வில்வித்தையில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
- கவுதமாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை முதற்கட்ட தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ், அங்கிதா பகத் ஜோடி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.
- மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்ஸிஸி பிரவுனை எதிர்த்து விளையாடினார். இதில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.
- ஆடவருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரியின் கணவரான அட்டானு தாஸ் இறுதிச் சுற்றில் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் காஸ்ட்ரோவை வீழ்த்தி தங்கம் வென்றார். உலகக் கோப்பை தொடரில் அட்டானு தாஸ் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
- மேலும் ரீகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியா 2009ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது. அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் தனிநபர் பிரிவில் 2 தங்கம் மற்றும் அணிகள் பிரிவில் ஒரு தங்கம் இந்தியா வெல்வதும் இதுவே முதன்முறையாகும்.
- உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவுக்கு கூகுள் 135 கோடி நிதியுதவி
- கொரோனா 2வது அலையால் பாதித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி அறிவிக்க தொடங்கி உள்ளன. கூகுள் நிறுவனம் நேற்று ரூ.135 கோடி நிதியுதவியை அறிவித்தது.
- 'கிவ் இந்தியா அமைப்பும், யுனிசெப் நிறுவனமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெருக்கடியால் சிக்கி தவிக்கும் குடும்பங்களுக்கு, கூகுள் நிறுவனத்தின் நிதியுதவியை பயன்படுத்தி உதவிகள் வழங்கும்.
- மேலும், கொரோனா பரிசோதனை உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்கித் தரவும் இதை பயன்படுத்தும்.
4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது ஸ்பேஸ்-எக்ஸ்
- அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு அமைப்புடன் இணைந்து, 4 வீரர்களை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிக்கு அனுப்பியது.
- ஏப்ரல் 23 அன்று 3வது முறையாக பூமிக்கு சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நான்கு பேரை அனுப்புகிறது ஸ்பேஸ்-எக்ஸ். அவர்களில் 2 பேர் அமெரிக்காவையும், ஒருவர் ஜப்பானையும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள்.
- ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட விண்வெளி ஓடத்தை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, அதில் மனிதர்கள் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதல்முறையாகும்.