கதேயோ சாவுலுங் சுகபாவின் ஆட்சியை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் அஜாஸ் படேல்
- மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயஸ், சாஹா, அஸ்வின், அக்சர், ஜெயந்த் யாதவ், சிராஜ் என பத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.
- 47.5 ஓவர்கள் வீசி 119 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதில் 12 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.
- லேகர் மற்றும் கும்ப்ளே என இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அஜாஸ், முதல் இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.சி.ஏ., தலைவர் லட்சுமண்
- பெங்களூருவில், தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) உள்ளது. இதன் தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் என்.சி.ஏ., புதிய தலைவராக லட்சுமண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர், வரும் டிச. 13ல் பெங்களூருவில் பொறுப்பேற்க உள்ளார். தவிர இவர், வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினருடன் செல்ல உள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடுதலில் மனுபாகர் 'சாம்பியன்'
- டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 64வது சீசன் நடக்கிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ஹரியானாவின் மனுபாகர், 241.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
- இது, கடந்த நான்கு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் மனுபாகர் கைப்பற்றிய மூன்றாவது தங்கம் (2017, 2019, 2021).
- இவர், 2018ல் நடந்த 62வது சீசன் பைனலில் ஈஷா சிங்கிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இம்முறை 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீ நிவேதா, ஐதராபாத்தின் ஈஷா சிங் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - இந்திய மகளிருக்கு வெண்கலம்
- மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மகளிா் பிரிவில் இந்தியாவும்-ஹாங்காங்கும் மோதின.
- இதில் நம்பா் ஒன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இருந்த நிலையிலும் 1-2 என்ற கேம் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையே கைப்பற்றியது.