போடி அருகே கற்கால கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
- போடி, அணைக்கரைப்பட்டி அரு மரக்காமலை மலையடிவாரத்தில் பெரும் கற்கால கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இயற்கையாக கிடைக்கும் பலகை கற்களை கொண்டு சதுரம் அல்லது நீள் சதுர வடிவில் சிறு அறை போன்று வடிவத்தில் நிறுத்தி வைப்பர். உள்ளே இறந்தவர்களை வைத்து பின் மூடு பலகை கற்களால் மூடிவிடுவார்கள்.
- சில நேரங்களில் பெரிய கல்லறைகள் அமைக்க வேண்டுமானால் ஒன்றுக்கு மேற்பட்ட பலகைக் கற்களை பயன்படுத்துவார்கள்.
- இக்கல்லறைகள் பரந்த பாறைகள் மேல் அமைப்பதால் அவை சரிந்து விழாமல் இருக்க சிறு, சிறு கற்களை பயன்படுத்தி சுவர் போல் அமைப்பர். ஆறு கல்திட்டைகள் இங்கு சிதைந்த நிலையில் உள்ளன.
- இதில் 2 மூடு பலகை கற்கள் இல்லாமல் உள்ளன. மற்றவைகள் சிதைந்துள்ளன. இதன் மூலம் இப்பகுதி பெரும் கற்காலத்தில் இனக்குழுவாக வாழ்ந்த மனிதனின் வாழ்விடமாக இருந்துள்ளது. இப்பகுதியில் ஒரு குழுவிற்கும், மற்றொரு குழுவிற்கும் இடையே நடந்த சண்டையில் வீரமாக இறந்தவர்களுக்காக அல்லது குழுவின் தலைவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
- கல்திட்டை எல்லா மனிதர்களும் எடுப்பதில்லை. இப்பகுதி மக்கள் இதை குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடு என்கின்றனர். பெருங்கற்காலத்தில் இங்கு மனிதர் வாழ்ந்தற்கு முக்கிய தடயமாக இருப்பதால் மீதமுள்ளவற்றை பாதுகாக்க வேண்டும்.
அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் - மத்திய அரசு ஒப்புதல்
- தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அரியலூருக்கு ரூ.325 கோடி, கள்ளக்குறிச்சிக்கு ரூ.325 கோடி என மொத்தம் 650 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
- இதில், மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை தமிழக சுகாதாரத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் திருக்குறள் 2ஆவது மாநாடு
- உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறை, இதய நிறைவு தியான அமைப்பு ஆகியவை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் கைலாசபதி கலையரங்கில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
- இதைமுன்னிட்டு இலங்கையின் உரும்பிராய் மற்றும் காரைத்தீவு ஆகிய இரண்டு இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த சிற்பி பாலகிருஷ்ணன் இரண்டு சிலைகளை வடிவமைத்தார்.
ஹிந்தி வார்த்தை, 'சம்விதான்' 'ஆக்ஸ்போர்டு' அகராதி தேர்வு
- கடந்த ஆண்டின், 'ஆக்ஸ்போர்டு' ஹிந்தி வார்த்தையாக, 'சம்விதான்' தேர்வு செய்யப்பட்டுள்ளது' என, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் அறிவித்துள்ளது.
- ஆக்ஸ்போர்டு அகராதி குழு, '2019ம் ஆண்டின் ஹிந்தி வார்த்தை' குறித்த தேர்வுக்கான அறிவிப்பை, முகநுாலில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து நுாற்றுக்கணக்கானோர், பலதரப்பட்ட ஹிந்தி வார்த்தைகளை அனுப்பியிருந்தனர். அவற்றை, மொழி வல்லுனர்களின் துணையுடன், ஆக்ஸ்போர்டு அகராதி குழு ஆராய்ந்து, இறுதியில், 'சம்விதான்' என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது.
- ஹிந்தியில், 'சம்விதான்' என்றால், அரசியல் சாசனம் என்று பொருள். இந்த வார்த்தை, 2019ல் அதிகமானோரை ஈர்த்துள்ளது.அரசியல் சாசனம் என்பது, ஜனநாயகம், மதச்சார்பின்மை, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது.'அடிப்படை கொள்கைகளின் முதுகெலும்பு' என, சம்விதான் வார்த்தைக்கு பொருள் கூறலாம்.
- அதன் அடிப்படையில் தான், ஓர் அரசு, நிர்வாகம் செய்ய முடியும்.கடந்தாண்டு ஆகஸ்டில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது, சம்விதான் வார்த்தை, அதிக அளவில் பேசப்பட்டது.
- அடுத்து, சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி, மஹாராஷ்டிராவில் புதிய அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம், கர்நாடக முன்னாள் சபாநாயகரின், 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க உத்தரவு போன்றவற்றின் போதும், சம்விதான் வார்த்தை, அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்காவிற்கான இந்தியா தூதராக தரஞ்சித் சிங் சந்து நியமனம்
- மூத்த தூதர் தரஞ்சித் சிங் சந்தூ அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1988 தொகுதி இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திரு. சந்து தற்போது இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அவர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லாவை வாஷிங்டனில் இந்தியாவின் தூதராக மாற்றியுள்ளார். திரு. ஷ்ரிங்லா இந்தியாவின் அடுத்த வெளியுறவு செயலாளராக பெயரிடப்பட்டார்.
- அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா (Harsh Vardhan Shringla) வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சந்துவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1988 ஆம் ஆண்டு பேட்ச் IFS அதிகாரியான சந்து, 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான இந்திய தூதராக உள்ளார். அதற்கு முன்னர் பல ஆண்டுகள் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தரண்ஜித் சிங் சந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் மெட்ரோ ரயில் சுரங்க பாதை: மேற்கு வங்கத்தில் அமைகிறது
- கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், நகரின் கிழக்கு,மேற்கு பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்காக ஹுக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள், 2022ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அதற்காக 2,000 கோடி ரூபாயை இந்திய ரயில்வ வாரியத்திடம் இருந்து கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பெறுவதற்காக காத்திருக்கிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு ஏற்கனவே 4160 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
- காலதாமதம் காரணமாக மொத்த திட்ட செலவு 14 கிலோ மீட்டருக்கு 4,900 கோடி ரூபாயில் இருந்து 17 கிலோ மீட்டருக்கு 8,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜப்பான் நிறுவனம் இந்த மெட்ரோ சேவையை அமைக்க 48.5 சதவீதம் கடன் கொடுத்துள்ளது.
- ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் நாள்தோறும் 9 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா நகரின் மக்கள் தொகையில் 20 % பேர் தினமும் இந்த நீருக்கடியிலான மெட்ரோவில் பயணம் செய்யும் போது அவர்களின் பயண நேரம் 20 நிமிடங்கள் தான் என்பது கூடுதல் தகவல்.
- மொத்த போக்குவரத்து தேவையில் 40% இந்த இரண்டு மெட்ரோ சேவைகளால் கையாளப்படும். சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்த கொல்கத்தா நகரை பாதுகாக்கலாம் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் மனாஸ் சர்க்கார் கூறி இருக்கிறார்.
'ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை'' என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்..: மோடி பேச்சு
- ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்று குஜராத் காந்திநகரில் உலக உருளைக்கிழங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார். நீர்ப்பாசனத்தில் அறிவியல், தொழில்நுட்ப அணுகு முறைகளை மேற்கொள்ளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்றதாழ்வை குறைத்த டிஜிட்டல் இந்தியா
- ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை சார்பில், சர்வதேச சமூக அறிக்கை - 2020 என்ற ஆய்வு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியாவில், அனைவரும் வங்கி கணக்கு துவங்க, 2014ல், மத்திய அரசு அறிவுறுத்தியது. மொபைல் போன் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது. பல்வேறு துறைகளும், 'டிஜிட்டல்' மயமாக துவங்கின. இதற்கிடையே ஆதார் அட்டை அறிமுகமாகி, அந்த எண், வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டது.
- எனவே, 2015ல், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை, பாதிக்கு பாதியாக குறைந்தது. நாட்டின், 80 சதவீதத்தினர், வங்கி கணக்கு வைத்துள்ள நிலையை, 2017ல் இந்தியா எட்டியது. இங்கு, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டதன் வாயிலாக, ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்துள்ளன.
ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்வு
- மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. முதன்மை அலுவலக கண்காணிப்பாளர் வி.ஸ்ரீதேவி ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் ஜி.எஸ்.டி மத்திய கலால் வரி கணினி போன்றவற்றில் முறையான பயிற்சியாளராக உள்ளார். வரி ஏய்ப்பு எதிர்ப்புப் பணி பில் வர்த்தக வழக்குகள் பதிவு போன்றவற்றில் சாதனை படைத்துள்ளார்.
- ஜி.எஸ்.டி. மத்திய கலால் வரி ஆகியவற்றின் வாயிலாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளார். ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்ட போது அது தொடர்பாக பல்வேறு சேனல்களில் தமிழில் விளக்கமளித்தவர்.
உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு முதலிடம்
- உலகத்திலேயே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெங்களூரூ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. லொகேஷன் டெக்னாலஜி கம்பெனியான டாம் டாம் (டாம்2), உலகம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள் குறித்து ஆய்வை நடத்தியது.
- இந்தியா நகரங்களான பெங்களூரூ முதலிடத்திலும், மும்பை நகரம் 4வது இடத்திலும், புனே 5வது இடத்திலும் , தலைநகர் டில்லி 8வது இடத்திலும் உள்ளன. மேலும் பிலிப்பைன்சின் மணிலா, கொலம்பியாவின் பகோடா, ரஷ்யாவின் மாஸ்கோ, பெருவின் லிமா,துருக்கியின் இஸ்தான்புல், இந்தோனேஷியாவின் ஜகர்த்தா ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
- மேலும், பெங்களூரு மக்கள் ஒரு ஆண்டிற்கு 243 மணிநேரங்களை போக்குவரத்து நெருக்கடியில் கழிக்கின்றனர். அதாவது, 10 நாட்கள் 3 மணிநேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றனர்.
- அதேபோல், மும்பை மக்கள், 209 மணி நேரங்களும், புனே நகரத்தினர் 193 மணிநேரங்களும், டில்லி மக்கள் 190 மணிநேரங்களும் இழக்கின்றனர்.
கருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல்
- 1971ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் படி, 20 வாரங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலஅளவை 26 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாவலனாக அரசு செயல்படுகிறது.
- கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தை, வளர்ச்சியை நிலையை எட்டிய பின்னர், தாய்க்கும் சிசுவுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது மத்திய அரசின் கடமை என குறிப்பிடப்பட்டிருந்தது.
- இந்நிலையில் கருக்கலைப்புக்கான காலஅளவில் மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
- அவர் கூறுகையில், இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 24 வாரங்களாக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது, என்றார்.
- இதன்மூலம் அடுத்த வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரஞ்சி ரவி யாதவ் உலக சாதனை
- இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் (ம.பி.,), உ.பி., அணிகள் இந்துாரில் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் ம.பி., அணி 230 ரன்கள் எடுத்தது.
- இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத், சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள் அறிமுக போட்டியில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினர்.
- சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப், 1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை. 4வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில் இதுபோல சாதித்தார். மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது ரவி யாதவ் மட்டும் தான்.