தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க புதிய ஆணையம் அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- நாடு முழுவதும் மக்கள் குறைகளை தீர்ப்பதற்காகவும், அரசு சார்ந்த துறைகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும் பல்வேறு தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.
- குறிப்பாக, இந்த உறுப்பினர்கள் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
- இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில நாட்களுக்கு முன்பாக தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அறிவித்தது.
- தேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய நிறுவனங்களுக்கான தீர்ப்பாயம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 19 தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, 'தேசிய தீர்ப்பாய ஆணையம்' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
- அந்த ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் நபர் இடம் பெற வேண்டும்.
- இந்த புதிய ஆணையம் அளிக்கும் பரிந்துரையை மூன்று மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
- தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகளையே, இந்த ஆணையமும் பின்பற்றப்பட வேண்டும்.
- பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணி புரிந்தவர்கள், இந்த தீர்ப்பாயங்களில் உறுப்பினராக தகுதி உடையவர்கள்.
புல்லட் ரயில் திட்டத்திற்கு 25 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்து
- ஜப்பான் உதவியுடன் அகமதாபாத் - மும்பை இடையே 508 கிமீ தொலைவுக்கு புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் ரூ.98,805 கோடியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த 2017ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2023ல் முடித்து, 2024ல் புல்லட் ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. புல்லட் ரயில் வரும் பட்சத்தில் அகமதாபாத் - மும்பை இடையே தற்போது 7 மணி நேரமாக உள்ள பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும். மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும்.
- இதில், குஜராத் மாநிலத்தில் 325 கிமீ தொலைவுக்கு புல்லட் ரயிலுக்கான உட்கட்டமைப்பு பணிகளை செய்வதற்காக எல் அண்ட் டி நிறுவனம், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனுடன் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது, நாட்டின் அதிக நிதியில் கையெழுத்தாகி உள்ள அரசு சிவில் ஒப்பந்தம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் GDP 7.5 %
- 2020-21 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ .33.14 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் இந்த அளவு ரூ .35.84 லட்சம் கோடியாக இருந்தது.
- சென்ற வருடம் இதே காலாண்டில் 4.4% வளர்ச்சியை காட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த வருடம் 7.5% குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடுமையான கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக 23.9 சதவீதம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது வளர்ச்சி ஏற்படுவதற்கான அறிகுறிகளை காட்டினாலும், இன்னும் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையில் உள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
முதல்முறையாக நடந்த முதுமலை சரணாலயத்தின் சூழலியல் மதிப்பீடு மதிப்பு ₹14,650 கோடி / ஆண்டு
- மூன்று மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. வங்கப்புலிகள் மற்றும் ஆசிய யானைகளின் சொர்க்கமாக விளங்கிவரும் முதுமலை, பல அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், நீர் வாழ்வுகள், தாவரங்கள் போன்றவற்றின் புகலிடமாகவும் உள்ளது. மேலும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
- இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கானகம் பொருளாதாரத்துக்கும், சமூக நல வாழ்வுக்கும் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவை பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முதல் முறையாகத் திட்டமிடப்பட்டது.
- முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநரின் மேற்பார்வையில், மேகாலயா மாநிலம், பர்னிஹாட் மத்திய வனச் சேவை மையத்தைச் சேர்ந்த பயிற்சி உதவி வனப் பாதுகாவலர் சீனிவாசன், இந்த மதிப்பீடு குறித்த ஆய்வை முதல் முறையாக மேற்கொண்டார்.
- இவற்றின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு ரூ.4,199.55 கோடி மற்றும் காப்பகத்தில் உள்ள பல்வேறு வகை மரங்கள் போன்றவற்றின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.10,454.06 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.