தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக இந்தியா வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது.
- மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னும் இரு தினங்களில் அறிமுகம் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- இதனிடையே மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.
- வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதியுடன் இட ஒதுக்கீடு காலாவதியாகும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என அமைச்சரவையில் முடிவாகியுள்ளது.
3 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து
- திருப்பதி மற்றும் டெல்லியில் இயங்கி வரும் 3 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு மத்திய பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 1961-ம் ஆண்டு ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் சார்பில் திருப்பதியில் சமஸ்கிருத பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் 1962-ல் லால் பகதூர் சாஸ்த்ரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம், 1972-ல் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தன் ஆகியவை சார்பில் சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
டில்லி முழுவதும் இலவச வைபை
- டில்லியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67ல் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆனார். அப்போது, வாக்குறுதியாக டில்லி முழுவதும் இலவச இணைய சேவை வழங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.
- அதன் முதற்கட்டமாக வரும் டிச.,16ம் தேதி 100 'வைபை' ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் 11,000 ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார்.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 7000 ஹாட்ஸ்பாட்களும், பேருந்து நிறுத்தங்களில் 4000 ஹாட்ஸ்பாட்களும் நிறுவப்படுகிறது. இதன்மூலம் மக்கள் இலவச இணைய சேவையை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
- இதன்மூலம் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு 15 ஜிபி பயன்படுத்த முடியும். இணைய வேகம் சராசரியாக வினாடிக்கு 100 முதல் 150 எம்பி., வரையும், சில இடங்களில் 200 எம்பி., அளவிலும் இருக்கும்.
- ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டையும் 150 பேர் வரையில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி செலவாகும்.
2018ல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - இந்தியா 5-வது இடம்
- ஜெர்மனியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நாடுகள் சந்திக்கும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள், உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
- அந்த ஆய்வு நிறுவனம் 2018ல் அதிக பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பான். தொடர்ந்து பல்வேறு புயல்களையும், எரிமலை வெடிப்புகளையும் சந்தித்து வரும் தேசமான ஜப்பான் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
- இரண்டாவது இடத்தில் பிலிப்பைன்ஸும், மூன்றாவது இடத்தில் ஜெர்மனியும், நான்காவது இடத்தில் மடகாஸ்கர் தீவும் உள்ளது. இதையடுத்து ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் கேரள வெள்ளம், கஜா புயல் போன்ற பெரும் இயற்கை பேரிடர்களை இந்தியா சந்தித்துள்ளது.
- கடந்த 2017ம் ஆண்டில் இந்த பட்டியலில் 14வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பருவநிலை மாற்றத்தால் தீவிரமாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமான ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.
இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி அரசுடன், டி.வி.எஸ்., கைகோர்ப்பு
- தமிழகத்தில், இளைஞர்களின் திறன் அளவுகளை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சிலுடன், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுஷன்ஸ் இணைந்துள்ளது.
- இதில், இளைஞர்கள் உடனடியாக வேலைக்கு செல்லும் வகையில், அவர்களின் திறன் அளவுகளை உயர்த்துவதற்கான பணியை, டி.வி.எஸ்., மேற்கொள்கிறது.லாஜிஸ்டிக்ஸ் துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து, 1,600க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டுக்குள், 10 ஆயிரம் பேருக்கு, திறன் அளவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், 6,500 திறன் பயிற்சி பெற்றோர், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுஷன்ஸ் வாயிலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவில் அர்ச்சனா இரண்டாவது தங்கம்
- நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 200 மீ., ஓட்டம் நடந்தது. தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன், 23.66 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.
- ஆண்கள் 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சுரேஷ் குமார், 29 நிமிடம் 33.61 வினாடயில் வந்து தங்கப்பதக்கம் வென்றார்.
- கோ-கோ போட்டியில் இந்திய ஆண்கள் அணி 16-9 என வங்கதேசத்தை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. பெண்கள் அணி 17-5 என நேபாளத்தை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வசப்படுத்தியது.
- கபடி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, இலங்கையை சந்தித்தது. இதில் இந்தியா 53-14 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
- 'டிரையாத்லான்' கலப்பு 'ரிலே' போட்டியில் இந்தியாவின் பிரஞ்யா மோகன், ஆதர்ஷ், சரோஜினி, பிஷ்வர்ஜித் அடங்கிய அணி, 1 மணி நேரம், 35:20 நிமிட நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் வென்றது.
- பெண்கள் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர், 49.87 மீ., துாரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார்.
- ஆண்கள் வட்டு எறிதலில் இந்தியாவின் கிர்பால் 57.88 மீ., துாரம் எறிந்து, தெற்காசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின் ககன்தீப்பிற்கு (53.57 மீ.,) வெள்ளி பதக்கம் கிடைத்தது.
- ஆண்கள் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் லோகேஷ் 7.87 மீ., தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். சுவாமிநாதன் 7.77 மீ., தாண்டி வெள்ளி வென்றார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் சந்திரா பாபு, 6.02 மீ., துாரம் தாண்டி, வெண்கலம் வசப்படுத்தினார்.
- துப்பாக்கிசுடுதலில் 25 மீ., பிஸ்டல் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் அன்னுராஜ் சிங், கவுரி ஷெரோன் அடங்கிய அணி தங்கம் வென்றது. தவிர தனிநபர் போட்டியில் அன்னு ராஜ் தங்கம், கவுரி வெள்ளி வென்றனர்.
- தெற்காசிய விளையாட்டு பதக்க பட்டியலில் இந்தியா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. இதுவரை 34 தங்கம், 23 வெள்ளி, 13 வெண்கலம் என 70 பதக்கங்கள் வென்றுள்ளது. நேபாளம் 69 பதக்கங்களுடன் (29 தங்கம், 15 வெள்ளி, 25 வெண்கலம்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
- பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிறில் வர்மா, ஆர்யமான், பெண்கள் ஒற்றையரில் கோபிசந்த் மகள் காயத்திரி, அஷ்மிதா மற்றும் பெண்கள் இரட்டையரில் இரண்டு இந்திய ஜோடி உட்பட மொத்தம் 8 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர். இதனால் குறைந்தபட்சம் 8 பதக்கம் உறுதியானது.
ஐசிசி டெஸ்ட்' தரவரிசையில் முதலிடம் பிடித்த விராட் கோலி
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள பேட்ஸ் மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
- சமீபத்தில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, 136 ரன்கள் எடுத்தார். அதனால், அவர் டெஸ்ஸ் தரவரிசையில் 928 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார்.
- ஏற்கனெவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.