கர்நாடக அதிருப்தி MLA-கள் 3 பேர் தகுதி நீக்கம் சபாநயகர் அதிரடி
- கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.
- இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான ரானெ பென்னூர் தொகுதி எம்எல்ஏ சங்கர், கோகக் மற்றும் அதானி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் மகேஷ் குமுதஹாலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- 15-வது சட்டசபை கர்நாடகத்தில் கலைக்கப்படும் வரை, அவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
- கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'போக்சோ' நீதிமன்றம்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- பாலியல் கொடுமைகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி உதவியுடன், அனைத்து மாவட்டங்களிலும், பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று(ஜூலை 25) பிறப்பித்த உத்தரவு: குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
- இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'போக்சோ' பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பாக, ஒரு ஆண்டுக்கு, 100 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் எந்தெந்த மாவட்டங்களில் பதிவாகின்றனவோ, அந்த மாவட்டங்களில் எல்லாம், இந்த பிரத்யேக நீதிமன்றங்களை, மத்திய அரசின் நிதியின் கீழ் அமைக்க வேண்டும்.
- இந்த நீதிமன்றங்களை, 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும். வழக்குகளில் ஆஜராவதற்கு, சிறப்பு பயிற்சி பெற்ற வக்கீல்களை நியமிக்க வேண்டும்.இத்தகைய வழக்குகளில், தடயவியல் அறிக்கைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா
- கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவிற்கு ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகள் பதிவு ஆனதால் முத்தலாக் மசோதா வெற்றிகரமாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவின்படி முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்
- தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமை தகவல் ஆணையரின் ஊதியம் மற்றும் பதிவிக்காலத்தை நிர்ணயிக்க புதிய திருத்த சட்டத்தை வகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் சேவையில் 'டி.வி.எஸ்., மோட்டார்' முதலிடம்
- இருசக்கர வாகனப் பிரிவில், விற்பனைக்குப் பிறகான சேவையில், வாடிக்கையாளர்களுடைய திருப்தியை, அதிகம் பெற்றுள்ள நிறுவனங்களில், முதலிடத்தை, 'டி.வி.எஸ்., மோட்டார்' பிடித்துள்ளது. சந்தை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான, 'ஜெ.டி., பவர்' நிறுவனத்தின் அறிக்கையில், இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாடிக்கையாளர் திருப்தியில், 45 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், முதலிடத்தில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனமும், இரண்டாவது இடத்தில், 'ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா' நிறுவனமும் உள்ளன.
- மூன்றாவது இடத்தை, 'யமஹா' பிடித்துள்ளது. 'ஹீரோ மோட்டோகார்ப்' நான்காவது இடத்தையும், 'சுசூகி மோட்டார் சைக்கிள்' ஐந்தாவது இடத்தையும், 'பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு' ஆகியவை, முறையே, ஆறு மற்றும் ஏழாவது இடங்களையும் பிடித்துள்ளன.
புத்தாக்க பொருளாதார நாடுகள்; 52வது இடத்தில் இந்தியா
- உலகின், முதல் புத்தாக்க பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா, 52வது இடத்தில் உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின், தனிநபர் அறிவுசார் சொத்து அமைப்பு, 2019ம் ஆண்டிற்கான, உலகளாவிய புத்தாக்க பொருளாதார நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தை, சுவிட்சர்லாந்து நாடு பிடித்துள்ளது.
- 2011ல் இருந்து, அந்த நாடு, முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக ஸ்வீடன்; மூன்றாவதாக அமெரிக்கா; நான்காவதாக நெதர்லாந்து; ஐந்தாவதாக பிரிட்டனிலும் உள்ளன. மேலும், இஸ்ரேல், 10வது இடத்திலும், தென் கொரியா, 11வது இடத்திலும் உள்ளன.
- இந்தியா, 52வது இடத்தில் உள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளில், புதுமையான பொருளாதார வழிமுறைகளை பின்பற்றுவதில், இந்தியா முன்னோடியாக விளங்குகிறது என, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் புதிய விளம்பரதாரர்
- சீனாவின் புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான ஒப்போ கடந்த 2017 முதல் இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் விளம்பரதாரராக இருந்து வருகிறது.
- இந்த நிறுவனம் அணியின் விளம்பரதாரராகவும் ஐந்து வருடம் ஒப்பந்தத்தில் உள்ளது. இதற்காக ஒப்போ நிறுவனம் போட்ட 768 கோடி ரூபாய் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே ஒப்போ நிறுவனம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
- இதனால் வரும் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் வரை இந்திய கிரிக்கெட் அணி ஒப்போவின் சீருடையை அணிந்து விளையாட உள்ளது. இந்திய அணி சீருடைக்கு புதிய விளம்பரதாரராகக் கல்விச் செயலி நிறுவனமான பைஜுஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிறுவனம் பைஜு ரவிச்சந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.
- ஒப்போ நிறுவனம் தனது ஒப்பந்தத்தை பைஜு நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. ஒப்போ அளிக்கும் அதே விளம்பரக் கட்டணத்தை பைஜு அளிக்கும் என்பதால் இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எவ்வித இழப்பும் இருக்காது என கூறப்படுகிறது.