நெல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டு வாமனக்கல்
- பழங்காலங்களில் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. பெருமாள் கோயில்களுக்கு, தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க வாமனம் உருவம் பொறிக்கப்பட்ட கல் நடப்படுவது வழக்கம்.
- நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்க இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளதாக சமய அறிஞர்கள் கருதுகின்றனர்.
- இந்தநிலையில், நெல்லையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டாம்புளி என்னும் கிராமத்தில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
- அந்தக் கிராமத்தில், தமிழக அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரும் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்றன. குளத்தின் மடைகள், மதகுகள் புதிதாகக் கட்டப்பட்டதுடன், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளும் நடந்தன.
டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்குஸ்காட்ச் விருது
- தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி-யாக இருக்கும் பிரதீப் வி.பிலிப், 'காவல்துறை நண்பா்கள் இயக்கம்', பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் உருவாக்கப்பட்ட 'உங்கள் குற்றவாளியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்' கருத்தாக்கம் ஆகிய இரு திட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஸ்காட்ச் விருதுக்கு விண்ணப்பித்திருந்தாா்.
- இந்நிலையில், காவல்துறை நண்பா்கள் இயக்கம் மூலம் சமுதாய காவல் என்ற பிரிவின் கீழ் ஒரு ஸ்காட்ச் விருதும், 'உங்கள் குற்றவாளியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்' கருத்தாக்கம் மூலம் சிறந்தக் காவல் பணி என்ற பிரிவில் மற்றொரு ஸ்காட்ச் விருதும், பிரதீப் வ.பிலிப்புக்கு கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது
- மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, 2014-ஆம் ஆண்டு முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது.
- 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, இந்திய அளவில், 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என்ற நெசவாளியும் ஒருவர்.
- திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினரான இவர், தமிழகத்தில் இருந்து இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள ஒரே பெண் நெசவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோர்வை ரக பட்டுச்சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி அமைதி விருது: புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ தேர்வு
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்கு இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான தேர்வுக்குழு அவரை தேர்ந்தெடுத்துள்ளது. அட்டன்பரோ 50 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகள் பற்றிய வாழ்வியல் முறைகள், அவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக படம்பிடித்து ஆவணமாக்கி இருக்கிறார்.
- 100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள், ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். பிபிசி தொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய ஆவணப்படங்கள் பலரால் பாராட்டப்பட்டவை. யுனெஸ்கோ விருது, எம்மி, பாப்டா என பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.
- விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு பாராட்டு சான்றிதழுடன் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மகாத்மா காந்தியின் வரலாற்றை காந்தி என்ற பெயரில் எடுத்து புகழ்பெற்ற ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் டேவிட் அட்டன்பரோ என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது
- உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
- இது இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (DCGI) ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீண்டும் ஒரு சாதனை
- பங்குச் சந்தைகளில், இந்நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தொட்ட, முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
- வர்த்தக முடிவில், இந்நிறுவனத்தின் பங்கு விலை, 3.52 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 1,509.80 ரூபாயாக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, 1,514.95 ரூபாய் என்ற நிலையை தொட்டது.
- இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 32 ஆயிரத்து, 525 கோடி ரூபாய் அதிகரித்து, 9.57 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
- கடந்த மாதம் இந்நிறுவனம், 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது.
- அதேபோல், 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இந்நிறுவனம்தான், 2018ல் முதலில் தொட்டது.இந்நிறுவனத்தின் பங்குகள், இந்த ஆண்டில் இதுவரை, 34 சதவீதம் அளவுக்கு லாபமீட்டியுள்ளன.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, இரண்டாவது இடத்தில், டி.சி.எஸ்., நிறுவனமும், மூன்றாவது இடத்தில், எச்.டி.எப்.சி., வங்கி நிறுவனமும் உள்ளன.