67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா
- டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தொடங்கியது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர்.
- இந்நிலையில் 'அசுரன்' படத்துக்காக தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார்.
- வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.
- இதனையடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
- மேலும் கண்ணான கண்ணே. (விஸ்வாசம்) பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், 'கேடி (எ) கருப்பு துரை' என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
- இதைப்போல 'போன்ஸ்லே' என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், 'மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி' மற்றும் 'பங்கா' ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர்.
- இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, 'மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம்' என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.
தாதா சாகேப் பால்கே விருது
- இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறுகிறார்.
சமூக நலன், கருவூல கணக்கு துறைகளுக்கு ரூ.26.47 கோடியில் கட்டிடங்கள் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
- வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படும்போது முதலில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதால், இந்த மையங்கள் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டு வருகின்றன.
- அந்த வகையில் கரூர், கிருஷ்ணகிரி, திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் தலா ரூ.48 லட்சம், நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 86 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
- மேலும், பெண்கள் பணிநிமித்தம் நகரங்களுக்கு இடம்பெயரும் நிலையில், அவர்கள் நலனைப் பாதுகாக்க மாநிலம் முழுவதும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தஞ்சை மாவட்டம் நாஞ்சிக் கோட்டையில் ரூ.1.47 கோடி மதிப்பில், பணிபுரியும் மகளிர்விடுதி கட்டப்பட்டுள்ளது.
- சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநரகம் சார்பில், சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு 2-ம் கட்டமாக 17,567 சதுர அடிபரப்பில் ரூ.4.53 கோடி செலவில், கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- இதேபோல, கருவூல கணக்குத் துறை சார்பில் ரூ.15.11 கோடியில் திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் மாவட்ட கருவூல அலுவலகக் கட்டிடங்கள், மண்ணச்சநல்லூர், பூந்தமல்லி, மயிலாடுதுறை, திண்டிவனத்தில் சார்நிலை கருவூலக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
- புதிய கட்டிடங்களை காணொலிவாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கீதாஜீவன், பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ - பிசிசிஐ அறிவிப்பு
- 2022 ஐபிஎல் சீசனில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க முடிவு செய்த பிசிசிஐ, இதற்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்டது.
- விண்ணப்ப கட்டணம் 10 லட்சமாகவும், அடிப்படை விலை 2,000 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 22 நிறுவனங்கள் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
- லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் சுமார் 7,000 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் சுமார் 5,200 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ.பி.,யில் 9 மருத்துவ கல்லுாரிகள் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
- உத்தர பிரதேசத்தில் ஒன்பது புதிய மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இங்குள்ள சித்தார்த்நகர், இடா, ஹர்தோய், பிரதாப்கர், பதேபூர், தியோரியா, காஸிபூர், மிர்ஸாபூர் மற்றும் ஜாவ்ன்பூர் மாவட்டங்களில் 2,329 கோடி ரூபாய் செலவில் ஒன்பது அரசு மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன.
- நாட்டின் மிகப் பெரிய சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை தன் சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மேலும், 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் வாராணாசியில் பிரதமர் துவக்கி வைத்தார்.