கோவையில் ரூ.168 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: தமிழக அரசு
- கோவை மாவட்டம் வெள்ளலூரில் 168 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு: அக்.9-இல் ஆளுநா் தொடங்கி வைக்கிறாா்
- மத்திய புள்ளியியல் துறை சாா்பில் நடைபெறும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பினை வரும் 9-ஆம் தேதி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளாா்.
- இந்தக் கணக்கெடுப்பு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி சரிபாா்த்து வெளியிடவுள்ளது.
- 1977 தொடங்கி 2013 வரை பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆறு முறை நடந்துள்ள நிலையில், 7-ஆவது கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது.
- இதில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, இவற்றில் நகா்ப்புறத்தில் உள்ளவை, ஊரகப் பகுதிகளில் உள்ளவை, வேலைவாய்ப்பு உருவாக்க நிலைமை போன்ற தகவல்கள் திரட்டப்படும்.
சென்னையில் வங்கதேச துணை தூதரகம்
- சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்.
- இவர் பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினருடன் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.இந்த கூட்டத்தில் இருநாட்டு உறவு மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டன.
- அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு, கடலோர பாதுகாப்பு பலப்படுத்துதல், வங்கதேசத்தில் கடலோரா கண்காணிப்பு கோபுரம் அமைத்தல், வங்கதேசத்தின் வழியாக வட மாநிலங்களுக்கு எல்.பி.ஜி., காஸ் விநியோக பாதை அமைத்தல் , வங்கதேசம் இந்தியா இடையிலான ரயில் போக்குவரத்தை அதிகரிப்பது, இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான சட்ட சிக்கல்களை எளிமைப்படுத்துதல், சென்னையில் வங்கதேசத்தின் துணை தூதரகம் அமைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டன.
- தொடர்ந்து இரு பிரதமர்கள் முன்னிலையில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- மேலும் வரும் 2020 ல் பிரதமர் மோடி வங்கதேசம் செல்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
வங்கதேசத்தில் இருந்து இந்திய மாநிலங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டம் தொடக்கம்
- வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
- பின்னர், 3 முக்கியத் திட்டங்களை மோடியும், ஷேக் ஹசீனாவும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். அதில் ஒன்று ஒமெரா பெட்ரோலியம் மற்றும் பெக்சிம்கோ எல்.பி.ஜி. நிறுவனத்திடம் இருந்து திரவ பெட்ரோலிய எரிவாயுவைப் பெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்யும் திட்டமாகும்.
தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்
- தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்து வைத்தார். தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தங்க ஆபரணங்களுக்கு கட்டாய ஹால்மாா்க்: வா்த்தக அமைச்சகம் ஒப்புதல்
- தங்க ஆபரணங்களுக்கு கட்டாய பிஐஎஸ் ஹால்மாா்க்கை வழங்கும் திட்டத்துக்கு மத்திய வா்த்தக அமைச்சகம் அக்டோபா் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
- உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) சா்வதேச வணிக விதிகளின்படி, அதில் உறுப்பினராக உள்ள நாடு தரக்கட்டுப்பாட்டு அறிவிக்கை குறித்து அந்த அமைப்புக்கு தெரிவிப்பதுடன், அதற்கு பதிலளிக்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை.
- மேலும், தங்கத்துக்காக குறிப்பிடப்பட்டுள்ள பிஐஎஸ் தர விதிமுறைகளை ஏற்றுமதி நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.கடந்த 1995-லிருந்து டபிள்யூடிஓ-வில் உள்ள 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் பங்கு வகிக்கிறது.
- ஆபரண துறையின் தேவையை ஈடு செய்ய இந்தியா அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது.அதன்படி அளவின் அடிப்படையில், ஆண்டுக்கு 700-800 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: இரண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது இலங்கை
- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மாவை கவுரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகள் காந்தியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டு உள்ளது.
- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் கடந்த 02.10.2018 தேதி முதல் 02.10.2019 தேதி உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது.
- காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர் 1948 ஆகஸ்டு 15ஆம் தேதி இந்திய அரசு காந்தியடிகளுக்கு முதன்முறையாக தபால் தலைகளை வெளியிட்டது. பின்னர் 1961ஆம் ஆண்டில், அமெரிக்கா முதல் அயல்நாடாக காந்தியடிகளுக்கு தபால்தலையை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது.
- அதைத்தொடர்ந்து ரஷ்யா, பிரேசில், சிரியா, கியூபா, வெனிசுவேலா, ஜிப்ரால்டர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் காந்தியடிகளுக்கு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளன. இந்த ஆண்டு, பாலஸ்தீனம், துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளன.
- இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அலரி மாளிகை யில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையின் அஞ்சல் துறை சார்பாக ரூ.45 மற்றும் ரூ.100 (இலங்கை ரூபாய்) மதிப்பில் இரண்டு சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டார்.
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 5-ம் இடம்
- அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு (American Community Survey) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்கள், சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களில் 21.8 சதவீதம் பேர் அவர்களது வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து பிறமொழி பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
- அதிலும், அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி முதல் இடத்தையும், தமிழ் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
- அதாவது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும். இந்த எண்ணிக்கை 1990ம் ஆண்டை விட இருமடங்காகவும், 1980ம் ஆண்டை விட மும்மடங்காகவும் அதிகரித்துள்ளது.
- 2010ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இந்த ஆய்வறிக்கை ஒப்பிட்டுகையில் 50 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இந்த எட்டு ஆண்டில் 80 ஆயிரம், இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்று குடியேறியுள்ளனர்.
- அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 8.63 லட்சம் பேர் பேசுவதாக குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தியை 4.34லட்சம் பேரும், தெலுங்கினை 4.15லட்சம் பேரும் பேசுகின்றனர்.
- இதையடுத்து பெங்காலியும் ஐந்தாவது இடத்தில் தமிழும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் 'குடியேறுதல் ஆய்வுகளுக்கான மையம்' 2010ம் ஆண்டு புள்ளி விவரங்களை 2017ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்துள்ளது.
- அதன்படி,கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது 2லட்சத்து 23 ஆயிரம் பேர் பெங்காலியையும், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் தமிழ் மொழியையும் பேசுகின்றனர்.
நைல் நதிக்கரையில் மண்ணுக்கு அடியில் புதைந்து போன பழமையான கோவில் கண்டுபிடிப்பு
- எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்து போன 2 ஆயிரத்து 200 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
- கி.மு. 221-ம் ஆண்டு தாய் இறந்ததை அடுத்து எகிப்து அரசரான 4-ஆம் தாலமி அரியணையில் அமர்ந்தாலும் தன்னை ஒரு அரசராகக் கருதியதை விட கலைஞராகவே அதிக திறமைகளை வெளிப்படுத்தினார். அவருடைய நிர்வாகத் திறன் குறைவால் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கோயலெ- சிரியா பகுதிகளை இழந்தார்.
- இதையடுத்து மக்கள் மன்னர் மீது ஆவேசம் கொண்டு போராட்டங்களை நடத்தி பல்வேறு சச்சரவுகள் ஏற்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் கி.மு. 204-ல் பதவி இழந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.
- ஆட்சி நிர்வாகத்தை விட கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எகிப்து மன்னர் 4-ஆம் தாலமிக்கு கட்டப்பட்ட கோவில் எகிப்தின் நைல் நதிக்கரையின் மேற்கு கரைப்பகுதியில் தற்போதுள்ள டாமா என்ற நகரில் கண்டறியப்பட்டுள்ளது.
- நான்கு திசைகளிலும் கோவிலின் மதில் சுவர்கள், மன்னரின் புகழ்போற்றும் சிற்பங்கள், அதைச்சுற்றி பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ளன. கட்டிடம் கட்டுவதற்கு ட்ரில்லிங் செய்தபோது கிடைத்த இந்த கோவிலின் சிதைந்த கட்டிடங்களை கடந்த மாதம் 30-ம் தேதி அகழ்வாய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.
- மன்னருக்கென மிகப்பெரிய கப்பல் இருந்தது, அதன் மூலம் வாணிபம் செய்தது, மன்னரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்த தொல்லியல் ஆய்வு பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, கிரீஸ் இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- கிரீஸூக்கு சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஏதென்ஸில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் முடிவில் அமெரிக்கா, கிரீஸ் நாடுகள் இடையே திருத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீஸ் நாட்டின் Crete பகுதியிலுள்ள Souda விரிகுடாவை தனது கடற்படை, விமானப்படைக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும்.
- ஆப்கானிஸ்தான் மற்றும் கோசாவோவில் நேட்டோ நடவடிக்கைகளில் கிரீஸ் பங்குபெறும். பொருளாதாரம், வர்த்தகம், கலாசார விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவும், கிரீஸும் ஒப்புக் கொண்டன.
ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை படைத்த ரோகித் சர்மா
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி வீரர் ரோகித், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற புதிய பெருமையையும் பெற்றுள்ளார்.
- இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் முறையே 6 மற்றும் 7 சிக்சர்கள், அதாவது ஒட்டுமொத்தமாக 13 சிக்சர்களை அடித்து இந்திய அணி வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
- பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 1996இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 12 சிக்சர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
- குறிப்பாக இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ரோகித் சர்மா எடுத்துள்ள 303 ரன்களே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
- அது மட்டுமின்றி, சுனில் கவாஸ்கருக்கு பிறகு, ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதன் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.