மருத்துவ துறையை கடந்த 64 ஆண்டுகளாக நிர்வாகம் செய்து வந்த, 'இந்திய மருத்துவ கவுன்சில்' (எம்சிஐ) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக 'தேசிய மருத்துவ ஆணையம்' (என்எம்சி) அமலுக்கு வந்தது.
மருத்துவ நிர்வாகம், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை உட்பட மருத்துவம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்காக கடந்த 1956ம் ஆண்டு, 'இந்திய மருத்துவ கவுன்சில்' தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு முற்றிலும் மருத்துவர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த கவுன்சில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்தியாவில் மருத்துவம் படித்து, பணியாற்றும் எவரும் இந்த கவுன்சில் நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இருப்பினும், இந்த கவுன்சிலில் பல்வேறு ஊழல்கள் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், மருத்துவத் துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களைக் கொண்டு வரும் வகையில், கடந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின்படி இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக, 'தேசிய மருத்துவ ஆணையம்' கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவ அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனாலும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் மசோதாவிற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டு, 'தேசிய மருத்துவ ஆணையம்' அமலுக்கு வந்தது. இதன் மூலம், மருத்துவ துறையில் இனிமேல் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தலைவர் சுரேஷ் சர்மா
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் முதல் தலைவராக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை முன்னாள் தலைவர் சுரேஷ் சந்திர சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஆணையத்தின் செயலாளராக ராகேஷ் குமார் வாட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக்குழுவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர். இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள், 22 பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பார்கள்.
தன்னாட்சி வாரியம்
'தேசிய மருத்துவ ஆணையம்' அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, இதுவரை இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை கவனித்து வந்த பணிகள், நான்கு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இவை, தேசிய மருத்துவ ஆணையத்தின் கண்காணிப்பில் மருத்துவ துறைகளை தனித்தனியாக ஒழுங்குப்படுத்தும்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொதுவாக நீட் தேர்வு நடத்தப்படுவதை போல, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதியாண்டில் தேசிய எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் நடத்த உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும். அத்துடன், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த பின்னர் மருத்துவராக பணியாற்றுவதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கான தர நிர்ணய தேர்வாகவும் இது நடத்தப்படும். இந்த தேர்வுக்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.