ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி தேவையில்லை: மத்திய அரசு
- தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் வேதாந்தா நிறுவனம், ஓஎன்ஜிசி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் முறையாக ஒப்பந்தம் போட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
- கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 500 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
- ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது வழக்கம்.
- இந்த வழக்கத்தில் தற்போது மத்திய அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. அதாவது சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
- இதன்படி ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் கிடையாது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்கள் நடத்தவும் அவசியமில்லை.
- ஏற்கெனவே டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒப்பந்ததாரர்கள் எளிமையான முறையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சில விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்த நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேரு அருங்காட்சியக நியமனம் நிறைவு
- டில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கரண் சிங் ஆகியோர் கடந்தாண்டு நீக்கப்பட்டனர்.
- இதற்கான அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, துணைத் தலைவராக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பல்வேறு பதவிகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- இந்நிலையில், இந்த அமைப்பின் செயல் குழுவின் தலைவராக, பிரதமரின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அனைத்து பதவிகளுக்கும் நியமனம் முடிவடைந்துள்ளது.
இலங்கை பாதுகாப்புக்கு இந்தியா ரூ.350 கோடி
- கொழும்புவில், இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுடன், இருநாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இந்தியா சார்பில், 350கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இரு நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன், தேசிய பாதுகாப்பு, உளவுத் துறை தகவல் பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தினார்.
- இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் ஆயுதப்படை, கடலோர காவல்படைக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
உலக பொருளாதார மாநாடு டாவோசில் துவக்கம்
- சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், ஜன.,20 துவக்கவுள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
- நம் நாட்டைச் சேர்ந்த, பல்வேறு நிறுவனங்களின், தலைமை நிர்வாக அதிகாரிகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரம், சுற்றுலாவுக்கு பெயர்பெற்றது.
- இங்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பொருளாதார மாநாடு நடப்பது வழக்கம்.இதன்படி, இந்தாண்டுக்கான மாநாடு, இன்று துவங்குகிறது.
- இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
- இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஜெர்மன் அதிபர் மெர்கல், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி, பாக்., பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
- பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, மனநிலை ஆரோக்கியம் தொடர்பாக பேசவுள்ளார்.சத்குருவின் தியான நிகழ்ச்சியும் இதில் நடக்கவுள்ளது.
- கவுதம் அடானி, சஞ்சீவ் பஜாஜ், குமார் மங்கலம் பிர்லா, ராஜன் மிட்டல், பவன் முஞ்சால், என்.சந்திரசேகரன் உள்ளிட்ட, நம் நாட்டைச் சேர்ந்த, முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள், 100 பேரும், இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி
- அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
- விராட் கோலி 82 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்தார். மகேந்திர சிங் தோனி 127 இன்னிங்ஸ்; ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி கேப்டன் 131 இன்னிங்சில் கடந்தார்.
ரோம் சா்வதேச மல்யுத்தம்: பஜ்ரங் புனியா, ரவிக்குமாருக்கு தங்கம்
- இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை இரவு ஆடவா் 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் ஜோா்டான் மைக்கேலை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா் புனியா.
- வழக்கமான 57 கிலோ எடைப்பிரிவுக்கு பதிலாக 61 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய ரவிக்குமாா் 12-2 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் நுருபலோட்டை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.எனினும் 74 கிலோ பிரிவில் ஜிதேந்தரும், 86 கிலோ பிரிவில் தீபக் புனியாவும் தோல்வியுற்று வெளியேறினா்.
இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்று சாதனை
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.
- இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
- இதனை அடுத்து இந்த போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.