மத்திய அரசுக்கு ரூ.99,122 கோடி 'டிவிடெண்டு' வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், வங்கியின் இயக்குனர் குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது.
- இக்கூட்டத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச பொருளாதார சூழல், கொரோனா சவாலை சமாளிக்க, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிதிக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
- மேலும், ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை, ஜுலை - ஜூன் என்ற நடைமுறையில் இருந்து, ஏப்., - மார்ச் ஆக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, கடந்த, 2020 - 21ம் நிதியாண்டின், ஜுலை - மார்ச் வரையிலான ஒன்பது மாத கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
- அதில், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து, மத்திய அரசுக்கு, 99 ஆயிரத்து, 122 கோடி ரூபாய், 'டிவிடெண்டு' வழங்க, இயக்குனர் குழு அனுமதி வழங்கியது.
- மேலும், பிமல் ஜலான் அறிக்கைப்படி, ரிசர்வ் வங்கியின் இடர்பாட்டு நிதியை, 5.50 சதவீதமாக பராமரித்து வரவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெறுப்புணர்வுக்கு எதிரான மசோதாவுக்கு பைடன் ஒப்புதல்
- கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின், அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய நாட்டினருக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்துள்ளன.
- இந்த குற்றங்களை கண்காணித்து களையவும், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட மசோதா, பிரதிநிதிகள் சபையில் சமீபத்தில் நிறைவேறியது.
- புதிய சட்ட மசோதாவுக்கு, அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார்.இதன் வாயிலாக வெறுப்புணர்வு குற்றங்களை கண்காணிக்க, மாகாண அளவில் தனிப் பிரிவுகளும், உதவி மையங்களும் அமைக்கப்படும்.
- சரளமாக ஆங்கிலம் பேச வராத ஆசியர்கள் புகார் தெரிவிக்க, இந்த மையங்கள் உதவியாக இருக்கும். வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தவும், உள்ளூர் போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கவும் இச்சட்டம் வழி செய்யும்.
பாகிஸ்தானில் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் இம்ரான் கான் திறந்துவைத்தாா்
- பாகிஸ்தானின் கராச்சியில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட 1,100 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
- பாகிஸ்தானில் 6 அணுமின் நிலையங்கள் உள்ளன. சீன உதவியுடன் பாகிஸ்தானில் அணுமின் நிலையம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவானதைக் குறிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- கராச்சி நகரில் இருந்து 18 கி.மீ. தொலையில் அரபிக் கடலை ஒட்டி இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கெனவே பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட ஓா் அணு உலையுடன் மின்உற்பத்தி நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், இப்போது கராச்சி-2 என்ற பெயரில் சீனா உதவியுடன் புதிய அணுமின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
13 வழித்தடங்கள், 1,018 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை ரயில்வே சாதனை
- புதுடில்லி நாடு முழுவதும் ஒரே நாளில் 13 வழித்தடங்களில் ஆயிரத்து பதினெட்டு மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை டெலிவரி செய்து இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
- தற்போது வரையில் 208 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 814 டேங்கர்களில் சுமார் 13 ஆயிரத்து 319 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம் உத்தரகண்ட், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ம.பி., ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டில்லி, உ.பி., ஆகிய மாநிலங்கள் பயன் அடைந்து வருகின்றன.
புளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வரும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
- புளூம்பர்க் வெளியிட்ட ஆசிய பணக்காரர் பட்டியலில் இவருடைய சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலர் என சொல்லப்பட்டிருக்கிறது.
- முதலிடத்தில் 76.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இருக்கிறார். உலகளாவிய பணக்காரர்கள் தரவரிசையில் முகேஷ் அம்பானி 13-வது இடத்திலும், கெளதம் அதானி 14-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
தனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்திய வங்கதேசம்
- சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையில் தவித்து வந்த வங்கதேசம் தற்போது சீராக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று மத்தியிலும் வங்கதேசத்தில் தனிநபர் வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் திட்ட அமைச்சர் எம்.ஏ.மன்னன் தெரிவித்தார்.
- 2020-21 ஆம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,064 ஆக இருந்தது.
- வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது 280 டாலர்கள் அதிகமாகும். இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 1947 டாலர்களாக உள்ளது.
- தற்போது வங்கதேசத்தின் தனிநபர் வளர்ச்சி விகிதம் 9% ஆக உயர்ந்துள்ள நிலையில் 2007 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ் கொரோனா ஆலோசனை ஹெல்ப்லைன் '14443'
- கொரோனா தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆயுஷ் அடிப்படையிலான அணுகுமுறைகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்காக 14443 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றை மத்திய ஆயுஷ் அமைச்சகம் துவக்கியுள்ளது.
- கட்டணமில்லா இந்தத் தொலைபேசி ஹெல்ப்லைன் எண் 14443 - இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும்.
- இந்த ஹெல்ப்லைன் மூலம் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு சொல்வார்கள்.
- இந்த வல்லுநர்கள், நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.
- ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆயுஷ் அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
`ஃபார்ச்சூன்' பத்திரிகையின் `உலகின் சிறந்த 50 தலைவர்கள்' பட்டியல்
- ஒவ்வோர் ஆண்டும் `ஃபார்ச்சூன்' பத்திரிகை உலகின் தலைசிறந்த 50 தலைவர்களைத் தேர்வு செய்து வெளியிட்டு அவர்களைக் கௌரவித்து வருகிறது.
- குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்து விளங்குபவர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் அபர்ணா ஹெக்டேவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அவர் 15-வது இடம்பெற்றுள்ளார்.
- `ஃபார்ச்சூன்' பத்திரிகையின் 50 பேர் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிண்டா, அமெரிக்க அரசியல்வாதி ஸ்டேன்சி ஆப்ராம்ஸ், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவாலா ஆகியோர் பெயர்களுடம் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
24 ஆம் தேதி உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டிய ஓமன்
- வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வரும் 24 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் 26 ஆம் தேதி மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய கடற்கரையை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்த புயல் தீவிர, அதிதீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயர்சூட்டப்படும்.
- இது ஓமனால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும். புயலால் தமிழகத்திற்கு நேரடியாக வாய்ப்பு இல்லை. மாறாக வெப்பநிலையை அதிகரித்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.