- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான, உலகின் மிகப்பெரிய மையம், டில்லியில், 10 நாட்களில் கட்டுமானம் முடிக்கப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- இதனால், டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சரத்பூரில், சர்தார் படேல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- டில்லியின் தெற்கு மாவட்ட நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சக உதவியுடன், இந்த மையத்தின் கட்டுமான பணிகளை, 10 நாட்களில் நிறைவு செய்தது. உலக நாடுகளில், மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமாக, இது அமைந்துள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- இதே போல, 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய, சர்தார் படேல் கோவிட் மருத்துவமனையும், துவக்கப்பட்டுள்ளது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே, விமானப்படைக்கு சொந்தமான இடத்தில், 12 நாட்களில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்த மருத்துவமனையை அமைத்துள்ளது.
- இதில், ஐ.சி.யு., எனப்படும், தீவிர சிகிச்சை பிரிவில், 250 படுக்கை வசதி உள்ளது. சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை, டில்லியின் துணை நிலை கவர்னர், அனில் பைஜல், நேற்று தொடங்கி வைத்தார்.
- இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரை, அங்கு அனுமதிக்கும் பணிகள் துவங்கின.சிறப்பு மையத்தை, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் ஆகியோரும் பார்வையிட்டனர்.
- இந்த மையம் 1,700 அடி நீளம் மற்றும், 700 அடி அகலத்தில், 20 கால்பந்து விளையாட்டு திடல்களின் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படும் வகையில் படுக்கை வசதிகள் கொண்டு உள்ளது.
- இதன் நிர்வாக பணிகளை டில்லி அரசும், சிகிச்சை அளிப்பதை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை மருத்துவ பிரிவினரும் கவனிக்க உள்ளனர். முதல்கட்டமாக, 2,000 படுக்கைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை, இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் கையாள்வர்.
- இதற்காக, 170 டாக்டர்கள் மற்றும் சிறப்பு நோய் நிபுணர்களும், 700 நர்ஸ்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- முதல் பிரிவில் நோயாளிகளுக்கும், அடுத்த பிரிவில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்டவர்களுக்கும், மூன்றாவது பிரிவு, பொது பயன்பாட்டுக்களுக்கானது என, பிரிக்கப்பட்டு உள்ளது.
- நோயாளிகளுக்கான பிரிவு, தலா, 88 படுக்கைகளுடன், 119 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள, 100 படுக்கைகளில், 'வென்டிலேட்டர்,' பொருத்தப்பட்டு உள்ளது.
- இங்கு, 18 ஆயிரம், 'டன்' சக்தியுள்ள, குளிர்சாதன வசதியுடன், தரைப்பகுதியில், 'கார்பெட்' மற்றும் மேல் தளத்தில் எளிதில் சுத்தம் செய்யும் வகையில், 'வினைல்' தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
- இங்கு, தனித்தனியாக 900கழிப்பறைகளும், 70 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெறுவோருக்காக, நுாலகம், பல்வேறு விளையாட்டு வசதிகள் உள்ளன.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையம் / WORLD LARGEST CORONA WARD
July 06, 2020
0
Tags