பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்த மோடி தீவிரம் 'ஜி - 20' நாடுகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
- ஜி - 20 நாடுகளின் கூட்டம், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின், ஒசாகா நகரில் நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் இந்தக் கூட்டம் நேற்று துவங்கியது. சந்திப்பு இதில், ஜி - 20 அமைப்பில் உள்ள, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- இந்த மாநாட்டுக்கு இடையே, உலகத் தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.இந்த மாநாட்டை நடத்தும், ஜப்பானின் பிரதமர், ஷின்சு அபேயை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
- அப்போது, இரு தரப்பு பிரச்னைகள் குறித்தும்,சர்வதேச பொருளாதாரம், பேரிடர் கால நிர்வாகம் உட்பட பல பிரச்னைகள் குறித்தும் விவாதித்தனர். 'வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் பொருளாதார குற்றவாளிகளை, உடனடியாக ஒப்படைப்பது தொடர்பாக, ஜி - 20 நாடுகள் விவாதிக்க வேண்டும்' என, மோடி வலியுறுத்தினார்.
- அவருடைய முயற்சியைப் பாராட்டிய, அபே, அதற்கு ஆதரவும் தெரிவித்தார்.இந்தியாவில், வங்கிக் கடன் உட்பட பல்வேறு பொருளாதார குற்றங்களை செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உட்பட பலரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், 'மோடியின் இந்த முயற்சியின் மூலம், நாடு கடத்தப்படுவது விரைவுப் படுத்தப்படும்' என, வெளியுறவு துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
- வரும் அக்டோபரில் நடக்கும், ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் என, மோடி தெரிவித்தார். வரவேற்க தயார்மேலும் இரு தரப்பு உறவை விவாதிக்க, விரைவில் இந்தியா வருகை தர உள்ள, அபேவை வரவேற்கத் தயாராக உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
ஏற்றுமதி கூட்டமைப்பின் புதிய தலைவர் சரத் குமார் சராஃப்
- எஃப்.ஐ.இ.ஓ. எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராக சரத் குமார் சராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படுவதுடன், நாட்டின் ஏற்றுமதியையும் ஊக்குவிக்க சரத் உதவிகரமாக இருப்பார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- டெக்னோகிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸின் (இந்தியா) நிறுவனரான சரத் குமார் சராஃப், எஃப்.ஐ.இ.ஓ. அமைப்பில் இருமுறை துணை தலைவராகவும், நான்கு முறை மண்டல தலைவராகவும் (மேற்கு மண்டலம்) இருந்துள்ளார்.
6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
- தமிழகத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார்.
- அதன்படி தலைநகர் சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முக சுந்தரம், வேலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள ராமன், சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள ரோகிணி, தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இசை பல்கலைகழக பதிவாளராக இருக்கும் சீதாலட்சுமி, தலைநகர் சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அதே போல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக உள்ள வினய், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநில தேர்தல் ஆணையராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் - மும்பை உயர்நீதிமன்றம்
- மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதத்திற்கு மேல் மராத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து மத்திய மாநில அரசுகள் அளித்து வரும் கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மற்றும் இதர மானிய சலுகைகள் கிடைக்குமாறு செய்யவேண்டும் எனக் கோரி பலமுறை, பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தியுள்ளனர்.
- அதனையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எம்.ஜி.கெய்க்வாட் தலைமையில் ஆணையம், மராத்தியர்கள் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின் தங்கிய சமூகம் என்று அறிக்கை சமர்ப்பித்தது.
- அந்த அறிக்கையில் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்கரே அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
- கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆணையத்தின் அறிக்கையின்படி செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இருப்பினும், ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி, இடஒதுக்கீடு 16-இல் இருந்து 12-13 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
- ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு ஹோமியோபதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் மத்திய ஹோமியோபதி கவுன்சிலை அமைக்க புதிய சட்டம் வகை செய்கிறது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை : உத்தரகாண்ட் அரசு
- உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில முக்கிய சட்ட திருத்த மசோதா ஒருமனதாக கையெழுத்தாகியுள்ளது.
- அந்த மசோதாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை தடை விதித்தும், கிராமப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகளையும் கட்டாயமாக்கியுள்ளது.
- சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மசோதாவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கியுள்ளது.
- அதுமட்டுமல்லாமல் கிராமப்புற தேர்தலில் போட்டியிட விரும்பும் எஸ்.சி / எஸ்.டி ஆண் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பில் தேர்ச்சியும், எஸ்.சி / எஸ்.டி பெண் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 5ஆம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
- கூடுதலாக சிறப்பம்சமாக இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள், கிராமப்புற தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும், புதிய சட்டத்தை அமல்படுத்திய 300 நாட்களுக்குப் பிறகு மூன்றாவது குழந்தை பெற்றிருந்தாலும் அவர்களும் போட்டியிட முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
- காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2 ஆவது ஆலைக்கான கட்டுமானப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
- சென்னைக்கு சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
- அதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் 2ஆவது ஆலை ரூ.1,250கோடியில் கட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக நரிந்தர் பத்ரா தேர்வு
- சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கமிட்டி கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானேவில் நடந்தது. இதில் புதிய உறுப்பினராக இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவருமான நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டனர்.
- தேசிய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராகவும் ஒரு சேர பதவி வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து இந்தியா கேப்டன் விராட் கோலி சாதனை
- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து இந்தியா கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு இந்திய தீவுகளுகளுடன் நடைபெற்று வரும் போட்டியில் இந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்தி உள்ளார்.
ஐ.சி.சி., தரவரிசை: இந்தியா 'நம்பர்-1'
- சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் இந்திய அணி, 123 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.
- இங்கிலாந்து அணி, 122 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வரும் 30ல் பர்மிங்காமில் நடக்கவுள்ள உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
- அடுத்த மூன்று இடங்களில் முறையே நியூசிலாந்து (114 புள்ளி), ஆஸ்திரேலியா (112), தென் ஆப்ரிக்கா (109) அணிகள் உள்ளன.