Type Here to Get Search Results !

1st JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா
  • பெங்களூரில் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, புது தில்லியில் இருந்து காணொலி வழியே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன என்றால், அது தனது இளமைப் பருவத்தில் உள்ளது. 
  • இன்னும் பெரிய சாதனைகளை புரிவதற்கு இதுதான் சரியான காலமாகும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மென்மேலும் உயரும் என்று நம்புகிறேன்.
  • கரோனா தீநுண்மி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு, கரோனா பிரச்னையால் உலகம் தத்தளித்துள்ளது. 
  • உலகப் போர்களுக்குப் பிறகு உலகம் மாறியதுபோல, கரோனாவுக்குப் பிறகு உலகம் வேறுமாதிரி இருக்கும். கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரின் பின்னணியில் மருத்துவ சமுதாயமும், கரோனா களப் பணியாளர்களும் இருக்கிறார்கள். இந்தப் போரில், மருத்துவ சமுதாயம் கண்டிப்பாக வெற்றிபெறும்.
  • சுகாதாரத் துறையில் வளர்ச்சி காண்பது முக்கியம்: உலக மயமாக்கலின்போது, பொருளாதாரம் சார்ந்த விவாதம் காணப்பட்டது. 
  • தற்போது, மனிதநேயத்தை மையப்படுத்திய வளர்ச்சி குறித்து உலகம் ஒன்றுகூடிச் சிந்திக்க வேண்டும். சுகாதாரத் துறையில் வளர்ச்சியைக் காண்பது முக்கியம். கடந்த 6 ஆண்டுகளாக சுகாதாரம், மருத்துவக் கல்வியில் ஏராளமான முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
  • சுகாதாரத் துறையில் வருமுன் காப்பது, விலை மலிவு, மருத்துவக் கட்டமைப்பு, திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வருமுன் காப்பதில் யோகா, ஆயுர்வேதம், பொதுவான உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். 
  • வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த 40 ஆயிரம் உடல்நல மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வருமுன் காப்பதில் தூய்மை இந்தியாவின் வெற்றியும் அடங்கியுள்ளது. மலிவான சுகாதார வாய்ப்புகளை அளிப்பதில் இந்தியா சாதித்துள்ளது. 
  • ஆயுள்நிறை இந்தியா (ஆயுஷ்மான்பாரத்) என்ற திட்டத்தில் 2 ஆண்டுகளில் ஒருகோடி பேர் பயனடைந்துள்ளனர். அதிலும் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் தான் அதிகம் பயனடைந்தவர்கள்.
  • இந்தியா போன்ற பரந்த நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவக் கல்விக் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அல்லது முதுநிலை மருத்துவ மையங்களைத் திறக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
  • நாடெங்கும் மேலும் 22 அகில இந்திய மருத்துவ அறிவியல் மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் மருத்துவ இடங்கள், 15 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களைச் சேர்த்திருக்கிறோம். 
  • இந்திய மருத்துவ மன்றத்துக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்திருக்கிறோம். இது மருத்துவக் கல்வித் தரத்தை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்தும். நமது திட்டமிடல்களை அமல்படுத்துவது மிகவும் முக்கியமாகும். மருத்துவத் துறையில் காணப்படும் மருத்துவசார் ஊழியர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்கு சட்டம் கொண்டுவர இருக்கிறோம்.
  • தொலைமருத்துவத்துக்கு (டெலிமெடிசின்) முக்கியத்துவம் அளித்து பிரபலப்படுத்துவது, சுகாதாரத் துறையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • கும்பல் மனோபாவம் காரணமாக, கரோனா தொற்றுநோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மீது சில இடங்களில் வன்முறை ஏவப்பட்டுள்ளது. வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. முன்வரிசை களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் நியமனம்
  • சென்னையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது முதல் கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் எவரும் நியமிக்கப்படாத நிலையில் தற்போது அந்தப் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
  • செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளாக நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படவில்லை. 
  • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பதிவாளர் அ.பழனிவேல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்து வந்தார்.
  • இந்தநிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக, பேராசிரியர் இரா.சந்திரசேகரன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்தப் பதவியில் தொடருவார். 
  • பேராசிரியர் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகில் உள்ள முத்துடையார்பாளையம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
  • ஆய்வு நூல்கள், பாடநூல்கள் என 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்,வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், சமயமும்-தத்துவமும் ஆகிய ஐந்து துறைகளில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சமயம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழாய்வுக்காக 2009-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றுள்ளார்.
சென்னை பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
  • திருவள்ளூா் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. 
  • புதிய டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது 10 ஏக்கா் நிலப்பரப்பில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பில் 21 அடுக்குமாடி கட்டடமாக அமையவுள்ளது. இந்தப் பூங்காவில் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன.
  • தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளா்ச்சியைப் போன்று, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இந்தத் திட்டம் அமையும். இதனைச் சுற்றி தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமாா் 25 ஆயிரம் நபா்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
  • இந்தத் திட்டமானது தமிழகத்தின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வட பகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் அமையும். புதிய தொழில்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என புதிய தொலைநோக்குத் திட்டமாக இது அமையும்.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 
  • இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு அவரவா் இருப்பிடத்தில் இருந்தே நேரடி தொடா்பின்றி இணையதளம் மூலம் விரைவாக ரூ.25 லட்சம் வரை கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 855 போ பதிவு செய்துள்ளனா். மொத்தமாக ரூ.112 கோடி கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.224 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்
  • தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 
  • நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம், திருப்பூா், தஞ்சாவூா் மாவட்டம் திருமலை சமுத்திரம், விழுப்புரம் மாவட்டம் சிட்டம்பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா நிறுவன வளாகம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
  • இதேபோன்று, சேலம் மாவட்டம் பேளூா், தூத்துக்குடி அரசடி, செங்கல்பட்டு மாவட்டம் இந்தளூா், கோவை மாவட்டம் பந்தய சாலை, பட்டணம், நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டான், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கன்னியாகுமரி மாவட்டம் கேப் ஆகிய இடங்களிலும் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த துணை மின் நிலையங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
சுகாதாரத் திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமனம்
  • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்தாா்.
  • எஸ்.நாகராஜன் : தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புதுமை முயற்சிகள் நிறுவனத்தின் இயக்குநா் (தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா்).
  • அஜய் யாதவ் : தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் (சா்க்கரைத் துறை கூடுதல் இயக்குநா்).
  • சந்திரசேகர சகாமுரி: நில சீா்திருத்த இயக்குநா் (நகா் மற்றும் ஊரமைப்புத் துறை இயக்குநா்).
  • தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிா்வாக இயக்குநா் பி.முருகேஷ், நகா் மற்றும் ஊரமைப்புத் துறையின் இயக்குநா் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்
  • நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 பேருந்துகளில் பேடிஎம் வசதி டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம் ; இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
  • மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார உறவுகளுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
  • இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 14 வேளாண் பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSPs) அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ 53 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் ரகங்களின் அடிப்படையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ1868 மற்றும் ரூ1888 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ 70 உயர்த்தப்பட்டு ரகங்களின் அடிப்படையில் ஒரு குவிண்டால் விலை ரூ 2620, ரூ2640 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 
  • கம்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ150 உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரு குவிண்டால் விலை ரூ 2,150; கேழ்வரகின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ145 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் விலை ரூ3, 295 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மக்கா சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ90; துவரைக்கான ஆதார விலை ரூ300; எள்ளுக்கான ஆதார விலை ரூ370; பே எள் எனப்படும் நைஜர் விதை ரகத்துக்கான ஆதார விலை ரூ755 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மொத்தம் 14 வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
  • விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விவசாய பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 
  • சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கடன் வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான கடனுதவியில் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
  • இதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர்.சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைவர். 
  • 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கும், 50 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகைகள் அளிக்கப்படும். சிறு, குறு தொழில் துறையில் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel