சு.வெங்கடேசன் எம்.பி.க்கு இயற்றமிழ் வித்தகர் விருது
- நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், 2019-ஆம் ஆண்டுக்கான இயற்றமிழ் வித்தகர் விருதுக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- காவல் கோட்டம், வேள்பாரி ஆகிய தமிழ் காவியங்களை எழுதியவரும், மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் இயற்றமிழ் வித்தகர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
- சென்னையில் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் தலைவர் வைகோ, இந்த விருதை அவருக்கு வழங்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான சிறந்த நகரங்களில உலகளவில் சென்னைக்கு 115வது இடம்
- புகழ்பெற்ற கியூ எஸ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் உலக அளவில் 140 நகரங்கள் இடம் பெற்றன. ஒரு நகரில் உள்ள உயர்தர கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை, நகர மக்கள் தொகையில் மாணவர்களின் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்பு, எளிமையான கட்டண முறை, மாணவர்களின் கருத்து ஆகியவற்றைக் கொண்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி ஐரோப்பிய நகரங்களே பெரும்பாலும் முன்னணி வகிக்கின்றன. லண்டன் 2வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. லண்டனில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. டோக்கியோ, மெல்பர்ன் ஆகியவை 2 மற்றும் 3ம் இடங்களைப் பிடித்துள்ளன.
- இந்திய நகரங்களைப் பொறுத்தவரை பெங்களூரு 81வது இடத்திலும், மும்பை 85வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி 113வது இடத்திலும், சென்னை 115வது இடத்திலும் உள்ளன.
டில்லி மக்களுக்கு மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
- டில்லியில் தற்போது 49 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 35% பேர் மாதந்தோறும் 200 யூனிட்டுகளுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். குளிர் காலங்களில் சுமார் 70% மக்கள் 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இன்று டில்லி அரசு புதிய மின்கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது.
- அது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'டில்லி மக்களுக்கு இனி மாதந்தோறும் இலவசமாக 200 யூனிட்டுகள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
- எனவே 200 யூனிட் வரை உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதைப் போல் 201 முதல் 400 யூனிட்டுகள் வரை உபயோகிப்போர் அளிக்கும் மின் கட்டணத்தில் 50% அரசு மானியமாக வழங்க உள்ளது.
- முந்தைய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் மக்களுக்கு ரூ.928 மின் கட்டணம் விதித்து இருந்தது. இந்த ஆட்சி வந்த பிறகு நேற்று வரை மக்கள் ரூ.622 செலுத்தி வந்தனர். தற்போது இந்த கட்டணம் முழுவதுமாக குறைக்கப்பட்டுள்ளது.
திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
- திவால் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவிலும் நேற்று நிறைவேறியது.கடந்த, 28ல், திவால் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
- லோக்சபாவில், திவால் சட்டத்திருத்த மசோதாவை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், ''கடனை செலுத்த தவறிய நிறுவனங்களின் சொத்துகளை, ஏலம் விடுவதன் வாயிலாக, கிடைக்கும் வருமானத்தை, கடன் வழங்கியவர்களிடம் அளிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
- ''திவால் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளுக்கு, 330 நாட்களுக்குள் தீர்வு காணவும், மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
- மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, குரல் ஓட்டு மூலம் அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், மசோதா, சட்டமாக அமலாகும்.
POCSO சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
- குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
- பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 'போக்சோ' என அழைக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்தார்.
- அப்போது அவர் பேசியதாவது, "நமது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.
- மேலும் சிறார்களை வைத்து ஆபாசபடங்கள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த வகையான குற்றங்களை செய்பவர்களுக்கும், சிறார் ஆபாச படங்களை வைத்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது." என குறிப்பிட்டிருந்தார்.
- மசோதாவின் விதிகள் குறித்து விரிவாகக் கூறும் பட்சத்தில், பிரிவு 15-ன் கீழ், ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாசப் படத்தை சேமித்து வைத்துள்ளவர்களுக்கு ரூ .5,000 (முதல் சந்தர்ப்பத்தில்) அபராதம் விதிக்கப்படும்.
- இரண்டாவது சந்தர்ப்பத்தில், குழந்தை ஆபாசப் படங்களை பகிர / அனுப்பும் நோக்கத்துடன் புகார பெரும் பட்சத்தில் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் குழந்தைகள் சம்ப்தப்பட்ட ஆபாச படங்களை காட்சிப்படுத்தப்பட்டால், விநியோகிக்கப்படுதல் அல்லது பிரச்சாரம் செய்தல் பேன்ற குற்றங்களுக்கு தண்டனை சிறைவாசம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "இதுபோன்ற ஆபாச படங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால் 3 வருடங்களுக்கும் குறையாத சிறைத்தண்டனை அல்லது 5 வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம் எனவும், அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம், 'போக்சோ' திருத்த மசோதா நிறைவேறியது. கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
- ஏற்கனவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டதால், பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பாக பல மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்களுக்கிடையே தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில், பெரிய விவாதத்தை ஏற்படுத்திய மசோதாக்களில் ஒன்றான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவில் திருத்தம் செய்யபட்டு உள்ளதால், மீண்டும் என்.எம்.சி மசோதா மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பின் இது சட்டமாகும்.
ரிசர்வ் வங்கி பிராந்திய இயக்குநராக எஸ்.எம்.என். சுவாமி பொறுப்பேற்பு
- சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநராக (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) எஸ்.எம்.என். சுவாமி பொறுப்பேற்றுள்ளார்.
- இவர், ரூபாய் நோட்டு நிர்வாகம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைக் கண்காணிப்பது, மும்பை ரிசர்வ் வங்கி மைய அலுவலகத்தில் வங்கி கண்காணிப்பு போன்ற பல பிரிவுகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்.
சர்வதேச விண்வெளி மாநாடு: இஸ்ரோ போட்டி
- வரும், 2022ல், சர்வதேசவிண்வெளி அறிவியல் மாநாட்டை நடத்துவதற்கு, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆர்வம் காட்டியுள்ளது.
- ஒரு வாரத்துக்கு நடைபெறும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டை, ஐ.ஏ.எப்., எனப்படும், சர்வதேசவிண்வெளி அறிவியல் கூட்டமைப்பு நடத்துகிறது.
- இந்தமாநாட்டின் போது, பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்கள் பங்கேற்பர். தொழில் நுட்ப கருத்தரங்குகள், பயிற்சிகள், கலந்துரையாடல் என, பல்வேறு நிகழ்ச்சிகள், மாநாட்டின்போது நடத்தப்படும்.
- வரும், 2022ம்ஆண்டில், இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்து, அமெரிக்காவின் வாஷிங்டனில், 25ம்தேதி நடக்கும்கூட்டத்தில், முடிவு செய்யப்பட உள்ளது.
- இந்தமாநாட்டை நடத்துவதற்கு, இந்தமுறை மிகுந்தபோட்டி உள்ளது. இந்தியாவைதவிர, அஜர்பைஜான், சிங்கப்பூர், இத்தாலி, பிரேசில் நாடுகளும்விருப்பம்தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது மத்தியஸ்தர் குழு
- அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தரை நியமனம் செய்வது பரிசீலிக்க உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
- இதனையடுத்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் குழுவை நியமித்து கடந்த மார்ச் 8 தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், இந்தக் குழு, முதல் நிலை அறிக்கையை 4 வாரத்தில் அளிக்க வேண்டும். சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும். சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். ஊடகங்களுக்கோ அல்லது வெளியிலோ தகவலை கசியவிடக்கூடாது என மத்தியஸ்தம் குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
- இந்தநிலையில், இன்று மத்தியஸ்தம் குழு இறுதி அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச மன்றத்தில் சமர்ப்பித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இடைக்கால அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
- அயோத்தி சம்பந்தமான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டதால், நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குப் பின்னடைவு : உலக வங்கி அறிவிப்பு
- உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது. இதில் உலகில் உள்ள அனைத்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளின் கடந்த மூன்றாண்டு வளர்ச்சி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
- அதாவது இந்த கணக்கெடுப்பில் 2016, 17 மற்றும் 18 ஆம் ஆண்டு வளர்ச்சி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
- இந்த ஆய்வு முடிவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016ஆம் வருடம் 18.77 லட்சம் கோடி டாலராகவும், 17 ஆம் வருடம் 19.48 லட்சம் கோடி டாலராகவும் 18 ஆம் வருடம் 20.49 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா, மற்றும் மூன்றாம் இடத்தில் ஜப்பான் நாடுகள் உள்ளன.
- இந்த பட்டியலில் இந்தியா 7 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு முன் உள்ள இரு நாடுகளாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன. இந்த மூன்று நாடுகளின் பொருளாதார வளர்சி 3 லட்சம் கோடி டாலருக்குக் குறைவாக உள்ளது.
- கடந்த 2017 ஆம் வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக இருந்த போதிலும் இந்த வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வரும் 2025க்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக கேடட் மல்யுத்தம்: தங்கம் வென்றார் சோனம்
- பல்கேரியாவில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் பின்பின் ஸியாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே இந்திய அணி ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது.
மலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்பு
- மலேசியாவில் மன்னராட்சி முறை இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது. மலேசியாவில் பெர்லிஸ், கெடா (கடாரம்), பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பாகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய 9 மாநிலங்கள் உள்ளன.
- இந்த 9 மாநிலங்களுக்கும் மன்னர்கள் உள்ளனர். 9 மாநில மன்னர்களும் ஒன்றுகூடி சுழற்சி முறையில் தங்களுக்கான மாமன்னரை (அகாங்) தேர்வு செய்வது வழக்கம். இம் மாமன்னர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள்.
- இதன்படி 2016-ம் ஆண்டு கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகம்மது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே மாமன்னர் பதவியில் இருந்த ஐந்தாம் முகமது திடீரென கடந்த ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
- அவரது திடீர் பதவி விலகல் பெரும் சர்ச்சையானது. பின்னர்தான் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த மாமன்னருக்கும் ரஷ்யாவின் மாஜி அழகிக்கும் 2018-ல் காதல் உருவாகி திருமணத்தில் முடிந்தது அம்பலமானது.
- பதவி விலகிய மாமன்னருக்கு ஏற்கனவே 22 வயதில் ஒரு மனைவியும் 2 மாத ஆண் குழந்தையும் இருந்தது. ரஷ்யா அழகியை அவர் திருமணம் செய்ததால் கடந்த மாதம் இளம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாராம்.
- இதையடுத்தே புதிய மாமன்னரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. பாகாங் மாநிலத்தின் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் புதிய மாமன்னராக அதாவது மலேசியாவின் 16-வது அகாங்காக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
- புதிய மாமன்னரின் பதவியேற்பு நிகழ்ச்சி கோலாலம்பூரின் இஸ்தான் நெகாராவில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு நிகழ்வில் புருனே சுல்தான் ஹசனல் போல்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மாமன்னராக பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லா தங்கத்தினால் நெய்யப்பட்ட மஸ்காட் உடை அணிந்திருந்தார். பாரம்பரிய சடங்குகளுடன் அரியணை ஏறிய சுல்தான் அப்துல்லா, அரண்மனைக்கு வெளியே அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார்.