சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்
- மனிதகுல மேம்பாட்டுக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செய்து வரும் சமூகப் பணிகளுக்கு, ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பிரசாந்தி நிலையம், பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- 'கேஷ் கவுன்டர்' இல்லாத பிரமாண்ட மருத்துவமனையில், ஏழைகளுக்கு இலவசமாக, தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் துாய்மையான குடிநீர் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- நல்ல குணங்கள், கருத்துகளை கற்கும் வகையில், இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் மனிதநேய செயல்பாடுகள், உலகெங்கும் ஏற்கனவே பிரசித்தி பெற்றன.
- இந்நிலையில், என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு, சர்வதேச அளவிலான, சிறப்பு ஆலோசனை அங்கீகாரம் அளிக்கும்படி, ஐ.நா., பொருளாதார கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பாதுகாப்பு, மருத்துவம், அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் 2 நாள் பயணமாக டெல்லி வந்தனர். முதல் நாளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
- இதேபோல அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதன்தொடர்ச்சியாக இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாதுகாப்புத் துறை சார்ந்த அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇசிஏ) மிகவும் முக்கியமானது.
- இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஒப்பந்தம் மூலம் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சர்வதேச கடல், வான்வழி போக்குவரத்து குறித்த தகவல்களை இருநாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும். எதிரி நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், படைகளின் நடமாட்டம் குறித்த துல்லியமான விவரங்களை இந்தியா பெற முடியும். இந்த தகவல்களின் மூலம் எதிரி நாடுகளின் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
- பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. குவாட் என்றழைக்கப்படும் இந்த கூட்டணியை வலுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
- இதன் ஒரு பகுதியாகபிஇசிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மிக நெருங்கிய நட்பு நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறது. அந்த நட்பு நாடுகளின்பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
- மேலும், புவி அறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், அஞ்சல் சேவை ஒப்பந்தம், ஆயுர்வேதா - புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவையும் கையெழுத்தாகின. இந்தியா,அமெரிக்கா இடையே ஒட்டுமொத்தமாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
- இதற்கு முன், 2002ல் இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 2016ல் முக்கிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரித்த அமெரிக்கா இரு தரப்பு ராணுவ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்தது.
- 2018ல் தங்களின் ராணுவ தளங்களை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இறுதியாக தற்போது பிஇசிஏ ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு இந்திய குடிமகனும் சொத்துக்கள் வாங்கும் வகையில் புதிய சட்ட திருத்தம்
- ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு இந்திய குடிமகனும் சொத்துக்கள் வாங்கும் வகையில் புதிய சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370ன் 35-ஏ பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
- இதையடுத்து, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தின் கீழ், இந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் இங்கு அசையா சொத்துக்கள் வாங்க முடியாது, அரசு வேலை கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் அமலில் இருந்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, மத்தியில் ஆளும் பாஜ அரசு அங்கு படிப்படியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
- இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச மறுசீரமைப்பு (மத்திய அரசு சட்டங்களை தழுவி) மூன்றாவது ஆணை, 2020ஐ மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழை வெளியிட்டுள்ளது.
- அதில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17வது பிரிவில் உள்ள `மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள்' என்ற வார்த்தையை மட்டும் நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
- அதன்படி, இந்திய குடிமகன்கள் யாரும் காஷ்மீரில் இனிமேல் சொத்துக்கள் வாங்கலாம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
- புதிய சட்ட திருத்தத்தில் விவசாய நிலங்களை, விவசாயிகள் அல்லாதவருக்கு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விவசாய நிலத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் கட்டுவதாக இருந்தால் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் : பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசு உதவும் வகையில் "ஸ்வநிதி திட்டம் " அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, தெருத்தெருவாக சென்று வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ், 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர் 3 லட்சம் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கினார். மேலும், காணொலி காட்சி வாயிலாக அவர்களிடம் கலந்துரையாடினார்.
- மேலும், கடனை முறையாக நேரத்தில் திருப்பிச் செலுத்தும் நபர்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டி மானியம் வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் கீழ் அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த திட்டம் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு, விழிப்பான இந்தியா - வளமான இந்தியா காணொலியில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.
- ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 'விழிப்பான இந்தியா - வளமான இந்தியா' காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
- லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் உரையில், "நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி, சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.
- ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஊழல், அந்நிய செலாவணி முறைகேடு, பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
- ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி, பரிசோதனை, திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது." என்று மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.