- பிளாஸ்டிக் மற்றும் அதன் கழிவுப் பொருட்கள் உலகின் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் அதிகம் என்பதால், அவற்றை தமிழக அரசு ஏற்கனவே தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், அவற்றின் மூலப்பொருட்களை தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- எந்தெந்த கலவைகளைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே, அதற்கேற்ப அவற்றை மறுசுழற்சி செய்ய முடியும்.
- அந்தவகையில் பிளாஸ்டிக் கழிவுபொருட்களை அடையாளம் காண்பதில் நடைமுறைச் சிக்கல் இருந்து வருகிறது. இந்த சிக்கலுக்கு விடையளிக்கும் விதமாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் புதிதாக லேசர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
- அந்தக் கருவி எந்த வகை பிளாஸ்டிக் மற்றும் அவற்றின் தரத்தின் தெளிவாக கண்டறிகிறது. ஆய்வாளர்களின் கூற்றின்படி, 97 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகளை அடையாளம் காண, புதிய கருவி பயன்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ராஜேந்தர் ஜன்ஜூரி , மற்றும் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் லேசர் - இன்டியூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோ ஸ்கோபி முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளின் தகவல்களை பெற்றுள்ளனர்.
- தெலங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த அவர்கள் புதிதாக கண்டுபிடித்த கருவியில் LIBS முறை மூலம் ஆய்வுக்குட்படுத்தினர்.
- அப்போது, ஆச்சர்யப்படும் வகையில் 97 விழுக்காடு அளவு மறுசுழற்சிக்கு உட்படுத்த ஏதுவான பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிந்துள்ளது. இது குறித்து பேசிய இருவரும், வரும் காலத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி அதிகரிக்கும்போது இந்த இயந்திரத்தின் தேவையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- அவர்கள் இருவரும் தங்களின் ஆய்வுக்கு 'Low-Cost Sorting of Plastic Waste என பெயரிட்டுள்ளனர். அந்த ஆய்வு Optical Society of America இதழில் வெளியாகியுள்ளது.