பத்ம விருதுகள் 2020
- 2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, இந்த ஆண்டு மொத்தமாக 141 பத்ம விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் 7 பத்மவிபூஷண் விருதுகளும், 16 பத்மபூஷண் விருதுகளும், 118 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும்.
- இந்த ஆண்டு பத்ம விருது பெறுவோரில் 34 பேர் பெண்களாவர். வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இறப்புக்குப் பிறகான விருது 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பத்மபூஷண் விருது பெறவுள்ளனர்.
- கர்நாடக இசைக் கலைஞர்களான லலிதா சிதம்பரம் மற்றும் சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாகஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப் மற்றும் ஷேக் மெஹபூப் சுபானி, சென்னை ஐஐடியின் விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
- அத்துடன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸுக்கு பத்மபூஷண் விருதும், டெரகோட்டா சிலை வடிக்கும் கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படவுள்ளது.
- மோரீஷஸ் முன்னாள் பிரதமர் அனிருத் ஜெகந்நாத், பாடகர் சன்னுலால் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மத போதகர் மும்தாஸ் அலி, மறைந்த வங்கதேச தூதர் சையது முவாஸெம் அலி, பாடகர் அஜய் சக்ரவர்த்தி, சமூக சேவகர் அனில் பிரகாஷ் ஜோஷி உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
- பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், மருத்துவர் பத்மாவதி பந்தோபாத்யாய, பாடகர் அட்னான் சமி, தொழிலதிபர் பரத் கோயங்கா உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம்
- பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கும், ராஜஸ்தானிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தீர்மானத்தில், 'நாட்டில் முதன்முறையாக, மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே, இந்த சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்தியா - பிரேசில் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
- டில்லியில் பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் போல்சோனரோ இடையே நடந்த பேச்சு வார்த்தையில், 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. நாட்டின், 70வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி, டில்லியில் நடக்கும் விழாவில், சிறப்பு விருந்தினராக, தென் அமெரிக்க நாடான, பிரேசில் அதிபர் ஜாயிர் மெசியாஸ் போல்சோனரோ பங்கேற்கிறார்.
- வரவேற்பு இதையொட்டி நான்கு நாள் பயணமாக, பிரேசில் அதிபர் போல்சோனரோ தன் மகள் லவுரா, மருமகள் லெடிகா பிர்மோ, எட்டு அமைச்சர்கள், நான்கு எம்.பி.,க்கள், வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடன் முன்தினம் டில்லி வந்தார்.
- பிரேசில் அதிபருக்கு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் பங்கேற்றனர்,முன்னதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரேசில் அதிபரை சந்தித்துப் பேசினார்.
- இந்தியாவும் பிரேசிலும் கூட்டாளிகள். இரு நாடுகளுக்கு இடையே, முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியா - பிரேசில் இடையே, சுகாதாரம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட, 15 துறைகளில், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
- புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியின், 10வது பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. புதிய பதிப்பில், இந்திய மக்களின் தனித்துவ அடையாளமான, ஆதார் உள்ளிட்ட, 26புதிய ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
- கவனம் அதேபோல், 'சால், டப்பா, ஹர்தால், ஷாதி' உள்ளிட்ட இந்திய வார்த்தைகளும், ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.இந்த அகராதியில் மொத்தம், 384 இந்திய ஆங்கில வார்த்தைகள் உள்ளன.
- இந்த பதிப்பில் சாத்பாட், பேக் நியூஸ், மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளிட்ட, 1,000 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதிய, இந்திய ஆங்கில சொற்களாக, பஸ் ஸ்டாண்ட், எப்.ஐ.ஆர்., நான் வெஜ், டீம்டு யுனிவர்சிட்டி, டெம்போ, டியூப் லைட், வெஜ் மற்றும் வீடியோகிராஃப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி புதிய சாதனை
- கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து அணி புதிய மைல்கல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் 1739 முதல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- சர்வதேசப் போட்டிகள் 1877 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. இதுவரை 13 அணிகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளன.
- ஆனால் எல்லா அணிகளுக்கும் சீனியர் அணியாக இங்கிலாந்து உள்ளது. இதுவரை 1022 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 லட்சம் ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
- அதற்கடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 830 போட்டிகளிலும் மூன்றாவது இடத்தில் இந்தியா 520 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.