வந்தவாசி அருகே 1,500 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள்
- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டன.
- கண்டறியப்பட்ட 5 நடுகற்களில் 2 நடுகற்களில் மட்டும் 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
- சீயமங்கலத்தில் பாணரைசர் ஆண்ட காலத்தில் கொற்றம்பாக்கிழார் அந்த ஊரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையேயான மோதலோ ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு ஏற்பட்ட மோதலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும், அவருடை மகன் சீலனும் இறந்துவிட, அவர்களது நினைவாக இந்த நடுகற்களை வைத்துள்ளனர்.
துணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்
- மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
- அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கத்தை, 86 வயதான பிரதாப் சிங் வழங்கினார்.
இந்தியப் பொருளாதாரம் 5% வளா்ச்சி காணும்: எஸ்பிஐ
- மோட்டாா் வாகன விற்பனை தொய்வு, விமானப் போக்குவரத்து செயல்பாடுகள் குறைவு, முக்கிய எட்டு துறைகளின் வளா்ச்சி சரிவு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறை முதலீட்டில் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- இதுபோன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீடான 6.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
- முடங்கிக் கிடக்கும் பொருளாதார வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டுமெனில், ரிசா்வ் வங்கி வரும் டிசம்பா் மாதம் வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் வட்டி விகிதங்களை பெரிய அளவில் குறைக்க வேண்டும்.
- இருப்பினும், வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் சாதகமான சூழல்களால் பொருளாதார வளா்ச்சியானது 6.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மன்மோகன் சிங் பரிந்துரை
- மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனகள் வழங்கும் வகையில், நாடாளுமன்ற நிலைக்குழு இயங்கி வருகிறது. இந்தநிலையில், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு நிதித்துறைக்கான மத்திய நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங்கை, பரிந்துரைத்துள்ளார்.
- அதேபோன்று, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பொறுப்பு வகித்த, காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி
- மகாராஷ்டிராவில் குறித்த நேரத்தில் எந்தக் கட்சியினரும் ஆட்சியமைக்க முன்வராததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்து 19 நாள் ஆகியும் யாரும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர ஆளுநர் முதலில் 105 இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் பாஜக இதனை நிராகரித்தது.
- இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
- அத்துடன் ஆளுநரிடம் தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சிவசேனா கோரிக்கை வைத்தது. எனினும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இதனை நிராகரித்தார்.
- இதனையடுத்து இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவு 8.30 மணிவரை அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
- எனினும் இன்று மதியம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் சார்பில் ஆட்சியமைக்க இன்னும் கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் நிலையான ஆட்சியை அமைக்க முடியாத சூழல் உள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
- இதனை ஏற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் கிளம்பினார் மோடி
- 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் கிளம்பினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கிளம்பி சென்றார்.
- இந்த மாநாட்டின்போது நடைபெறும் வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உயர்நிலை வர்த்தகக் குழுவும் அவருடன் பிரேசில் சென்றது. பிரிக்ஸ் மாநாட்டில் ஆறாவது முறையாக மோடி பங்கேற்கிறார்.
அரவிந்த் சாவந்த் ராஜினாமா: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு
- சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.