2019 - 2020ம் ஆண்டுக்கான போனஸ் மத்திய அமைச்சரவை அனுமதி
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2019-2020ஆம் ஆண்டுக்கான உற்பத்தியோடு இணைந்த போனஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- இதன் மூலம் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, ஈபிஃஎப்ஓ, ஈஎஸ்ஐசி உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 16.97 லட்சம் கெசடட் அல்லாத ஊழியர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ.2796 கோடி செலவாகும்.
- கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்பத்தியோடு சாராத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. 13.70 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அரசுக்கு ரூ.946 கோடி கூடுதலாக செலவாகும்.
- உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் அறிவிப்பால் மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் ரூ.3737 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும்.
வேலையில்லா இளைஞருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க, தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், அமெரிக்க நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அமெரிக்காவின், 'கோர்ஸரா' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில், வேலை வாய்ப்பற்ற, 50 ஆயிரம் நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலமாக, 11 பிரிவுகளில், 4,000-க்கும் அதிகமான பாடங்களில் இலவசமாக குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பல்கலை, கல்லுாரிகள், கூகுள், ஐ.பி.எம்., மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து, பொறியியல், இயந்திரம் கற்றல், கணிதம், வணிகம், கம்ப்யூட்டர் அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்வெளித் துறையில் புதிய ஆய்வு இந்தியா நைஜீரியா இடையே ஒப்பந்தம்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்திட்டது. நைஜீரியாவின் அபுஜாவிலுள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (என்ஏஎஸ்ஆர்டிஏ) கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- பூமியின் தொலையுணர்தல்; செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த வழிசெலுத்தல்; விண்வெளி அறிவியல் சார்ந்த கிரகங்களின் ஆய்வு; விண்கலம், ஏவுகணை வாகனம், விண்வெளி அமைப்பு முதலியவற்றைப் பயன்படுத்துதல்;
- புவிசார் கருவிகள் மற்றும் நுட்பங்கள் போன்ற விண்வெளி தொழில்நுட்பங்களை செயல்முறைப் படுத்துதல் உள்ளிட்ட சாத்திய பகுதிகளில் இருநாடுகளின் ஒத்துழைப்புக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்வெளித் துறை மற்றும் நைஜீரியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து கூட்டு பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு எதிர்கால திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
- மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், பூமியின் தொலையுணர்தல், செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த வழிசெலுத்தல், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட உதவிகரமாக இருக்கும்.
- கூட்டுமுயற்சியில் செயலாக்கப்படும் இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இரு நாடுகளும் முடிவு செய்யும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நைஜீரியா அரசுடன் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் மனிதகுலம் பயனடையும் வகையில் கூட்டு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அனைத்துத் துறைகளும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பயனடையும்.
தமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அனுமதி
- "தமிழ்நாடு முதல்வரின் சீரிய தலைமையின் கீழ் முதலீடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
- முதல்வரின் தலைமையில் இதுவரை, 2 உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23 ஆயிரம் நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் வணிகம் புரிதல் எளிதாக்குதலை மேலும் மேம்படுத்துவதற்காக, பச்சை நிற வகை தொழிற்சாலைகள் நேரடியாக இயக்குவதற்கான இசைவு வழங்குதல் மற்றும் திட்டம் சாராத பகுதிகளில், நிலப் பயன்பாட்டின் வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில் சேர்த்து வணிக எளிதாக்குதல் விதிகளின் கீழ் கருதப்பட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில் கொள்கைச் சீர்திருத்தம் செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.
- இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தலைமையில் இன்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவுக்கான தொழில் முதலீடுகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 49 ஆயிரத்து 3 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது.
- இன்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டங்கள் ஈ.என்.இ.எஸ் டெக்ஸ்டைல் மில் (ராம்ராஜ்) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Seoyon E-HWA Automotive India Private Limited நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டம், Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் ஆகியவையாகும்.
- இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
- மேலும், இந்தக் கூட்டத்தில், ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன".
இந்தியாவின் ஐசிஏஐ மலேசியாவின் மிக்பா இடையே ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் மலேசிய பட்டய பொது கணக்காளர்கள் நிறுவனமான மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், தகுதியுடைய ஐசிஏஐ உறுப்பினர் மிக்பாவிலும், தகுதியுடைய மிக்பா உறுப்பினர் ஐசிஏஐவிலும் இணைந்து கொள்ள வழிவகுக்கும்.
- ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களோடு இருதரப்பு கூட்டு ஏற்படுத்திக்கொள்ள ஐசிஏஐ விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக மிக்பா உடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் மூலம், உரிய முறையில் ஐசிஏஐ சான்றளித்த நபர்களை மிக்பாவும், அதேபோன்று மிக்பா சான்றளித்த உறுப்பினர்களை ஐசிஏஐவும் ஏற்றுக்கொள்ளும்.
கஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989-ஐ ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- இதன் மூலம் நாட்டின் இதர பகுதிகளைப் போல ஜனநாயகத்தின் அனைத்து அடிமட்ட நிலைகளையும் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.