பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு உதவ மாநகர காவல்துறை சார்பில் தோழி திட்டம் போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் தோழி என்ற திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
- சென்னை மாநகர காவல் எல்லையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் புகார்கள் வருகிறது.
- புகாரின்படி அனைத்து மகளிர் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
- பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ பாதுகாப்பு வழங்கிட மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி தோழி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த திட்டத்தையும், அதற்கான குறும்படத்தையும் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
- தோழி திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் வகையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள 2 பெண் காவலர்கள் வீதம் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- அவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.
- இதனால் தேர்வு செய்யப்பட்டுள்ள 70 பெண் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
- அதைதொடர்ந்து 70 பெண் காவலர்களும் அவரவர் காவல் நிலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
அணைகள் புனரமைப்புக்கு ரூ.461 கோடிக்கு அனுமதி
- உலக வங்கி நிதியுதவியுடன், அணைகள் புனரமைப்பு இரண்டாம் கட்ட பணியை, 461 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
- நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு, 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் அருகேயுள்ள அணைகளில், தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
- மின் வாரிய கட்டுப்பாட்டில், 38 அணைகள் உள்ளன.அவை கட்டப்பட்டு, பல ஆண்டுகளாவதால் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், நீர் கசிவு ஏற்படுவதால், முழு கொள்ளளவு நீரை தேக்க முடியவில்லை.
- இதையடுத்து, உலக வங்கி நிதியுதவியுடன் அணைகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, 260 கோடி ரூபாய் செலவில், 20 அணைகளில் புனரமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
- இரண்டாம் கட்டமாக, 18 அணைகளில், அந்த பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதனுடன், முதல் கட்டத்தில் இடம்பெற்ற, ஒன்பது அணைகளில், அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட கூடுதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- இரண்டாம் கட்ட பணிகளை, 461 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, தற்போது, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில், உலக வங்கி, 70 சதவீதம் கடனாக வழங்கும். மீதி தொகையை, தமிழக அரசு வழங்கும்.
எலகங்கா விமானப்படை திடலில் சர்வதேச விமான கண்காட்சி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார்
- வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை திடலில் நேற்று காலை தொடங்கியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.
- இதில் இந்திய போர் விமானம் சாரஸ், சாரங்க் உள்பட பல விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில் மட்டுமே பிரமாண்ட விமான கண்காட்சி நடத்தப்படுகிறது.
- மாநகரின் எலகங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறுவது 13வது சர்வதேச விமான கண்காட்சியாகும்.
- பிப்ரவரி 5ம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 463 மற்றும் 14 நாடுகளை சேர்ந்த 78 பேர் என மொத்தம் 541 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானமான சுகோய், சாரங்க், ரபேல், ஏஇடப்ளிவ் அண்ட் சி, யகோட் லான்ஸ், அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1 என், எம்ஐ 17, சுகோய் 30 எம்கே.ஐ, ஆண்டனோவா 132 டி, ஹாக் ஐ, எச்டிடி 40 உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீதர் வேம்பு நியமனம்
- தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செயல்பட்டு வரும் ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு உறுப்பினராகச் செயல்படுவார்.
- தஞ்சாவூரிலுள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்கா, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணியாற்றி வந்த அவர், கிராமப்புறங்களைத் தொழில்நுட்பம் சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, சோஹோ என்னும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினார். தற்போது அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட எட்டு நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.