மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழகத்தில் மாநில திட்டக் குழு, முத்தமிழ் அறிஞர் கலைஞரால், 1971ம் ஆண்டு மே திங்கள் 25ம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.
- மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
- மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.4.2020ல் 'மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக' மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, ஐ.ஏ.எஸ் (ஓய்வு),டி.ஆர்.பி. ராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூகுள், அமேசானுக்கு வரி - ஜி7 நாடுகள் முடிவு
- பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் என கருதப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை, ஜி - 7 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
- ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், பிரிட்டனில், வரும், 11 - 13ல் நடக்க உள்ளது. அதற்கு முன், இந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில், ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதியும் பங்கேற்றார்.
- அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக பல நாடுகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச அளவில் சீரான வரி விதிப்பு முறை குறித்து, நிதியமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- இதன்படி, இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படும் நாடுகளில், குறைந்தபட்சம், 15 சதவீத 'கார்ப்பரேட் டேக்ஸ்' எனப்படும் வர்த்தக வரியை செலுத்த வேண்டும்.
- மேலும், இந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை, அது செயல்படும் நாட்டில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். இதன் வாயிலாக வரி குறைந்த நாடுகளில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை குவிப்பதை தடுக்க முடியும்.
ஐ.நா.,வில் நீடித்த வளர்ச்சி இலக்கு
- வரும், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் அமைதியுடனும், வறுமையின்றி, வளர்ச்சியைப் பெறுவதற்காக, ஐ.நா.,வில், 'நீடித்த வளர்ச்சி இலக்கு' கடந்த, 2015ல் நிர்ணயிக்கப்பட்டது.
- அதன்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, 17 காரணிகள் அவசரமாக செயல்படுத்த வேண்டிய இலக்காக அறிவிக்கப்பட்டன.
- இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு, 115ல் இடத்தில் இருந்த இந்தியா, இரண்டு இடங்கள் பின்தங்கி, 117வது இடத்தைப் பிடித்துள்ளது.
- வறுமை ஒழிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு; பாலின பேதத்தை குறைத்தல்; தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்துதல் ஆகிய காரணி களில் முன்னேற்றம் ஏற்படாததே, இரண்டு இடங்கள் பின்தங்கியதற்கு முக்கிய காரணமாகும்.