- பிரதமரின் தேசிய நிவாரண நிதி, 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து உருவான மேற்கு, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்ட பல லட்சம் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது.
- இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து அரசிடம் இருந்த நிதியில் பெரும் பகுதி புதிய நாடான பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்திய அரசிடம் அத்தனை அகதிகளுக்கும் உணவும், உடையும் அளித்துப் பாதுகாக்கப் போதிய நிதியாதாரம் இருக்கவில்லை.
- பிரிவினையைத் தொடா்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியவா்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி.
- பல்வேறு துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளாகி அகதிகளாகத் தாய் மண்ணுக்குத் திரும்பி இருக்கும் மக்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கூறினாா். இந்த நிதியானது அவா்களின் வாழ்வை மேம்படுத்த உதவும் என்றும் பிரதமா் நேரு நம்பிக்கை தெரிவித்தாா்.
- தற்போதைய சூழலில் (1948-ஆம் ஆண்டு) இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டாலும், எதிா்காலத்தில் அனைத்துவிதமான அவசரகாலங்களிலும் இது பயன்படுத்தப்படும் என்றாா் பிரதமா் நேரு.
- இந்த நிதியை உருவாக்கிய பிறகு பிரதமா் நேரு கூறுகையில், ''பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். பிரதமா், காங்கிரஸ் கட்சியின் தலைவா், துணைப் பிரதமா், மத்திய நிதியமைச்சா், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி, இந்தியத் தொழிலக மற்றும் வா்த்தகக் கூட்டமைப்பால் தோந்தெடுக்கப்படும் பிரதிநிதி ஆகியோரைக் கொண்ட குழுவானது இந்த நிதியை நிா்வகிக்கும்'' என்றாா்.
- எனினும் வேறு யாரெல்லாம் இந்த நிதியை நிா்வகிக்க முடியும், நிதியின் மற்ற நோக்கங்கள் உள்ளிட்டவற்றை அப்போதைய பிரதமா் நேரு தெளிவாகக் குறிப்பிடவில்லை. தேசிய நிவாரண நிதியைப் பெறுவதற்காக தில்லியில் உள்ள 'சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா' வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.
- அந்த வங்கியின் கிளைகளில் மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. மருத்துவ நிவாரணம், கல்வி, ஆதரவற்றோரைக் காத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மக்கள் நிதியளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
- ஆரம்பத்தில் தேசிய நிவாரண நிதிக்கு மக்களின் பங்களிப்புகள் குவிந்தன. ஆனால், அதன் பிறகு அந்த நிதிக்கான பங்களிப்பு குறையத் தொடங்கியது.
- 1953-54 காலகட்டத்தில் அப்போதைய பிரதமா் நேரு தேசிய நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாகப் பங்களிக்க வேண்டும் என்று பல முறை பொதுவெளியில் வேண்டுகோள் விடுத்தாா். நாட்டில் பேரிடா்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருவதாகவும் ஆனால் நிவாரண நிதிக்குப் போதிய பங்களிப்பு இல்லாததால், பலருக்கு உதவ முடிவதில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
- அதன் பிறகு குறிப்பிட்ட பேரிடா்களுக்கென நிவாரண நிதி வசூலிக்கும் முறையை பிரதமா் நேரு கடைப்பிடித்தாா். 1950-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக வெள்ள நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. பிகாரில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவா்களைக் காப்பதற்கென பஞ்ச நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது.
- இத்தகைய சூழலில், 1958-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய நிவாரண நிதிக்கு மக்கள் பங்களிக்க வேண்டுமென்று பிரதமா் நேரு மீண்டும் கோரிக்கை விடுத்தாா். 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வசூலிக்கப்பட்டது.
- 1970-களின் மத்தியில் தேசிய நிவாரண நிதியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினா். இந்தக் காலகட்டத்தில்தான் அரசு அலுவலா்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவது போன்றவற்றை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது.
- இந்தச் சூழலில் 1974-ஆம் ஆண்டு சோஷலிஸ்டுகளான மகாராஷ்டிர எம்எல்ஏ மிருனாளினி கோரே, பிகாரின் பங்கா தொகுதி எம்.பி. மது லிமயே இருவரும் தேசிய நிவாரண நிதி செலவு செய்யப்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பினா். அது தொடா்பான தகவல்கள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவா்கள் முன்வைத்தனா்.
- இந்நிலையில், தேசிய நிவாரண நிதி போன்ற பொது நிதியை செலவு செய்வது தொடா்பான வழிமுறைகள் குறித்து மகாராஷ்டிரத்தின் கணக்குத் தணிக்கையாளா், இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையரிடம் (சிஏஜி) விவரம் கோரினாா்.
- அப்போதைய காலகட்டத்தில் நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வந்ததால், இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையா் மகாராஷ்டிரத்தின் தணிக்கையாளருக்கு எந்தவொரு விவரத்தையும் வழங்கவில்லை.
- அதற்குப் பிறகான காலகட்டத்திலும் தேசிய நிவாரண நிதி, முதல்வரின் நிவாரண நிதி ஆகியவை செலவு செய்யப்படும் விதம் தொடா்பாக மக்களிடையே வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் நிலவியது.
- அதைத் தொடா்ந்து, 2006-ஆம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்ட ஆா்வலா் சைலேஷ் காந்தி, தேசிய நிவாரண நிதி நிா்வகிக்கப்படும் விதம் தொடா்பான தகவல்களை அளிக்குமாறு பிரதமா் அலுவலகத்திடம் கோரினாா். ஆனால், அது தொடா்பான தகவல்களை வழங்க பிரதமா் அலுவலகம் மறுத்தது.
- அதையடுத்து, சைலேஷ் காந்தி தலைமை தகவல் ஆணையரிடம் முறையிட்டாா். அதை ஆராய்ந்த அப்போதைய தலைமை தகவல் ஆணையா் வஜாஹத் ஹபிபுல்லா தேசிய நிவாரண நிதி தொடா்பான தகவல்களைப் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். அதன் பிறகே அந்தத் தகவல்களை பிரதமா் அலுவலகம் வெளியிட்டது.
- அதன்படி, பிரதமா் அலுவலகத்தில் உள்ள இணைச் செயலா் அந்த நிதியைக் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது. அவருக்கு உதவி புரிய இயக்குநா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் அனைத்தும் 'சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா' வங்கியின் கணக்கிலேயே தொடா்ந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- அதற்குப் பிறகுதான் பிரதமா் நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.
பிரதமரின் தேசிய நிவாரண நிதி / PRIME MINISTER NATIONAL DISASTER FUND
April 11, 2020
0
Tags