தமிழ்நாட்டில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை : லண்டனில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் லண்டனில் வியாழக்கிழமை கையெழுத்தாகின.
- அதன்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாடுகளைக் கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கும், சர்வதேச திறன்கள் மேம்பாட்டுக் கழக நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை, இந்தியாவில் சிறப்பான சேவைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் இப்போது 942 ஆம்புலன்ஸ் வசதிகள், நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்து 300 அவசர விபத்து சேவைகளைக் கையாளுகின்றன.
- இந்த 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.
- விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை மேலும் குறைத்திட வசதியாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்றார். லண்டனில் ஆம்புலன்ஸ் இயக்கம் பற்றியும், விபத்துகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க பயன்படுத்தும் உதவி மையத்தின் இயக்கம் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.
- நோக்க அறிக்கை கையெழுத்து: தொற்று மற்றும் தொற்றாத நோய்களைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
- ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் ஏற்படும் தொற்று நோய்களின் நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தை மேலும் செம்மையாகச் செயல்படுத்த லண்டனின் பழைமை வாய்ந்த ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் தமிழக அரசு நோக்க அறிக்கையில் கையெழுத்திட்டது.
- லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளைகளை நிறுவிட தமிழக அரசுக்கும், கிங்ஸ் மருத்துவமனைக்கும் இடையே முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை சிப்பெட்டில் ரூ.88.25 கோடியில் தொழில்நுட்ப மையம்: மத்திய அமைச்சர் சதானந்த கௌடா தகவல்
- சென்னை கிண்டியில் உள்ள திருவிக தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் சிப்பெட்டில் ரூ. 23.70 கோடி மதிப்பில் 950 மாணவர்கள் தங்கும் வகையில் 191 அறைகளுடன் கூடிய விடுதி கட்டப்பட்டுள்ளது.
- இந்த விடுதியை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா வியாழக்கிழமை திறந்து வைத்துப் பேசியது:
- நாட்டில் உள்ள 25 சிப்பெட் நிலையத்தில் பயின்று வரும் 6,298 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 256.66 கோடி மதிப்பில் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. உலக அளவில் 4 சதவீத நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் தேவையை இந்தியா உற்பத்தி செய்கிறது.
- நெகிழி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் நெகிழி பொருள்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ரூ. 87 கோடி மதிப்பில் கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
- மேலும், சென்னை கிண்டி சிப்பெட்டில் ரூ.88.25 கோடி மதிப்பில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்றார்.
அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் டில்லி அமைச்சரவை ஒப்புதல்
- டில்லியில் அக்டோபர் 29 முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
- இத்திட்டத்துக்கு டில்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டில்லி அரசு பெண் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயணப்படியை திருப்பி கொடுத்துவிட்டு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் மருத்துவமனை ரயில்: மும்பையில் இயக்கம்
- உலகின் அனைத்து வசதிகளும் கொண்ட முதல் மருத்துவமனை ரயில் நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் மைல்கல் என்று கூறப்படும் இந்த ரயிலில் ஏழு கோச்கள் உள்ளன.
- கிராமப்புற மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்துவித மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை ரயிலில் அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்பட ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.
- ஃலைப்லைன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த ரயிலில் இரண்டு ஆபரேசன் தியேட்டர், ஐந்து ஆபரேஷன் டேபிள் உள்பட உலகின் மிக நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இந்த ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் நோயிற்கு சிகிச்சை பெறு கொள்ளலாம்.
- கண் பார்வை, காது கோளாறு, பல் சிகிச்சை உள்பட அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று கொள்ளலாம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நிற்கும்போது சுமார் 8000 பேர் வரை சிகிச்சை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும் மார்பக புற்றுநோய் சோதனை, சர்க்கரை நோய் சோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, புற்றுநோய் உள்பட அனைத்து வகை நோய்களுக்கும் இந்த ரயிலில் சிகிச்சை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகளவு இதேபோன்று மருத்துவமனை ரயில்கள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது
உடல்நலத்தைப் பேணும் 'ஃபிட் இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றது முதல் நாடு மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
- ஏற்கனவே நாட்டின் தூய்மையை வலியுறுத்தி துாய்மை இந்தியா திட்டமும், யோகாவை பிரபலப்படுத்தும் நோக்கில் யோகா தினம், மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா என பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- அதே வகையில் தற்போது, ஃபிட் இந்தியா என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இதன்படி, ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தும் வகையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
- இன்று ஃபிட் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி, முன்னதாக நாடு முழுவதும் உள்ள கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெண்டர் மூலமே முட்டை கொள்முதல் ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
- மாநில அளவில் டெண்டர் கோரப்பட்ட கொள்கையை மாற்றி, மண்டல அளவில் டெண்டர் கோருவது என 2018 ஆகஸ்ட் 20-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
- இந்த அரசாணையின் அடிப்படையில், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. அதில் வெளிமாநில கோழி பண்ணைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யும் திறனும், டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முட்டைகளில் 60 சதவீதம் சப்ளை செய்யும் தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தமிழக அரசு நிபந்தனை விதித்தது.
- இதை எதிர்த்து கோழி பண்ணைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரையும், அரசாணையையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
- இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மண்டல அளவில் முட்டை கொள்முதல் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், பழைய முறைப்படி, மாநில அளவில் டெண்டர் கோருவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
- இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய டெண்டர் கோரும் வரை, தற்போது முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், அதே விலைக்கு தொடர்ந்து சப்ளை செய்ய அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்
- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் ஐநாவில் எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவும் காஷ்மீர் எங்களது உள்நாட்டு விவகாரம் அதில் தலையிட வேண்டாம் என கூறிவருகிறது.
- இத்தகைய சூழலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் காஸ்நவி ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் 290 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடியது.
- முன்னதாக, கராச்சி விமான தளத்தின் மூன்று ஓடுபாதைகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடுவதாக பாகிஸ்தான் நேற்று தெரிவித்திருந்தது.
- அப்போதே, பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதனையடுத்து, நள்ளிரவில் பாகிஸ்தான் இந்த ஏவுகணை சோதனையை செய்து முடித்தது.