100 நாள் வேலை திட்டம் நிலுவை ஊதியம் வழங்க ரூ.4,431 கோடி ஒதுக்கீடு: ஏப்.10ம் தேதி கிடைக்கும்
- கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நிலுவை ஊதிய தொகையை வழங்க முதற்கட்டமாக 4,431 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கால், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இக்கட்டான இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 11,499 கோடி மொத்த தொகையில், முதற்கட்டமாக 4,431 கோடி நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்த தொகை வரும் ஏப்ரல் 10ம் தேதி அனைத்து பயனாளர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 8.17 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு ஏற்பட்ட புல்புல் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு கூடுதலாக 5,751 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கேரளா, மகாராஷ்டிரா, பீகார், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை பெறுகின்றன.
கரோனா பாதிப்பு: ரூ.1,500 கோடி வழங்குகிறது டாடா குழுமம்
- கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் ரூ.1,500 கோடியை வழங்க டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது.
- டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ், ரூ.1000 கோடியும் டாடா அறக்கட்டளை ரூ.500 கோடியும் வழங்கவுள்ளன.
- டாடா அறக்கட்டளை அளிக்கவுள்ள நிதியானது, மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கான தற்காப்பு உபகரணங்கள், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க செயற்கை சுவாசக் கருவிகள், நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2% மட்டுமே: இக்ரா
- வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெறும் 2 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளா்ச்சி பெறும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
- முடங்கியுள்ள பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுப்பதற்காக ரிசா்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.5 சதவீதம் பின்னடைவைக் காண அதிக வாய்ப்புகள் உள்ளது.
கொவைட்-19: ரூ.51 கோடி வழங்கியது பிசிசிஐ
- கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது.
- பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெயா ஷா, இதர நிா்வாகிகள் மற்றும் மாநில சங்கங்கள் இணைந்து ரூ.51 கோடி நிவாரண நிதியை வழங்க தீா்மானித்தனா். இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிா்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.