நெய்வேலி சுரங்க நீரை குடியிருப்புகளுக்கு வழங்க ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடிமதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- இதன்மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள், மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களில் 625 ஊரக குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 5.58 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சியில் ரூ.9.54கோடி குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரைக் கொண்டு ரூ.20.34 கோடியில் திண்டுக்கல் மாவட்டம்குஜிலியம்பாறை ஒன்றியத்தை சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக் கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சை, கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.59.93 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் ரூ.2.98 கோடி, காங்கயம் நகராட்சியில் ரூ.2 கோடி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.2.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.
- சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.69.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம், திருவல்லிக்கேணி மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற சமூக சுகாதார மையத்துக்கு ரூ.67 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள முதல் தளம் என ரூ.89.22 கோடிமதிப்பிலான திட்டங்கள், கட்டிடங்களை தொடங்கி வைத்தார்.
மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
- மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான, 'லெஜியன் ஆப் மெரிட்' என்ற விருதை அதிபர் டிரம்ப் வழங்கி கவுரவித்துள்ளார்.
- இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தியதற்காகவும், உலகளவில் இந்தியாவை சக்தியுள்ள நாடாக உயர்த்தியதற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓபிரைனிடம் இருந்து பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார். இதேபோல், ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவிற்கும் இதே விருது வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தமிழக அரசு கூடுதலாக ரூ.1,805 கோடி ஒதுக்கீடு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான தொகை ரூ.1,20,000. இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.72 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48 ஆயிரம்.
- இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது.
- இத்தொகையுடன் ஒரு வீட்டிற்கான மொத்த தொகை ரூ.1,70,000. இந்த தொகையுடன் கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12,000 ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
- தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட தொகையினைக் கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும், தகுதியான குடும்பங்கள் வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. எனவே தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
- இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12,000 சேர்த்து மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,75,040 வழங்கப்படும்.
- இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர்.
திருப்பத்தூர் அருகே கி.பி.751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு
- திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டம், குண்டு ரெட்டியூர் மலைச்சரிவில் கள ஆய்வு நடத்தியபோது சுமார் 1,270 ஆண்டுகள் முந்தைய, பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டைக் கண்டெடுத்துள்ளனர்.
- இதில், ஆயுதங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஊது குழாய்கள், தக்களிகள், கல்மணிகள், உடைந்த வளையல்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேரிக்கப்பட்டு தூய நெஞ்சக்கல்லூரி நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குண்டு ரெட்டியூரில் முறையாக அகழாய்வு நடத்தவும் அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பியுள்ளோம்.
- இந்நிலையில், குண்டு ரெட்டியூரில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தியபோது, மலைச்சரிவில் அடர்ந்து புதர்களுக்கு இடையே பாறைக்குன்றின் பக்கவாட்டில் 'பள்ளிச்சந்தம் வட்டெழுத்து' கல்வெட்டு கண்டெடுத்தோம். இந்தக் கல்வெட்டு, தூய தமிழ் வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
- இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட 'பள்ளிச்சந்தம்' என்பதைக் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. அக்காலத்தில் பள்ளிச்சந்தம் என்பது, பிரமதேயம், தேவதானம் போல சமண சமயத்தார்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பதாகும்.
- ஸ்ரீ புருஷ வர்மன் என்ற மேலைக்கங்க மரபைச் சார்ந்த மன்னனின் 25-ம் ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகும். ஸ்ரீ புருஷவர்மன் மன்னன் தெற்கு கர்நாடகம் மற்றும் வட தமிழகத்தை ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.பி.726 முதல் கி.பி.788 வரையாகும். இக்கல்வெட்டு கி.பி 751-ல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,270 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.
- ஸ்ரீ புருஷ வர்மனின் நடுகற்கள் தருமபுரி மாவட்டம், பாலவாடி மற்றும் இண்டூர் பகுதிகளில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கி.பி. 736 மற்றும் 747 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவையாகும். குண்டு ரெட்டியூரில் நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
- இக்கல்வெட்டில் உள்ள வட்டெழுத்துகள் தூய தமிழ் நடையினைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன. 'ஸ்வஸ்திஸ்ரீ' என்ற சொல்லை 'சுவத்திரிசிரி' என்றும் புருஷவர்மன் என்பதை 'புருசவிக்கிரமபருமர்' என்றும் தமிழ்ப்படுத்திக் குறிப்பிட்டுள்ளனர். கங்க மன்னர்கள் சிறந்த சமணப் பற்றாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சிறந்த சான்றாகும்.